கம்ப இராமாயணம் - 8. வேள்விப் படலம்
விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல்
விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன், மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. | 1 |
ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால், ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம், தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம் மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. | 2 |
இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல்
'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர, பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. | 3 |
வழியில் எதிர்ப்பட்ட நதியைக் குறித்து இராமன் வினாவுதலும், முனிவனின் விடையும்
இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்; அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற, 'முனைவ! ஈது யாவது?' என்று, முன்னவன் வினவ, பின்னர், வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்: | 4 |
'எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்' என்று, அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற, செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர், 'மைம் மலி பொழில் யாது?' என்ன, மா தவன் கூறலுற்றான்: | 5 |
நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன் எடுத்துரைத்தல்
'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்: எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச் செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே | 6 |
'"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான் பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும் பிணககு ஒருங்கு தேர்வார் ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்; ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால். | 7 |
முனிவன் உரைத்த மாவலி வரலாறு
'ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய் ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் ஏனம் எனும் திறல் மாவலி என்பான், வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; | 8 |
'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்; ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால், வையமும் யாவும் வழங்க, வலித்தான்; | 9 |
'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்; மாயனை வந்து வணங்கி இரந்தார்; "தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்; நாயகனும், அது செய்ய நயந்தான். | 10 |
'காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய், நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர் ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். | 11 |
'முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை கற்பது ஒர் நாவன், அனல் படு கையன், அற்புதன்,-அற்புதரே அறியும் தன் சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான். | 12 |
'அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம் வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்; "நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்! எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?" என்றான். | 13 |
'ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன், "வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி, நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர் மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்" என்றான். | 14 |
'சிந்தை உவந்து எதிர், "என் செய்?" என்றான்; அந்தணன், "மூஅடி மண் அருள், உண்டேல்; வெந் திறலாய்! இது வேண்டும்" எனா முன், "தந்தனென்" என்றனன்; வெள்ளி, தடுத்தான்: | 15 |
'"கண்ட திறத்து இது கைதவம்; ஐய! கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்; அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள், உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்" என்றான். | 16 |
'"நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து, தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல் கனக் கரியானது கைத்தலம் என்னின், எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?" என்றான். | 17 |
'"துன்னினர் துன்னலர்" என்பது சொல்லார், முன்னிய நல் நெறி நூலவர்; 'முன்வந்து, உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க' என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்? | 18 |
'"வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர் வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால், எள்ளுவ என் சில? இன் உயிரேனும் கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். | 19 |
'"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!- வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும், ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? | 20 |
'"அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்; கொடுப்பவர் முன்பு, 'கொடேல்' என நின்று, தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார் கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை" என்றான். | 21 |
'"கட்டுரையின், தம கைத்து உள போழ்தே இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர் உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்; 'விட்டிடல்' என்று விலக்கினர் தாமே." | 22 |
'முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி, "கொடியன்" என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்; "அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க" என, நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். | 23 |
'கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும், பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர் வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் - உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. | 24 |
'நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம் சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா; ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே. | 25 |
'உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம், இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,- சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! | 26 |
'"உரியது இந்திரற்கு இது" என்று, உலகம் ஈந்து போய், விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்; கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! | 27 |
திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன் கூறுதல்
'ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய! காதலால் கண்டவர் பிறவி காண்குறார்; வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு, ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே. | 28 |
இராம இலக்குவர் காவல் இருக்க, முனிவன் வேள்வி தொடங்குதல்
'ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான்' எனா, நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின் வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான், காண்தகு குமரரைக் காவல் ஏவியே. | 29 |
எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள் விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை, மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள், கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர். | 30 |
இராமன் முனிவனிடம் தீய அரக்கரின் வருகைப் பற்றி வினாவல்
காத்தனர் திரிகின்ற காளை வீரரில் மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, 'நீ, தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர், ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று?' என்றான். | 31 |
அது சமயம் அரக்கர் ஆரவாரம் செய்து வருதல்
வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்; போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின், பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல் ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே. | 32 |
