பட்டினப்பாலை - பத்துப்பாட்டு
ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
வாலிணர் மடற்றாழை வேலாழி வியந்தெருவின் நல்லிறைவன் பொருள்காக்கும். |
120 |
தொல்லிசைத் தொழில்மாக்கள் காய்சினத்த கதிர்ச்செல்வன் தேர்பூண்ட மாஅபோல வைகல்தொறும் அசைவின்றி உல்குசெயக் குறைபடாது |
125 |
உல்கு என்பது சுங்கவரி. புகார்த் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு உல்குவரி வாங்கப்பட்டது. உல்குவரி பெறப்பட்டதற்கான முத்திரையும் பொருளின்மீது இடப்பட்டது. இப்படி முத்திரையிட்டு மாளாத அளவுக்குப் பொருள்கள் குவிந்து கிடந்தன. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் தெருக்களில் குவிந்துகிடந்தன. வெண்ணிற மடல்களை உடைய தாழைமரங்கள் மண்டிக்கிடந்த தெருக்கள் அவை. அப்பொருள்களில் அரசனுக்குச் சொந்தமான பொருள்களை ‘இறைவன் தொழில் மாக்கள்’ காவல் புரிந்தனர். வேலேற்றிய வண்டி அப் பொருள்களைக் காக்கும் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரியனாம் தேரை இழுத்துச் செல்லும் குதிரை போல நாள்தோறும் பகல் முழுவதும் உல்கு செய்யப்பட்டது. உல்கு செய்யச் செய்ய உல்கு செய்யப்படாத பொருள்களின் இருப்பு குறையவே இல்லை.
வான்முகந்தநீர் மலைப்பொழியவும் மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும் மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தின்று நீர்ப்பரப்பவும |
130 |
அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி |
காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி - கடலிலிருந்து மேகம் முகந்து சென்ற நீர் மலையில் பொழிவது போல நீரிலிருந்து பொருள்கள் நிலத்தில் ஏற்றப்பட்டன. மலையில் பொழிந்த நீர் கடலுக்கு வந்து பரவுவது போல நிலத்திலிருந்து பொருள்கள் நீரிலுள்ள நாவாயில் பரப்பப் பட்டன. அந்தப் பண்டங்கள் அளந்தறிய முடியாதபடி பற்பலவாகக் குவிந்துகொண்டிருந்தன.
அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி |
135 |
மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி |
புலி முத்திரை - ஏற்றுமதிக்காகவும், இறக்குமதியிலிருந்தும் வந்த மதிப்பு மிக்க பொருள்களின்மீது புலிச் சின்னம் பொறிக்கப்பட்டது. பின்னர் அவை பொதிமூட்டைகளாகக் கட்டிக் காப்பகத்தில் அடுக்கப்பட்டன. உடல் வலிமையைக் கண்ட மாத்திரத்திலேயே அச்சம் தரும் காவலாளிகள் அவற்றைப் பாதுகாத்தனர்.
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற |
140 |
ஏழகத் தகரோ டுகளு முன்றிற் |
மழைமேகங்கள் விளையாடும் மலையுச்சியிலும் மலையிடைப் பிளவுகளிலும் வருடை என்னும் வரையாடு ஏறி விளையாடுவது போல வேட்டையாடும் ஆண் நாய்களும், முட்டித் தாக்கும் செம்மறியாட்டுக் கடாக்களும் முற்றங்களில் அடுக்கியுள்ள மூட்டைகளின் மேல் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.
மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
குறுந்தொடை நெடும்படிக்காற் கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி மழைதோயும் உயர்மாடத்துச் |
145 |
சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்குல் தூசிடைத் துகிர்மேனி மயிலியல் மானோக்கிற் கிளிமழலை மென்சாயலோர |
150 |
வளிநுழையும் வாய்பொருந்தி ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும் காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள் வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் |
155 |
மாடங்களில் முருகன் வழிபாட்டு வெறியாட்டம் நடைபெறும். மூட்டைகள் அடுக்கிக் கிடக்கும் பகுதியை அடுத்து மாடி வீடுகள். அதற்கு வளைந்த தாழ்வாரம் இறக்கிய திண்ணை. திண்ணைக்கு ஏற நீண்ட சிறுசிறு படிக்கட்டுகள். மேல்மாடி வீட்டுக்கு நுழைந்தேறக் குகை போன்ற வாயில். அதன் வழியே ஏறிச்சென்றால் ‘போகிடைக் கழி’. இது அதற்கு வழி நுழையும் வாயில். மாடியில் மகளிர் குரவை விளையாடும் காட்சி தெரிகிறது. அந்தச் சாயல் அழகியர்களுக்குச் சிவந்த காலடிகள். நெருங்கிய தொடைகள். பசுமையான தழையாடை மூடிப் பகட்டிக்கொண்டிருக்கும் அல்குல். மயிலின் சாயலையுடைய அவர்களின் பவளம் போன்ற மேனியில் பட்டாடை. மான்போல் மருண்ட பார்வை. கிளிபோல் மழலைமொழி. பூப் போல் மென்மையாகத் தோன்றும் மேனிச் சாயல். இவர்கள் கைகூப்பி வெறிநடனம் ஆடினர். அது மலைமுகட்டில் மலர்த் தாதுகளைக் கொட்டிக்கொண்டு கொடியோடு கூடிய காந்தள் பூ காற்றில் ஆடுவது போல் இருந்தது. ‘போகிடைக்கழி’ = மாடி வீட்டுக் கூடம், வளி நுழையும் வாயில் = திறந்தவெளிச் சன்னல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, இறக்குமதி, உல்கு, இலக்கியங்கள், பொருள்கள், வாயில், ஏற்றுமதி, பத்துப்பாட்டு, பட்டினப்பாலை, மாடி, அதற்கு, நுழையும், போல், சாயல், மகளிர், மலையில், துறைமுகத்தில், சங்க, செய்யப்பட்ட, உல்குவரி, வரையாடு, நீர், விளையாடும்