கம்ப இராமாயணம் - 13. திருவடி சூட்டு படலம்
தன்னை வணங்கிய பரதனுக்கு பரத்துவாச முனிவர் ஆசி கூறி வினாவுதல்
வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும் தந்தை ஆம் எனத் தாழ்ந்து, வணங்கினான்; இந்து மோலி அன்னானும் இரங்கினான், அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான். | 1 |
'எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?' என்றான். | 2 |
பரதன் பதிலால் பரத்துவாசன் மகிழ்தல்
சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான், மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை, '"எனக்கு அடுத்தது இயம்பிலை நீ" என்றான்; 'உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!' என்றான். | 3 |
மறையின் கேள்வற்கு மன் இளந் தோன்றல், 'பின், முறையின் நீங்கி, முது நிலம் கொள்கிலேன்; இறைவன் கொள்கிலன் ஆம் எனின், யாண்டு எலாம் உறைவென் கானத்து ஒருங்கு உடனே' என்றான். | 4 |
உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம், குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால்- அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே. | 5 |
பரதன் உடன்வந்தோர்க்கும் சேனைக்கும் பரத்துவாசன் விருந்து அளித்தல்
ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன் தூய சாலை உறைவிடம் துன்னினான்; 'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து' எனா, தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான். | 6 |
துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது; பல் சனம், பிறந்து வேறு ஓர் உலகு பெற்றாரென, மறந்து வைகினர், முன்னைத் தம் வாழ்வு எலாம். | 7 |
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என, அந்தரத்தின் அரம்பையர், அன்பினர், வந்து உவந்து எதிர் ஏத்தினர்; மைந்தரை, இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார். | 8 |
நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்; தான மாமணிக் கற்பகம் தாங்கிய ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார். | 9 |
கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார், செம்பொனின் கல ராசி திருத்தினார்; அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும், உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார். | 10 |
அஞ்சு அடுத்த அமளி, அலத்தகப் பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ நஞ்சு அடுத்த நயனியர், நவ்வியின் துஞ்ச, அத்தனை மைந்தரும் துஞ்சினார். | 11 |
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என, கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்- வேந்தர் ஆதி, சிவிகையின் வீங்கு தோள் மாந்தர்காறும், வரிசை வழாமலே. | 12 |
மாதர் யாவரும், வானவர் தேவியர் கோது இல் செல்வத்து வைகினர்-கொவ்வை வாய்த் தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர், தாதிமார் எனத் தம் பணி கேட்பவே. | 13 |
நந்து அம் நந்தவனங்களில், நாள் மலர்க் கந்தம் உந்திய கற்பகக் காவினின்று, அந்தர் வந்தென, அந்தி தன் கை தர, மந்த மந்த நடந்தது வாடையே. | 14 |
மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண,- தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர் கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம் ஈன்று அளிக்க, நுகர்ந்தன-யானையே. | 15 |
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்; கர கதக் கரி கால் நிமிர்ந்து உண்டன; மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் குரகதத்தின் குழாங்களும் கொண்டவே. | 16 |
பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்
இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன் துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான், அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல் பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். | 17 |
சூரியன் தோன்றுதல்
நீல வல் இருள் நீங்கலும், நீங்குறும் மூலம் இல் கனவின் திரு முற்றுற, ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல் காலம் என்னக் கதிரவன் தோன்றினான். | 18 |
பரதனின் படைகள் தம் நிலையை அடைதல்
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர், தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார், மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார். | 19 |
பரதன் சேனையுடன் பாலை நிலத்தை கடத்தல்
காலை என்று எழுந்தது கண்டு, வானவர், 'வேலை அன்று; அனிகமே' என்று விம்முற, சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ, பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே. | 20 |
எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன் அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்மை ஆறினான்; பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம் இழிந்தன, வழி நடந்து ஏற ஒணாமையே. | 21 |
வடியுடை அயிற் படை மன்னர் வெண்குடை, செடியுடை நெடு நிழல் செய்ய, தீப் பொதி படியுடைப் பரல் உடைப் பாலை, மேல் உயர் கொடியுடைப் பந்தரின், குளிர்ந்தது எங்குமே. | 22 |
