வாயு புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
இராவணன் இமயமலையில் பலகாலம் தவம் புரிந்தான். சிவன் வெளிப்படவில்லை. இன்னும் தெற்கே வந்து விருட்ச கந்தகம் என்னும் இடத்தில் தவம் புரிந்தான். அங்கும் வெளிப் படவில்லை. இன்னும் தெற்கே வந்து ஒரு பெரிய குழியைத் தோண்டி அதனுள் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்போதும் சிவன் வெளிப்படவில்லை. இது கண்ட இராவணன் உயிரோடு இருந்து பயனில்லை என்று நினைத்துப் பெரிய தீயை வளர்த்து தன் ஒவ்வொரு தலையாக அறுத்து அக்னியில் போட்டான். ஒரு தலை மிஞ்சி இருக்கும் பொழுது சிவன் தோன்றினார். "போதும் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “யாவரையும் வெல்லும் வலிமையையும், எரிந்துபோன ஒன்பது தலைகளும் வேண்டும்” என்று கேட்டான். சிவன் அப்படியே கொடுத்தார். குழி வெட்டிய இடத்தில் இருப்பவர்தான் ஒன்பதாவது ஜோதிர்லிங்கமாகிய வைத்தியலிங்கம்.
மிக்க மகிழ்ச்சியோடு இராவணன் இலங்கையில் இருக்கும்போது அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள், நாரதரை ஏதாவது வழி செய்யுமாறு வேண்டினர். உடனே நாரதர் இலங்கைக்குச் சென்று இராவணனைச் சந்தித்து “சிவனுடைய வரங்களுக்கு இவ்வளவு மதிப்புத் தர வேண்டாம். இவ்வரங்கள் உண்மையா என்று சோதிக்க ஒரு வழி உண்டு. சிவன் அமர்ந்திருக்கும் கைலை மலையை நீ தூக்கிப் பார்” என்று சொன்னார். இராவணன் அப்படிச் செய்ய, "உன்னை அழிக்க ஒரு மனிதன் தோன்றுவான்” என்று சிவன் சாபம் கொடுத்தார்.
10. நாகேச லிங்கம்
மேலைக் கடற்கரையில் தாருகன் என்ற அரக்கனும், அவன் மனைவியாகிய தாருகியும் வாழ்ந்து வந்தனர். பார்வதியிடத்தில் அவள் பெற்ற வரத்தினால் அவள் எங்கே சென்றாலும், ஒரு பெரிய காடு அவள் பின்னேயே செல்லும். இந்த வர பலத்தால் நல்லவர்கள் இருக்கும் இடம், வேள்விகள் நடக்கும் இடம் ஆகியவற்றிற்குத் தாருகி சென்று அந்த இடமெல்லாம் காடாக ஆக்கி அவர்களை அழித்து வந்தாள். இந்நிலையில் அச்சமடைந்த தேவர்கள் அவுர்வா என்ற முனிவரிடத்தில் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டினர். முனிவர், அரக்கர்கள் யாரிடம் போர் புரிந்தாலும் அழிந்து விடுவார்கள் என்று சாபமிட்டார். அரக்கர்கள் பயந்து கொண்டு அமைதியாக இருந்த பொழுது, தேவர்கள் அவர்களைத் தாக்கினர். அசுரர்களுக்கு தர்ம சங்கடம். தேவர்களுடன் போரிட்டால் அழிய நேரிடும். போரிடாவிட்டால் தேவர்கள் கை ஓங்கி விடும். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து தப்பிக்க சமுத்திரத்தில் சென்று வாழ அரக்கர்கள் ஓடினர். ஆனால் கடல் மூலம் பயணம் செய்யும் மக்களைத் துன்புறுத்தினர். ஒருமுறை கப்பலில் சென்ற வைசியனை இவர்கள் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அந்த சுப்ரியா என்ற வைசியன் சிவ வழிபாடு செய்யும் பழக்கமுள்ளவன். எனவே சிறைக்குள் இருந்தபடியே சிவ பூசை செய்தான். இதை அறிந்த அரக்கர்கள் அவன் பூசையைக் கெடுப்பதற்காக அவனைக் கொல்ல பல ஆயுதங்களைப் பயன்படுத்தினர். சிவன் தந்த பாசுபதத்தைக் கொண்டு சுப்ரியா என்ற வைசியன் அரக்கர்களை அழித்தான். வைசியன் வழிபட்ட லிங்கமே நாகேச லிங்கமாகப் போற்றப் படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 13 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், அரக்கர்கள், சென்று, தேவர்கள், இராவணன், வைசியன், அவள், பெரிய