மார்க்கண்டேய புராணம் - பகுதி 22 - பதினெண் புராணங்கள்
தன் சேனை சின்னாபின்னப்படுவதைக் கண்ட மகிஷாசுரன், ஒர் எருமை வடிவைப் பெற்றுக் கொண்டு, தேவியைத் தாக்கினான். தேவியின் படைகளைத் தன் கொம்பு களால் கொன்றான். இறுதியாக அன்னை ஏறியிருந்த சிம்மத்தை மகிஷாசுரன் தாக்க முற்பட்டதும், தேவிக்குச் சினம் ஏற்பட்டது. மாபெரும் எருமை வடிவம் கொண்ட அசுரனின் கால் குளம்புகள் பூமியைப் பிளந்தன. எருமையின் வாலாட்டத்தால் கடல் கொந்தளித்தது. அக் கொம்புகளில் பட்ட மலைகள் பொடியாயின. ஆனால் தேவி எருமையைத் தன் பாசக் கயிற்றால் பிணித்தாள்.
தேவி எருமையைப் பிணித்ததும், அசுரன் எருமை வடிவை நீத்து சிம்ம வடிவம் கொண்டான். சிம்மத்தின் தலையைத் தேவி துணித்ததும், சிம்மத்தின் உடலிலிருந்து வாளோடு வெளிப்பட்டான் அசுரன். பல பாணங்களையும் ஆயுதங்களையும் அசுரன் மேல் செலுத்தவும், அவன் யானை வடிவம் எடுத்து தேவியின் வாகனமாகிய சிங்கத்தைத் துதிக்கையால் பற்றி இழுத்தான். தேவி யானையின் துதிக்கையை வெட்டவும், அசுரன் மறுபடியும் எருமை வடிவெடுத்தான். எருமை வடிவிலிருந்து அசுரன் முதுகில் ஏறி எருமையின் தலையைத் துணித்தாள் தேவி. எருமை உடலிலிருந்து மகிஷாசுரன் வெளி வருவதற்காகத் தலையை வெளியே நீட்டியவுடன், தலையைத் துணித்தாள் தேவி.
தேவர்கள் இதனைக் கண்டு மகிழ்ச்சியோடு பூமாரி பொழிந்தனர். அப்ஸரஸ்கள் நடனமாடினர். கந்தர்வர்கள் பாடினர்.
சும்ப நிசும்பர் கதை
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அசுர சகோதரர்கள் மூன்று உலகத்தையும் வென்று ஆட்சி செய்தனர். மாபெரும் வெற்றி அடைந்த அவர்கள் இந்திரனுடைய ஐராவதம் முதல், அக்னியின் அஸ்திரம் வரை தமதாக்கிக் கொண்டனர். சிந்தாமணி, பாரிஜாதம் முதலிய அனைத்தும் அவர்களுடையதாயிற்று. சண்டன், முண்டன் என்ற இரண்டு பணியாளர்களை வைத்திருந்தனர். ஒருமுறை கலங்கிப் போன தேவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் கைலாயமலையில் வந்து தவமிருந்தனர். பார்வதி தேவியார் அவ்வழியே சென்றபொழுது இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று வணங்குவதைக் கண்டு, ‘என்ன விஷயம்! என்று கேட்க, அவர்கள் தங்கள் நிலையை எடுத்துக் கூறினர். இந்தக் கொடுமையைக் கேட்ட பார்வதி தன் உடம்பிலிருந்து சிவனையும் அம்பிகையையும் வெளிப்படுத்தினார். எல்லை மீறிய அழகுடன் அம்பிகை கைலையைச் சுற்றி வந்தாள். பணியாளர்களான சண்டனும் முண்டனும், அம்பிகையைப் பார்த்துவிட்டு தங்கள் தலைவர்களாகிய சும்ப, நிசும்பரிடம் ஒடிச் சென்றனர். அவர்களைப் பார்த்து, “அரசே, இந்திரன் அவனுடைய யானையாகிய ஐராவதம், அவர் குதிரை உச்சைஸ்ரவம், பாரிஜாதம் முதலிய அனைத்தும் தங்களிடம் இருக்கின்றன. இனித் தாங்கள் போர் செய்வதற்கும் யாருமில்லை; அடைய வேண்டிய பொருளும் எதுவுமில்லை. ஆனால் இன்று நாங்கள் கைலை மலையைச் சுற்றி வரும்பொழுது அம்பிகை என்ற பெண்ணைப் பார்த்தோம். அவளைப் பார்த்த பிறகு உங்கள் நிறைவான வாழ்க்கையில் உள்ள குறை தெரிந்தது. அவளை நீங்கள் மனைவியாகப் பெற்றுவிட்டால், அடைய வேண்டிய பேறு எதுவுமில்லை என்று கூறினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 22 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தேவி, எருமை, அசுரன், தலையைத், வடிவம், மகிஷாசுரன்