'பெருகிய செல்வம் நீ பிடி' என்றாள்வயின் திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம் கருகிய அண்ணலைக் கண்டு, காதலின் உருகிய தளிர்த்தன-உலவை ஈட்டமே. | 23 |
பரதன் படைகள் சித்திரகூடத்தை அடைதல்
வன் நெறு பாலையை மருதம் ஆம் எனச் சென்றது; சித்திரகூடம் சேர்ந்ததால்- ஒன்று உரைத்து, 'உயிரினும் ஒழுக்கம் நன்று' எனப் பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே. | 24 |
தூளியின் படலையும், துரகம், தேரொடு, மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும், ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும், 'கோள் இரும் படை இது' என்று, உணரக் கூறவே. | 25 |
பரதன் சேனையின் எழுச்சி கண்ட இலக்குவனின் சீற்றம்
எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம் கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின் மேல்; செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான். | 26 |
'பரதன், இப் படைகொடு, பார்கொண்டவன், மறம் கருதி, உள் கிடந்தது ஓர் கறுவு காதலால், விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான்; இது சரதம்; மற்று இலது' எனத் தழங்கு சீற்றத்தான். | 27 |
இராமனை அடைந்து இலக்குவன் சீற்றத்துடன் உரைத்தல்
குதித்தனன்; பாரிடை; குவடு நீறு எழ மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்; 'மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்' என்றான். | 28 |
போர்க் கோலம் பூண்டு இலக்குவன் வீர உரை
கட்டினன் சுரிகையும் கழலும்; பல் கணைப் புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத் தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான்: | 29 |
'இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள் பருமையும், அன்னவன் படைத்த சேனையின் பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என் ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ. | 30 |
'படர் எலாம் படப் படும் பரும யானையின் திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன, குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள் கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால். | 31 |
'கருவியும், கைகளும், கவச மார்பமும், உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல திரிவன-சுடர்க் கணை-திசைக் கை யானைகள் வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ. | 32 |
'கோடகத் தேர், படு குதிரை தாவிய, ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின் நாடகம் நடிப்பன-காண்டி; நாத! நீ'. | 33 |
'பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின் எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால், விண் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின் மண் முதுகு ஆற்றவும் காண்டி-வள்ளல்! நீ. | 34 |
'நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும், கவந்தமும், "உலகம் நின் கையது ஆயது" என்று உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல். | 35 |
'சூழி வெங் கட கரி, துரக ராசிகள், பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற, வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள் ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால். | 36 |
'ஆள் அற; அலங்கு தேர் அழிய; ஆடவர் வாள் அற; வரி சிலை துணிய; மாக் கரி தாள் அற, தலை அற; புரவி தாளொடும் தோள் அற-வடிக் கணை தொடுப்ப-காண்டியால். | 37 |
'தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின, அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப் புழைத்த வான் பெரு வழி போக-காண்டியால். | 38 |
'ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும் இரு நிலம் ஆள்கை விட்டு, இன்று, என் ஏவலால் அரு நரகு ஆள்வது காண்டி-ஆழியாய்! | 39 |
'"வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கு" என, நின்னை ஈன்றவள் நைதல் கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால். | 40 |
'அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்! விரைஞ்சு ஒரு நொடியில், இவ் அனிக வேலையை உரம் சுடு வடிக் கணை ஒன்றில் வென்று, முப் புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான்' என்றான். | 41 |
இலக்குவனுக்கு பரதனைப் பற்றி இராமன் தெளிவுறுத்தல்
'இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ, "கலக்குவென்" என்பது கருதினால் அது, விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ?- புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்: | 42 |
'நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர் எங்கு உலப்புறுவர்கள்? எண்ணின், யாவரே தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?- பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்! | 43 |
'எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன, பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே; அனைத் திறம் அல்லன அல்ல; அன்னது நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால். | 44 |
