மார்க்கண்டேய புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
விக்ரந்த மன்னன் தன் மனைவியின் பக்கத்தில் இருந்த குழந்தையைத் தன் குழந்தை என்று நினைத்து, ஒரு சத்திரியக் குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் செய்தான். ஆனந்தன் என்று பெயரிட்டான். குழந்தை ஆனந்தனுக்கு ஒரு குரு நியமிக்கப்பட்டார். முதல் நாள் அந்த குரு ஆனந்தனைப் பார்த்து, “முதலில் உன் தாய் தந்தையருக்கு வணக்கம் சொல்லி வா” என்று கூறினார். ஆனந்தன் சிரித்துக்கொண்டே “எந்தத் தாய், தந்தையரை வணங்குவது? பெற்றவர்களையா அல்லது வளர்த்தவர்களையா?” என்று கேட்டான். குரு குழப்பம் அடைந்தார். ஆனந்தன் நடந்தவற்றைக் கூறினான். அரசனுடைய உண்மையான குழந்தை பிராமணன் வீட்டில் வளர்கிறது என்று கூறினான். இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்கலாம் என்று குரு கவலைப்பட்ட பொழுது பிராமணன் வீட்டில் வளரும் ஷைத்ரா என்ற பையன்தான் உண்மையான அரசகுமாரன் என்று சொன்னான். மேலும், ஷைத்ராவைக் கொண்டு வந்து அரசனிடம் சேர்த்து விட்டு, முனிவர் மகனாகிய தான் தவம் செய்யக் காட்டுக்குப் புறப்பட்டான். பிரம்மன் எதிரே வந்து, அவனைத் தடுத்து, “நீ காட்டிற்குப் போகக் கூடாது. சக்ஷீச மனு என்ற பெயருடன் இந்த உலகை ஆள வேண்டும். இந்தக் காலகட்டத்திற்கு சக்ஷீச மன்வந்திரம் என்ற பெயர் ஏற்படும்” என்று கூறினான். ஆனந்தன் இதை ஏற்றுக் கொண்டு, மன்னன் உக்கிரனுடைய மகளாகிய விதர்பாவை மணந்து உலகை ஆட்சி செய்தான். இந்த சக்ஷீச மனுவின் காலத்தில் இருந்த இந்திரனுக்குப் பெயர் மனோஜலா என்பதாகும.
ஏழாவது மனுவின் கதை
வைவஸ்வத மனுவின் கதை முன்னரே புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சாயாவுக்குப் பதிலாக இப்பொழுது சம்ஜனாவே மறுபடியும் சூரியனிடம் வந்து விட்டாள். இருந்தாலும், சூரியனுடைய மிகுதியான சக்தி அவளை வருத்தியது. அவளுடைய தந்தையாகிய விஸ்வகர்மா அவள் தாங்குமளவிற்குச் சூரியனின் ஆற்றலைக் குறைத்தார். அதிகப்படியாக சூரியனிடமிருந்து பெற்ற ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி சிவனுக்குரிய திரிசூலமாகவும், விஷ்ணுவின் சக்கரமாகவும், அஷ்டவசுக்களுக்கும், சிவனுக்கும், அக்னிக்கும், சக்திகளாகப் பெற்றுக் கொடுத்தார். இவை அனைத்தும் போக எஞ்சிய சக்தியைப் பல தெய்விக ஆற்றல்களாகவும், குபேரனுக்குரிய பல்லக்காகவும் செய்து தந்தார். இப்பொழுது நடைபெறும் வைவஸ்வத மனுவின் மன்வந்திரத்தில் இந்திரனுக்கு உருஜஸ்வி என்பது பெயராகும்.
எட்டாவது மனுவின் கதை
ஒவ்வொரு கர்ப்பத்திலும் பதினான்கு மனுக்கள் தோன்றுவர். அவர்களுடைய காலம் மன்வந்திரம் எனப்படும். இதுவரை ஏழு மனுக்களில் ஏழு மன்வந்திரங்கள் விளக்கப்பட்டன. எட்டாவது மன்வந்திரம், சூரியனுக்கும் சாயாவுக்கும் பிறந்த சுரன்னி என்பவனுடைய மன்வந்திரம் ஆகும். இந்த மன்வந்திரத்தில் தைத்திய மன்னனாகிய வலி இந்திரனாவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 19 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மனுவின், மன்வந்திரம், ஆனந்தன், குரு, குழந்தை, வீட்டில், சக்ஷீச, வந்து, கூறினான், பிராமணன்