மார்க்கண்டேய புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்
இப்பெண்ணிற்குச் சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி சக்தியையும், வாயு அம்பு, வில், அம்பறாத்தூணி ஆகியவற்றையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் என்ற யானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியையும், யமன் நீண்ட கம்பையும், வருணன் பாசக் கயிற்றையும், தட்சன் மணிகள் பதித்த கழுத்து மாலையையும், பிரம்மன் ஒரு பாத்திரத்தில் புண்ணிய நீரை யும் கொடுத்தனர். சூரியன் தன் ஒளியினால் அவளுக்கு ஆற்றலையும், சந்திரன் ஒரு வாளும் கேடயமும், கடல் கழுத்து மாலையையும் துணிகளையும் கொடுத்தன. விஸ்வகர்மா கோடரிகள், கவசங்கள் முதலியவற்றைச் செய்து கொடுத்தான். வருணன் மாலைகளையும் தாமரை மலர்களையும், இமவான் ஆபரணங்களையும், ஏறிச் செலுத்த சிம்ம வாகனத்தையும், நாகங்களின் அரசன் பாம்புகளையும் மாலையினையும் கொடுத்தனர். ஏனைய தேவர்கள் தந்த மற்ற ஆயுதங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. இந்த அலங்காரங்களுடன் புறப்பட்ட சக்தி வெடிச்சிரிப்புச் சிரிக்க ஆரம்பித்தாள். அந்தச் சிரிப்பின் ஒசையில் உலகங்கள் அதிர்ந்தன. அன்னையின் வடிவைக் கண்ட தேவர்கள் 'ஜெய ஜெய காளி' என்று கோஷமிட்டனர். முனிவர்களும் ரிஷிகளும் கைகூப்பி வணங்கினர். தேவர் உலகத்தில் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்த சப்தத்தைக் காதில் வாங்கிய அசுரர்கள், என்ன நடக்கிறது என்று புரியாததால் சென்று பார்க்க விரும்பினர். மகிஷாசுரன் படைகளைத் திரட்டிக் கொண்டு பார்க்கப் புறப்பட்டான். வந்தவனுக்கு அதுவரை தேவருலகத்தில் காணாத ஒரு காட்சி தென்பட்டது. ஒரு பெண் வடிவம் பெரிய சிங்கத்தின் மேலமர்ந்து இருப்பதைக் கண்டான். அந்தப் பெண்ணின் தரையில் ஊன்றிய இடது பாதம் பாதாளம் வரை சென்றது. அவளது திருமுடி விண்ணைப் பிளந்து கொண்டு மிக உயரத்தில் சென்றது. அவள் அமர்ந்திருக்கும் நிலை உலகம் முழுவதையும் வியாபித்து இருந்தது. அவளுடைய ஆயிரம் கைகள் திசைகள் அனைத்தையும் அணைப்பது போல் இருந்தன.
அசுரர்கள் தேவியிடம் போர் புரியத் தொடங்கினர். போருக்கு முதலில் புறப்பட்டவன் மகிஷாசுரனின் படைத் தலைவனான சிக்ஷீரா என்பவன் ஆவான். உதக்ரா, மஹாஹனு, சிலோமா, வஸ்கலா, பரிவரிதா, வீரலக்ஷா ஆகியோர் நால்வகைப் படையுடன் தாக்கியது போக ரதங்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டு தனித்தனியாகவும் தேவியைத் தாக்கினர். மகிஷாசுரன் கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டு எதிர்த்தான். பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அரக்கர்கள் பாசக்கயிறு, அம்பு, வாள் ஆகியவற்றைக் கொண்டு போர் புரிந்தனர். தேவி தன் ஆயுதங்களால் இவை அனைத்தையும் பொடி ஆக்கினாள். அவள் வாகனமாகிய சிம்மம், பகைவர்களைத் தின்று தீர்த்தது. தேவியின் மூச்சுக் காற்றிலிருந்து பல கணங்கள் உருவாகி, மற்ற அசுரர் களுடன் போர் புரிந்தனர். தேவி ஆயிரக்கணக்கான அசுரர் களைத் தன் சூலாயுதத்தாலும், சக்தியினாலும், வாளினாலும் அழித்தாள். சிலர் அவள் மணியோசை கேட்டு மயக்கமாயினர். பலர் அவளது பாசக்கயிற்றில் கட்டப்பட்டனர். பலர் கண், காது, கை, கால் எனப் பல உறுப்புகளை இழக்க வேண்டியதாயிற்று. இரத்த ஆறு ஓடியது. போர்க்களம் முழுவதும் இறந்து போன யானைகள், குதிரைகள், அசுரர்கள் ஆகியவற்றால் நிரம்பி இருந்தது. விநாடிப் பொழுதில் காய்ந்த மரங்களை நெருப்பு எரிப்பது போல் பகைவர்களை தேவி அம்பிகை எரித்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 21 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஆற்றல், கொண்டு, வருணன், ஆகியவற்றைக், யானைகள், தேவி, அசுரர்கள், தேவர்கள், அவள், போர்