'"பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வரும் என நினைகையும், மண்ணை என்வயின் தரும் என நினைகையும்" தவிர, "தானையால் பொரும்" என நினைகையும் புலமைப்பாலதோ? | 45 |
'பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன், நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே, என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ?- மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்! | 46 |
'சேண் உயர் தருமத்தின் தேவை, செம்மையின் ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ? பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக் காணிய; நீ இது பின்னும் காண்டியால்'. | 47 |
சேனையைத் தவிர்த்து சத்துருக்கனனுடன் பரதன் இராமனை நெருங்குதல்
என்றனன், இளவலை நோக்கி, ஏந்தலும் நின்றனன்; பரதனும், நிமிர்ந்த சேனையை, 'பின் தருக' என்று, தன் பிரிவு இல் காதலின், தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான். | 48 |
பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்
தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன் அழுது அழி கண்ணினன்; 'அவலம் ஈது' என எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். | 49 |
கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான், 'ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய! நீ, தேர்ப் பெருந் தானையால் பரதன் சீறிய போர்ப் பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு' எனா | 50 |
இலக்குவன் நெஞ்சழிந்து நிற்றல்
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் - மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர, வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே. | 51 |
பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள், வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். | 52 |
'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை; துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான், மறந்தனன், மலர் அடி வந்து வீழ்ந்தனன் - இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னரே. | 53 |
இராமன் உள்ளம் கலங்கி பரதனை தழுவுதல்
'உண்டுகொல் உயிர்?' என ஒடுங்கினான் உருக் கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல், அவன் சடா மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே. | 54 |
அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை, உயாவுற, திரு உளம் உருக, புல்லினான் - நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் - தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே. | 55 |
தந்தை இறந்தது கேட்டு இராமன் கலங்குதல்
புல்லினன் நின்று, அவன் புனைந்த வேடத்தைப் பல் முறை நோக்கினான்; பலவும் உன்னினான்; 'அல்லலின் அழுங்கினை; ஐய! ஆளுடை மல் உயர் தோளினான் வலியனோ?' என்றான். | 56 |
அரியவன் உரைசெய, பரதன், 'ஐய! நின் பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக் கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்' என்றான். | 57 |
'விண்ணிடை அடைந்தனன்' என்ற வெய்ய சொல், புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம், கண்ணொடு மனம், சுழல் கறங்கு போல ஆய், மண்ணிடை விழுந்தனன் - வானின் உம்பரான். | 58 |
இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்; 'உரும் இனை அரவு' என, உணர்வு நீங்கினான்; அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம் பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ: | 59 |
தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்
'நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர் தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே! எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே! அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?' என்றான் | 60 |
'சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி, நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி, எற் பெற்று, நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ?- கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய்! | 61 |
'மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க, பொன் உயிர்க்கு தாரோய்!- பொறை உயிர்த்த ஆறு இதுவோ? உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உற்றேனோ?- மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்! | 62 |
'எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை, இந்தியர்கள் வெம் பவத்தின் வீய, தவம் இழைத்தவாறு ஈதோ?- சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளி, சதமகற்கு, அன்று, அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்! | 63 |
'வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி பூண்டு, இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன், மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இது கொண்டு ஆண்டு வருவது, இனி, யார் முகத்தே நோக்கவோ? | 64 |
