மார்க்கண்டேய புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
அரிச்சந்திரனுக்கும், அவனுடைய பரம்பரையினருக்கும் குல குருவாக இருந்தவர் வசிட்டர் ஆவார். விஸ்வாமித்திரர், அரிச்சந்திரனுக்கு இவ்வளவு தொல்லைகள் தந்த பொழுது, குல குருவாகிய வசிட்டர் அரிச்சந்திரனுடன் இல்லை. நீருக்கடியில் நின்று பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்யப் போய்விட்டார். அந்த இடைக் காலத்தில்தான் அரிச்சந்திரனுக்கு இந்தச் சோதனைகள் ஏற்பட்டன. அனைத்தும் முடிந்து, அரிச்சந்திரன் சொர்க்கம் வந்த பிறகு தவத்தில் இருந்து மீண்ட வசிட்டர், நடந்தவற்றைக் கேள்விப்பட்டார். கடுஞ்சினம் கொண்டார். விஸ்வாமித்திரரை ஒரு பறவையாகப் போகட்டும் என்று சபித்தார். இதை அறிந்த விஸ்வாமித்திரர், வசிட்டரும் ஒரு பறவையாகப் போகட்டும் என்று எதிர் சாபம் கொடுத்தார். இரண்டு பேரும் மாபெரும் தவம் உடையவர்களாதலின் இருவர் சாபமும் பலித்தன. இருவரும் பறவையாயினர். மலை போன்ற உடல் படைத்த மிகப் பெரிய பறவைகளாக ஆயினர். பறவையான பிறகும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த கோபம் தணியவில்லை. இரண்டு பறவைகளும் ஓயாது ஆகாயத்தில் பெரும் போர் புரிந்தன. அப்போரின் விளைவாக பூமியில் உள்ள மலைகள் பிளந்தன. சில இடங்களில் பூமி வெடித்து நீரூற்று பெருகிற்று. இப்போரின் தேவையற்ற தன்மையையும், அதனால் பிற உயிர்கட்கு விளையும் தீமையையும் கண்டு அஞ்சிய பிற முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன் நேரே வந்து போரை நிறுத்துமாறு சொல்லியும், பயன் ஒன்றும் இல்லை. பிரம்மன் உடனே அவர்கள் இருவரையும் அவரவர் சுய வடிவிற்கு மாற்றிவிட்டார். மானிட வடிவு பெற்ற வசிட்டரும், விஸ்வாமித்திரரும் தங்கள் செயலுக்கு வெட்கித் தலைகுனிந்தனர். பிரம்மன் வசிட்டரைப் பார்த்து, விஸ்வாமித்திரர் செய்த காரியத்தால்தான் அரிச்சந்திரன் இந்த உடம்போடு மோட்சம் செல்ல முடிந்தது என்று கூறிய வுடன், வசிட்டரும் அதை ஏற்றுக் கொண்டு, விஸ்வாமித்திரரைக் கட்டிப் பிடித்து பகைமையை மறந்தார்.
மகாமதியும் சுமதியும்
பார்க்கவ பரம்பரையில் மகாமதி என்ற பிராமணனுக்குச் சுமதி என்றொரு மைந்தன் இருந்தான். இளைஞனாக வளர்ந்த பிறகும்கூட அவன் வெளியே எங்கும் செல்லாமல், யாரையும் பார்க்காமல், வாய் திறந்து பேசாமல் இருந்து வந்தான்.
மகாமதி, 'சுமதி! உடனடியாக வெளி உலகிற்குச் சென்று ஒரு குருவைத் தேடிக்கொள். வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுக் கொள். பிறகு ஒரு பெண்ணை மணந்து குழந்தை பெற்ற பிறகு காட்டிற்குச் சென்று தவம் செய்து, பிரம்ம ஞானம் பெற முயற்சி செய்” என்று அடிக்கடி கூறி வந்தார்.
பல நாட்கள், பலமுறை மகாமதி கூறியதைக் கேட்டு ஒரு நாள் மகன் சுமதி, வாய் திறந்து பேச ஆரம்பித்தான். "தந்தையே! தாங்கள் சொல்லும் பிரம்ம ஞானத்தை என்றோ அடைந்து விட்டேன். இப்பிறப்பில் உங்கள் மகனாக இருக்கின்ற நான் இதற்கு முன்னர் எத்தனையோ பிறப்புகள் எடுத்து உள்ளேன். புழுவில் தொடங்கி, விலங்குவரை பிறந்து, அதற்கு மேல் நான்கு வர்ணத்திலும் பல பிறவிகள் எடுத்துள்ளேன். நூற்றுக்கணக்கான தாய் தந்தையர், நூற்றுக்கணக்கான மனைவியர், ஆயிரக்கணக்கான நண்பர்கள் பகைவர்கள் ஆகியவர்களோடு பல பிறவிகள் வாழ்ந்துள்ளேன். பலரைக் கொன்றுள்ளேன். பலரால் பலமுறை கொல்லப்பட்டேன். ஒரு சில பிறப்புகளில் நல்ல குருமார்களைப் பெற்று வேத, சாஸ்திரங்களைப் பயின்றுள்ளேன். இப்பிறப்பில் அதிர்ஷ்ட வசமாக ஜதீஸ்மரா சக்தி எனக்குக் கிடைத்திருப்பதால், என் பழம் பிறப்புகளை எல்லாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனவே இப்பிறப்பில் புதிதாக ஒரு குருவைத் தேடிச் சென்று எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. முந்தைய பிறப்புகளில் கற்றுக் கொண்ட வேத சாஸ்திர அறிவு என்னுள் நிறைந்துள்ளது” என்று கூறினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 7 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வசிட்டரும், சென்று, மகாமதி, சுமதி, இப்பிறப்பில், பிரம்மன், பிறகு, வசிட்டர், விஸ்வாமித்திரர், தவம்