நெடுநல்வாடை - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
நூல்
கோவலர் வாடையால் துன்புறுதல்
வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் |
5 |
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க |
மழை பொழிந்துகொண்டிருக்கிறது. கோவலர் தம் ஆனிரைகளை வேறு நிலப்பரப்பில் மேயவிட்டுக்கொண்டு புலம்புகின்றனர். அவர்கள் தலையில் வெண்காந்தள் பூவைச் சூடிக்கொண்டுள்ளனர். பனியோடு சேர்ந்து வாடைக்காற்று வீசுகிறது. தம் கைகளைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.
கூதிர்க் கால நிலை
மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை |
10 |
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் |
வாடைக்காற்றின் குளிர் தாக்குவதால் பசுக்கள் சரியாக மேயவில்லை. மரத்தில் இருக்கும் மந்திக் குரங்குகள் கூம்பிய நிலையில் அமர்ந்துகொண்டிருக்கின்றன. பறவைகள் பறக்காமல் நிலத்தையே விரும்புகின்றன. கன்றுக்குட்டிகள் கூடக் கறவை மாடுகளில் பால் குடிக்கவில்லை. இப்படிக் கடுமையான வாடைக்காற்று வீசுகிறது. இந்தக் காலத்தில் ஒருநாள் நள்ளிரவு.
ஊரினது செழிப்பு
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி |
15 |
இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பில் துவலை கற்ப |
20 |
அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற் கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு |
25 |
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க |
முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர் வேலிலியில் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்துவந்தது. பெயல் நின்றதும் வெண்மேகம் படர்ந்துவரும் மூடுபனி. வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள் சதைப் பிடிப்புடன் முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன.
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்
மாட மோங்கிய மல்லன் மூதூர் ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் |
30 |
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர |
35 |
பழமையான ஊர். வளமான ஊர். ஓங்கிய மாடமாளிகைகள். ஆறு போல் அகன்ற தெருக்கள். முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட மக்கள். காவல் புரியும் மக்கள். படலைப் பூ மாலை தலையில் சூடியவர்கள். குளிரில் முதுகு கூனி முடக்கத்துடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள். பனித் துவலைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இரட்டைத் துணியால் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். பகல் அல்லாத இரவிலும் விரும்பிய இடங்களிலெல்லாம் திரிகின்றனர்.
மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள் மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல் பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண் மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து |
40 |
அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை யயர |
மகளிர். பருத்த மார்பகத் தோள். வள்ளிக்கொடி எழுதப்பட்ட தோள். வெள்ளி நிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்ட தோள். மெத்தென்ற உடம்பு. அழகு. முத்துப் போன்ற புன்னகை. காதுத் தொங்கல் குழையை விரும்பிப் பாய்வது போன்ற நீண்ட கண்கள். மழை போல் ஈரமான கண்கள். எழிலான கண்கள். இவற்றைக் கொண்ட மடவரல் மகளிர். மடப்பத் தன்மை உடைய மகளிர். இவர்கள் மாலைப் பொழுது என்று கணித்து அறிந்துகொள்கின்றனர். பூக்கூடையில் உள்ள பூ மலர்வதால் தெரிந்துகொள்கின்றனர். இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து விட்டு விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி வழிபடுகின்றனர். மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுநல்வாடை - பத்துப்பாட்டு, நெடுநல்வாடை, இலக்கியங்கள், மகளிர், பத்துப்பாட்டு, தோள், உடைய, கண்கள், கொண்ட, போல், மக்கள், தேறல், வெள்ளி, வள்ளிக்கொடி, எழுதப்பட்ட, மாக்கள், மடவரல், வழிபடுகின்றனர், மாலை, கால்களை, வாடைக்காற்று, வீசுகிறது, தலையில், கோவலர், சங்க, கறவை, மரத்தில், பூத்துக், நிறத்தில், பைங்காற், காலத்தில், இருக்கும், முழுவலி