'தேன் அடைந்த சோலைத் திரு நாடு கைவிட்டுக் கான் அடைந்தேன் என்னத் தரியாது, காவல! நீ வான் அடைந்தாய்; இன்னம் இருந்தேன் நான், வாழ்வு உகந்தே!- ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்! | 65 |
'வண்மை இயும், மானமும், மேல் வானவர்க்கும் பேர்க்கிலாத் திண்மை இயும், செங்கோல் நெறியும், திறம்பாத உண்மை இயும், எல்லாம் உடனே கொண்டு ஏகினையே!- தண்மை இ தகை மதிக்கும் ஈந்த தனிக் குடையோய்!' | 66 |
பலரும் இராமனை பரிகரித்தல்
என்று எடுத்துப் பற்பலவும் பன்னி, இடர் உழக்கும் குன்று எடுத்த போலும் குலவுத் தோள் கோளரியை, வன் தடக் கைத் தம்பியரும், வந்து அடைந்த மன்னவரும், சென்று எடுத்துத் தாங்கினார்; மா வதிட்டன் தேற்றினான் | 67 |
முனிவர்கள் இராமனை நெருங்குதல்
பன்ன அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் பின்னு சடையோரும், பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும், மந்திரியர் எல்லாரும், வந்து அடைந்தார்; தன் உரிமைச் சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார் | 68 |
வசிட்டனின் உரை
மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து, சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன் பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்: | 69 |
துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு; "இறத்தலும் பிறத்தலும் இயற்கை" என்பதே மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? | 70 |
'"உண்மை இல் பிறவிகள், உலப்பு இல் கோடிகள், தண்மையில் வெம்மையில் தழுவின" எனும் வண்மையை நோக்கிய, அரிய கூற்றின்பால், கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ? | 71 |
'பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்? மறு அது கற்பினில் வையம் யாவையும் அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் இறுவது கண்டு அவற்கு, இரங்கல் வேண்டுமோ? | 72 |
சீலமும், தருமமும், சிதைவு இல் செய்கையாய்! சூலமும், திகிரியும், சொல்லும், தாங்கிய மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? | 73 |
'கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த, உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன, மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது, எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ? | 74 |
'புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம் திண்ணிய திரியினில், விதி என் தீயினில், எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால், அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? | 75 |
'இவ் உலகத்தினும் இடருளே கிடந்து, அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து, பின் வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள், எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ? | 76 |
'உண்டுகொல் இது அலது உதவி நீ செய்வது? எண் தகு குணத்தினாய்! தாதை என்றலால், புண்டரீகத் தனி முதற்கும் போக்கு அரு விண்டுவின் உலகிடை விளங்கினான் அரோ! | 77 |
இராமனிடம் தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்
'ஐய! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை; உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ ? செய்வன வரன் முறை திருத்தி, சேந்த நின் கையினால் ஒழுக்குதி கடன் எலாம்' என்றான். | 78 |
'விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப் பாலதால்; கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய் மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்' என்றான். | 79 |
இராமன் நீர்க்கடன் செய்தல்
என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும், பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச் சென்றனர், செறி திரைப் புனலில்; 'செய்க' என, நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான். | 80 |
புக்கனன் புணலிடை, முழுகிப் போந்தனன், தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான், முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்- ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான். | 81 |
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி, பின், மான மந்திரத்தவர், மன்னர், மா தவர் ஏனையர் பிறர்களும், சுற்ற ஏகினன்; சானகி இருந்த அச் சாலை எய்தினான். | 82 |
சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல்
எய்திய வேலையில், தமியள் எய்திய தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்; கைகளின் கண்மலர் புடைத்து, கால்மிசை, ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ! | 83 |
வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர் உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில; சிந்திய-குரிசில் அச் செம்மல் சேந்த கண்- இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே! | 84 |
இராமன் சீதைக்கு தயரதன் இறந்ததை கூறுதல்
அந் நெடுந் துயர் உறும் அரிய வீரனைத் தன் நெடுந் தடக் கையால் இராமன் தாங்கினான்; நல் நெடுங் கூந்தலை நோக்கி, 'நாயகன், என் நெடும் பிரிவினால், துஞ்சினான்' என்றான். | 85 |
