கூர்ம புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
நந்தி
முன்னொரு காலத்தில் ஷிலதா என்ற முனிவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த பிறகு சிவன் எதிரே வந்தார். பார்வதியுடன் வந்த சிவன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, 'தாயின் வயிற்றில் பிறக்காதவனும், தங்களைப் போன்றவனும், மரணத்தின் பிடியில் அகப்படாதவனும் ஆகிய ஒரு மகன் எனக்கு வேண்டும் என்று கேட்க சிவன் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகு ஷிலதா முனிவர் பூமியை உழுகையில் சூரியப்பிரகாசத்தை உடைய ஒரு குழந்தை காணப்பட்டான். அந்தக் குழந்தையைக் கட்டி மகிழ்ந்தார். குழந்தை வளர வளர ஒரு பிராமணச் சிறுவனுக்குரிய பூணூல் அணிதல் முதலிய சடங்குகளை முறையாகச் செய்வித்தார். பிறகு வேதம் கற்பித்தார். எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக் கொண்ட குழந்தை தான் தவம் செய்யப் போவதாகக் கூறிவிட்டுக் கடற்கரைக்குச் சென்று சிவனை தியானித்து ஒரு கோடி ருத்ரஜபம் செய்தான். ஜபம் முடிந்ததும் சிவன் எதிரில் தோன்றி, "உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்' என்றார். இளைஞன் இன்னும் ஒரு கோடி ருத்ரஜெபம் செய்ய அருள் செய்ய வேண்டும் என்று கேட்க, மகேசனும் ஒப்புக் கொண்டார். இதுபோல மூன்றாவது கோடியை முடித்த பொழுது, சிவன் தோன்றினார். 'மறுபடியும் ஒரு கோடி ஜபம் செய்ய வேண்டும் என்று கேட்க, சிவன் அது தேவையில்லை. இப்பொழுதே உன்னை எல்லாக் கணங்களுக்கும் தலைவனாக ஆக்கிவிட்டேன். என் மகனைப் போல நீ இருக்கலாம் என்று வரமளித்தார். சிவனே மருத்தின் மகள் ஒருத்தியை நந்திக்குத் திருமணம் செய்து வைத்தார்.
நால்வகைப் பிரளயங்கள்
கூர்மத்தின் வாயாலேயே கூர்ம புராணத்தைக் கேட்ட முனிவர்கள் "கூர்ம அவதாரம் கொண்ட நாராயணனே, தங்கள் மூலம் பல்வேறு வகையான விஷயங்களை அறிந்து கொண்டோம். பிரளயம் என்பது என்ன? அதைப் பற்றி விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று கேட்க கூர்மம் சொல்வத் தொடங்கியது.
உயிருடன் வாழும் ஜீவராசிகள் அன்றாடம் இறந்து கொண்டே இருக்கின்றன. இது நித்தியப் பிரளயம் எனப்படும். கல்பமுடிவில் மூன்று உலகங்களும் அழிவது நைமித்திகப் பிரளயம் எனப்படும். பிரபஞ்ச நிலைப்பேற்றுக்கு மூலமாக உள்ள காரணங்கள் அனைத்தும் ஒருசேர அழிவதைப் பிராகிருத பிரதிசர்கா (பெரும்பிரளயம்) என்று கூறுவர். எல்லாம் அழிந்த நிலையிலும் எஞ்சி இருக்கின்ற யோகிகள் மூலப்பொருளுடன் ஐக்கியமாவதை ஆத்யந்திகப் பிரதிசர்கா (மகாப்பிரளயம்) என்று கூறுவர். .
நான்கு யுகங்கள் கூடிய ஒர் எண்ணிக்கை போல, ஆயிரம் எண்ணிக்கைகள் முடிந்த பிறகு பிரஜாபதி அனைத்தையும் தம் ஆன்மாவுக்குள் அடக்கிக் கொள்கிறார். அதன் பிறகு நூறு ஆண்டுகளுக்கு மழை என்பதே இல்லாமல் பெரு வறட்சி தோன்றுகிறது. இதனால் எந்த ஒரு உயிரும் நிலை கொள்ள முடியாமல் அழிகின்றன. இந்நிலையில் அனைத்தும் கருகி பூமியுடன் ஐக்கியமாகிவிடுகின்றன. உலகம் முழுவதும் பாலை வனமாகக் காட்சி அளிக்கும் அந்நிலையில் சூரியன் தோன்றி தன் ஏழு கிரணங்களாலும் கடலைக் குடிக்க முற்படுகிறான். கடல்நீர்
முழுவதையும் குடித்த பிறகு அக்கிரணங்கள் பூமியை எரிக்கத் தொடங்குகின்றன. பூமியின் மேல், கீழ், நடு ஆகிய பகுதிகளில் பாயும் சூரிய கிரகணங்கள் பூமியை முழுவதும் சூழ்ந்து கொள்வதால் பூமியே நெருப்புப் பந்தாக ஆகிவிடுகிறது. இந்தப் பெரு நெருப்பு நான்கு உலகங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது. ஸ்தாவர, சங்கம உயிரினங்கள் அனைத்தும் அழிந்த நிலையில் பூமியே ஒரு ஆமையின் முதுகு போல் தோன்றுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 15 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், பிறகு, வேண்டும், கேட்க, செய்ய, பிரளயம், அனைத்தும், கோடி, குழந்தை, சீதை, பூமியை, சீதையை