அரக்கர் சேனையின் திறன்
எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப் பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்; வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்; செய்தனர், ஒன்று அல தீய மாயமே. | 33 |
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின, கானகம் மறைத்தன, கால மாரி போல்; மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென, வானகம் மறைத்தன, வளைந்த சேனையே. | 34 |
வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட, பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை, 'ஒல்' என உரறிய ஊழிப் பேர்ச்சியுள், வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே. | 35 |
அரக்கரை இலக்குவனுக்கு இராமன் காட்டுதல்
கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்; துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்; 'பவர் சடை அந்தணன் பணித்த தீயவர் இவர்' என, இலக்குவற்கு இராமன் காட்டினான். | 36 |
உடனே அம்பு எய்து வீழ்த்துவதாக இலக்குவன் கூறுதல்
ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக, விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்; 'அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர் துண்டம் வீழ்வன' என, தொழுது சொல்லினான். | 37 |
வேள்விச் சாலையின்மேல் இராமன் சரக்கூடம் அமைத்தல்
'தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும் ஓம வெங் கனலிடை உகும்' என்று உன்னி, அத் தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு, கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான். | 38 |
இராமன் போர் செய்யத் தொடங்குதல்
நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச் செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல், வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர், 'அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்' என்றார். | 39 |
தவித்தனன் கரதலம்; 'கலங்கலீர்' என, செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்; புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்; குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. | 40 |
இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்
திருமகள் நாயகன் தெய்வ வாளிதான், வெருவரு தாடகை பயந்த வீரர்கள் இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. | 41 |
இறவாது எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி ஓடுதல்
துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்; கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால், 'பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு' எனா உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். | 42 |
பிற போர்க் கள நிகழ்ச்சிகள்
ஓடின அரக்கரை உருமின் வெங் கணை கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப் பாடின; பரந்தன, பறவைப் பந்தரே. | 43 |
தேவர்கள் இராமனை வாழ்த்துதல்
பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை; அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன; இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்; சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். | 44 |
புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்; அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த; முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி, இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்; | 45 |
வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்
'பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் - புவனம் ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி, காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.' | 46 |
'யான் இனி செய்யவேண்டிய பணி யாது?' என இராமன் முனிவனைக் கேட்டல்
என்று கூறிய பின்னர், அவ் எழில் மலர்க் கானத்து, அன்று, தான் உவந்து, அருந் தவ முனிவரோடு இருந்தான்; குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குருசில், 'இன்று யான் செயும் பணி என்கொல்? பணி!' என இசைத்தான். | 47 |
முனிவன் 'சனகன் வேள்வியைக் காணச் செல்வோம்' என்று சொல்ல, மூவரும் மிதிலைக்குப் புறப்படுதல்
'அரிய யான் சொலின், ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை; பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்; விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் புரியும் வேள்வியும், காண்டும் நாம்; எழுக!' என்று, போனார். | 48 |
மிகைப் பாடல்கள்
'மானச மடுவில் தோன்றி வருதலால், 'சரயு' என்றே மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும், ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன, அப்பால் போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார். | 4-1 |
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?' என்றே, வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும் பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும் அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்; | 4-2 |
'குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள், குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன் வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார். | 4-3 |
'அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல் துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில் இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி, கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி, | 4-4 |
'கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்; வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர்' என்று உரைப்ப, "எந்தை அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும்" என்ன, ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம். | 4-5 |
'சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே, அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான், நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும் திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை. | 4-6 |
'அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்; புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண், கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான். | 4-7 |
'அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து, பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும் மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும், முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன். | 4-8 |
'பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா, இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்; அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி, விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான். | 4-9 |
காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள், மீது உறப் படாலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி; மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து உறுகண் நீக்கப் போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான். | 4-10 |
'எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம், தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி? கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!. | 21-1 |
குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால், செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான். | 23-1 |
நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்; நாட்டம் அது அகத்துளான், சிலம்பின் நாமத்தான், ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ, வாட்டம் இல் அந்தணன் மலர்க் கை நீட்டினான். | 23-2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
8. வேள்விப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இராமன், முனிவன், என்றான், பின்னர், வேள்வி, எல்லாம், வேள்வியை, மலர்க், தொழுது, நோக்கி, அரக்கரை, தொழில், படைகள், படைக்கலம், அந்தணன்