சீதையின் துக்கம்
துண்ணெனும் நெஞ்சினாள்; துளங்கினாள்; துணைக் கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட, மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள், பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள். | 86 |
கல் நகு திரள் புயக் கணவன் பின் செல, நல் நகர் ஒத்தது, நடந்த கானமும்; 'மன்னவன் துஞ்சினன்' என்ற மாற்றத்தால் அன்னமும் துயர்க் கடல் அடிவைத்தாள் அரோ! | 87 |
முனி பத்தினிகள் சீதையை நீராட்டுதல்
ஆயவள்தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர், தாயரின், முனிவர்தம் தருமப் பன்னியர்; தூய நீர் ஆட்டினர்; துயரம் நீக்கினர்; நாயகற் சேர்த்தினர்; நவையுள் நீங்கினார். | 88 |
சுமந்திரனும் தாயரும் வருதல்
தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை ஈன்றவர் மூவரோடு, இருமை நோக்குறும் சான்றவர் குழாத்தொடும், தருமம் நோக்கிய தோன்றல்பால், சுமந்திரன் தொழுது தோன்றினான். | 89 |
இராமனும், தாயாரும் ஏனையோரும் அழுதல்
'எந்தை யாண்டையான் இயம்புவீர்?' எனா, வந்த தாயர்தம் வயங்கு சேவடிச் சிந்தி நின்றனன், சேந்த கண்ண நீர்- முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான். | 90 |
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ, ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்; ஆய சேனையும், அணங்கனார்களும், தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார். | 91 |
சீதையைத் தழுவி தாயர் வருந்துதல்
பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப் பொன் அனார்களும், சனகன் பூவையைத் துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்; இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார். | 92 |
அனைவரும் இராமனிடம் வந்து சேர்தல்
சேனை வீரரும், திரு நல் மா நகர் மான மாந்தரும், மற்றுளோர்களும், ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,- கோனை எய்தினார்-குறையும் சிந்தையார். | 93 |
கதிரவன் மறைதல்
படம் செய் நாகணைப் பள்ளி நீங்கினான் இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால், தடம் செய் தேரினான், தானும் நீரினால் கடம் செய்வான் என, கடலில் மூழ்கினான். | 94 |
மறுதினம் அனைவரும் சூழ்ந்திருக்க இராமன் பரதனை வினாவுதல்
அன்று தீர்ந்தபின், அரச வேலையும், துன்று செஞ் சடைத் தவரும், சுற்றமும், தன் துணைத் திருத் தம்பிமார்களும், சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான், | 95 |
'வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால், சரதம் நின்னதே; மகுடம் தாங்கலாய், விரத வேடம், நீ என்கொல் வேண்டினாய்? பரத! கூறு' எனாப் பரிந்து கூறினான். | 96 |
பரதன் தன் கருத்தை உரைத்தல்
என்றலும் பதைத்து எழுந்து, கைதொழா நின்று, தோன்றலை நெடுது நோக்கி, 'நீ அன்றி யாவரே அறத்து உளோர்? அதில் பின்றுவாய் கொலாம்?' என்னப் பேசுவான்: | 97 |
'மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும், நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான்- தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால், எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்? | 98 |
'நோவது ஆக இவ் உலகை நோய் செய்த பாவகாரியின் பிறந்த பாவியேன், சாவது ஓர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்; யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்? | 99 |
'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? | 100 |
'பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம் துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால், மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று அறம் தின்றான் என, அரசு அது ஆள்வெனோ? | 101 |
'தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால் வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ, யான் பகைவனேகொலாம்? இறவு பார்க்கின்றேன்! | 102 |
'உந்தை தீமையும், உலகு உறாத நோய் தந்த தீவினைத் தாய் செய் தீமையும், எந்தை! நீங்க, மீண்டு அரசு செய்க' எனா, சிந்தை யாவதும் தெரியக் கூறினான். | 103 |
பரதன் வேண்டுகோளுக்கு இராமனின் மறுப்பு உரை
சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின், 'இற்றதோ இவன் மனம்?' என்று எண்ணுவான், 'வெற்றி வீர! யான் விளம்பக் கேள்' எனா, முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்: | 104 |
'முறையும், வாய்மையும், முயலும் நீதியும், அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் துறையுள் யாவையும், சுருதி நூல் விடா இறைவர் ஏவலால் இயைவ காண்டியால். | 105 |
'பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும், விரவு சீலமும், வினையின் மேன்மையும்,- உர விலோய்!-தொழற்கு உரிய தேவரும், "குரவரே" எனப் பெரிது கோடியால். | 106 |
'அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச் சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால், "தந்தை தாயர்" என்று இவர்கள் தாம் அலால், எந்தை! கூற வேறு எவரும் இல்லையால். | 107 |
'தாய் வரம் கொள, தந்தை ஏவலால், மேய நம் குலத் தருமம் மேவினேன்; நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ?- ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய்! | 108 |
'தனையர் ஆயினார் தந்தை தாயரை வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ? நினையல் ஓவிடா நெடிய வன் பழி புனைதலோ?-ஐய! புதல்வர் ஆதல்தான். | 109 |
'இம்மை, பொய் உரைத்து, இவறி, எந்தையார் அம்மை வெம்மை சேர் நரகம் ஆள, யான், கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ் செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ? | 110 |
'வரன் நில் உந்தை சொல் மரபினால், உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால், உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால், அரசு நின்னதே; ஆள்க" என்னவே,- | 111 |
தான் கொடுக்க இராமனை முடிசூட்டுமாறு பரதன் வேண்டல்
'முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும் நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார் என்னது ஆகில், யான் இன்று தந்தனென்; மன்ன! போந்து நீ மகுடம் சூடு' எனா. | 112 |
'மலங்கி வையகம் வருந்தி வைக, நீ, உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ? கலங்குறாவனம் காத்தி போந்து' எனா, பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான். | 113 |
பரதனை அரசாட்சி ஏற்க இராமன் கட்டளையிடுதல்
'பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு அசைந்த எந்தையார் அருள, அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ? | 114 |
'வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம், "தூய்மை" என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ? தீமைதான், அதின் தீர்தல் அன்றியே, ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே? | 115 |
'எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ தந்த பாரகம் தன்னை, மெய்ம்மையால் அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால். | 116 |
'மன்னவன் இருக்கவேயும், "மணி அணி மகுடம் சூடுக" என்ன, யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி; அன்னது நினைந்தும், நீ என் ஆணையை மறுக்கலாமோ? சொன்னது செய்தி; ஐய! துயர் உழந்து அயரல்' என்றான் | 117 |
வசிட்டனின் உரை
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும், உரைக்கலுற்ற பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி, 'பண்டு தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு அறச் சிந்தை நோக்கி, 'வள்ளியோய்! கேட்டி' என்னா, வசிட்ட மாமுனிவன் சொன்னான்: 118 |
'கிளர் அகன் புனலுள் நின்று, அரி, ஒர் கேழல் ஆய், இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ- உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே. | 119 |
'ஆதிய அமைதியின் இறுதி, ஐம் பெரும் பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்கபின், நாதன் அவ் அகன் புனல் நல்கி, நண்ண அருஞ் சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான். | 120 |
'ஏற்ற இத் தன்மையின், அமரர்க்கு இன் அமுது ஊற்றுடைக் கடல்வணன் உந்தி உந்திய நூற்று இதழ்க் கமலத்தில், நொய்தின் யாவையும் தோற்றுவித்து உதவிட, முதல்வன் தோன்றினான். | 121 |
'அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள் இன்று அளவினும் முறை இகந்துளார் இலை; ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால். | 122 |
'"இத இயல் இயற்றிய குரவர் யாரினும், மத இயல் களிற்றினாய்! மறுஇல் விஞ்சைகள் பதவிய இருமையும் பயக்க, பண்பினால் உதவிய ஒருவனே, உயரும்" என்பரால். | 123 |
'என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள் ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால், "அன்று" எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு' என்றான். | 124 |
இராமனின் தன்னிலை விளக்கம்
கூறிய முனிவனைக் குவிந்த தாமரை சீறிய கைகளால் தொழுது, செங்கணான், 'ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை கூறுவது உளது' எனக் கூறல் மேயினான்: | 125 |
'சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய் போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான்- தேன் தரு மலருளான் சிறுவ!-"செய்வென்" என்று ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? | 126 |
'தாய் பணித்து உவந்தன, தந்தை, "செய்க" என ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத் தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ? | 127 |
'முன் உறப் பணித்தவர் மொழியை யான் என சென்னியில், கொண்டு, "அது செய்வென்" என்றதன் பின்னுறப் பணித்தனை; பெருமையோய்! எனக்கு என் இனிச் செய்வகை? உரைசெய் ஈங்கு' என்றான். | 128 |
தானும் காடு உறைவதாக பரதன் உரைத்தல்
முனிவனும், 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம் இனி' என இருந்தனன்; இளைய மைந்தனும், 'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான் பனி படர் காடு உடன் படர்தல் மெய்' என்றான். | 129 |
தேவர்களின் உரை
அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார், 'இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ் வழித்து அன்று நம் செயல்' என்று எண்ணினார், கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்: | 130 |
'ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப் போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்; ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம் காத்தல் உன் கடன்; இவை கடமை' என்றனர். | 131 |
இராமன் வானவர் உரைப்படி பரதனை அரசாள கட்டளையிடுதல்
வானவர் உரைத்தலும், 'மறுக்கற்பாலது அன்று; யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால் ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்' எனா, தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான். | 132 |
பரதன் உடன்படுதல்
'ஆம் எனில், ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம் கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.' | 133 |
பரதன் கருத்திற்கு இராமன் உடன்படுதல்
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர் துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான் அன்பினன், உருகினன்; 'அன்னது ஆக' என்றான்- தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். | 134 |
பரதன் இராமனின் திருவடிகளைப் பெற்று முடிமேற் சூடிச் செல்லல்
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று இன்மையின், 'அரிது' என எண்ணி, ஏங்குவான், 'செம்மையின் திருவடித்தலம் தந்தீக' என, எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். | 135 |
அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான், 'முடித்தலம் இவை' என, முறையின் சூடினான்; படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்- பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். | 136 |
அனைவரும் திரும்புதல்
ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும், சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும், வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற, மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான். | 137 |
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்; மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்; கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான். | 138 |
இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியில் தங்குதல்
பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல் மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்; போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்; ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். | 139 |
நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம் செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான் இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான், அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். | 140 |
இராமன் தென் திசை நோக்கிச் செல்லுதல்
'"குன்றினில் இருந்தனன்" என்னும் கொள்கையால், நின்றவர் நலிவரால், நேயத்தால்' எனா, தன் துணைத் தம்பியும் தானும் தையலும் தென் திசை நெறியினைச் சேறல் மேயினான். | 141 |
மிகைப் பாடல்கள்
அன்ன காதல் அருந் தவர், 'ஆண் தகை! நின்னை ஒப்பவர் யார் உளர், நீ அலால்?' என்ன வாழ்த்திடும் ஏல்வையில், இரவியும் பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே. | 5-1 |
இன்ன ஆய எறி கடல் சேனையும், மன்னர் யாவரும், மன் இளந் தோன்றலும், அன்ன மா முனியோடு எழுந்து, ஆண்தகை துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம். | 19-1 |
'ஐய! நின்னுடைய அன்னை மூவரும், வைய மன்னரும், மற்றும் மாக்களும், துய்ய நாடு ஒரீஇத் தோன்றினார்; அவர்க்கு உய்ய நல் அருள் உதவுவாய்' என்றான். | 89-1 |
கங்குல் வந்திடக் கண்டு, யாவரும் அங்கணே துயில் அமைய, ஆர் இருள் பொங்கு வெம் பகை, போக மற்றை நாள், செங் கதிர் குண திசையில் தோன்றினான். | 94-1 |
'வானின் நுந்தை சொல் மரபினால் உடைத் தானம் நின்னது என்று இயைந்த தன்மையால், ஊனினில் பிறந்து உரிமையாகையின் யான் அது ஆள்கிலேன்' என, அவன் சொல்வான். | 111-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
13. திருவடி சூட்டு படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - என்றான், இராமன், காண்டியால், நின்று, நோக்கினான், இராமனை, கொண்டு, இராமனின், நோக்கி, தோன்றினான், காண்டி, மேயினான், யாவரும், உரைத்தல், தானும், என்னும், நின்றனன், அன்னது, அடுத்த, உனக்கு, போயினான், காதலின், முறையின், சிந்தை, பிறந்து, என்னவே, சேனையின், வானவர், அடைந்த, நீங்கிய, ஆணையால், தொழுது, நீங்கினான், உயிர்க்கு, வேலோய், எய்திய, அனைவரும், ஆதலால், உணர்வு, மகுடம், குரவர், போந்து, சேனையும், இருந்த, யாவையும், வீழ்ந்து, சான்றவர், மற்றும், தருமம், சென்று, மன்னர், இலக்குவன், பூண்டு, உந்திய, வாழ்வு, எனக்கு, இறைவன், எழுந்து, உள்ளம், ஏவலால், வையகம், நினைகையும், பரதனும், பிரிவு, துணைத், பிறந்த, பொங்கு, நின்னை, வேண்டுமோ, குலத்து, கூறினான், பெருங்