கம்ப இராமாயணம் - 5. ஒன்னார் வலி அறி படலம்
இராமன் வீடணனுக்கு உறையுள் அளித்தலும், சூரியன் மறைதலும்
|
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித் தந்தனன் விடுத்த பின், இரவி, 'தன் கதிர் சிந்தின வெய்ய' என்று எண்ணி, தீர்ந்தனன். | 1 |
அந்தி மாலையின் தோற்றம்
|
சந்தி வந்தனைத் தொழில் முடித்து, தன்னுடைப் புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. | 2 |
|
மாத் தடந் திசைதொறும் வளைத்த வல் இருள் கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென; நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர் பூத்தென மீன்களால் பொலிந்தது, அண்டமே. | 3 |
|
சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால், எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால், மல்லிகைக் கானமும், வானம் ஒத்ததே. | 4 |
|
ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ, 'தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்' என்றது போல, வந்து எழுந்தது - இந்துவே. | 5 |
|
'கண்ணினை அப்புறம் கரந்து போகினும், பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு' எனா, உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும் வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். | 6 |
|
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல், 'உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன், அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்; கிடைக்க வந்தான்' எனக் கிளர்ந்தது ஒத்ததே. | 7 |
|
மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம் தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல், வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம், பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். | 8 |
|
மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டு இனம் கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது, குன்றின்வாய் முழையின் நின்று உலாய கொட்பது, தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். | 9 |
|
கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான் உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன் சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். | 10 |
இராமன் சீதையை நினைந்து வருந்துதல்
|
உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்; இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்; கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும் திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். | 11 |
|
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால், பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான், அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? | 12 |
வீடணனோடு மேல் விளைவு பற்றி எண்ணமாறு சுக்கிரீவன் இராமனிடம் கூறுதல்
|
ஆயது ஓர் - அளவையின், அருக்கன் மைந்தன், 'நீ தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை; மேயவன் தன்னொடும் எண்ணி, மேல் இனித் தூயது நினைக்கிலை' என்னச் சொல்லினான். | 13 |
இராமன் கட்டளைப்படி, வீடணனை அழைத்துவருதல்
|
அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான், 'செவ்வழி அறிஞனைக் கொணர்மின், சென்று' என, 'இவ்வழி வருதி' என்று இயம்ப, எய்தினான் - வெவ் வழி விலங்கி, நல் நெறியை மேவினான். | 14 |
இராமன் இலங்கையின் அரண் முதலியன பற்றி வீடணனை வினவுதல்
|
'ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும், தார் கெழு தானையின் அளவும், தன்மையும், நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்' என்றான். | 15 |
வீடணன் விடை பகர்தல்
|
எழுதலும், 'இருத்தி' என்று இராமன் ஏயினான், முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான் பழுது அற வினவிய பொருளைப் பண்புற, தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: | 16 |
இலங்கையின் அரண்
|
'நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன் தலை என விளங்கிய தமனியப் பெரு மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர் அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. | 17 |
|
'ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ் ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை, வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். | 18 |
|
'மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும், இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால், சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். | 19 |
வாயில் முதலியவற்றைக் காக்கும் காவலர்
|
'வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர், இடை இலர், எண் - இரு கோடி என்பரால்; கடையுக முடிவினில் காலன் என்பது என்? விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். | 20 |
|
'மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்; கூற்றையும் கண் - பொறி குறுகக் காண்பரேல், ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார். | 21 |
|
'தென் திசை வாயிலின் வைகும் தீயவர் என்றவர் எண் - இரு கோடி என்பரால்; குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்? வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார். | 22 |
|
'கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர் ஈட்டமும் எண் - இரு கோடி என்பரால்; கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும் தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். | 23 |
|
'விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர் எண் - இரு கோடியின் இரட்டி என்பரால்; மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர் கண் இலர், கரை இலர், கரந்து போயினார். | 24 |
|
'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும், உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால், கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல், அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். | 25 |
|
'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ? மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர் முப்பது கோடியின் மும்மை முற்றினார். | 26 |
|
'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார், அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர், உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர், இறப்பு இலர், எண் - இரு நூறு கோடியே. | 27 |
கோயில் வாயிலின் காவலர்
|
'"விடம் அல, விழி" எனும், வெகுளிக் கண்ணினர், "கடன் அல, இமைத்தலும்" என்னும் காவலர், வட வரை புரைவன கோயில் வாயிலின் இடம் வலம் வருபவர், எண் - எண் கோடியால். | 28 |
|
'அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின், ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்; குன்றினும் வலியவர்; கோடி கோடியால். | 29 |
படைகளின் பெருக்கம்
|
'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக் கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம் தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. | 30 |
|
'பேயனேன், என், பல பிதற்றி? பேர்த்து அவன் மா இரு ஞாலத்து வைத்த மாப் படை தேயினும், நாள் எலாம் தேய்க்க வேண்டுவது, ஆயிர வெள்ளம் என்று அறிந்தது - ஆழியாய்! | 31 |
இராவணனது துணைவர்கள்
|
'இலங்கையின் அரண் இது; படையின் எண் இது; வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல் வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர். | 32 |
|
'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான், சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான், நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான், அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் அமைவான். | 33 |
|
'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும், உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான், செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன். | 34 |
|
'தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு அமைந்தான், செம் பொன் நாட்டு உள சித்திரைச் சிறையிடை வைத்தான், கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் கொடியான். | 35 |
|
'பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது ஆய தேர்ப் படை ஐ - இரு கோடி கொண்டு அமைந்தான், தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன். | 36 |
|
'குன்றில் வாழ்பவர் கோடி நால் - ஐந்தினுக்கு இறைவன், "இன்று உளார் பினை நாளை இலார்" என எயிற்றால் தின்றுளான், நெடும் பல் முறை தேவரைச் செருவின் வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன். | 37 |
|
'"மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால், உண்ணும் நாள் ஒரு நாளின்" என்று ஒளிர் படைத் தானை எண்ணின் நால் - இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும் கண்ணினான், உளன், சூரியன் பகை என்று ஒர் கழலான். | 38 |
|
'தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான், தா வரும் பக்கம் எண் - இரு கோடியின் தலைவன், மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். | 39 |
|
'உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன், நச் சிரப் படை நால் - இரு கோடிக்கு நாதன், முச் -சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு மொய்ம்பன், வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான். | 40 |
|
'அசஞ்சலப் படை ஐ - இரு கோடியன், அமரின் வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான், இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும், முன் நாள் பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன். | 41 |
|
'சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த வில்லின் மாப் படை ஏழ் - இரு கோடிக்கு வேந்தன், கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம் துறந்தோன். | 42 |
|
'இலங்கை நாட்டினன், எறி கடல் தீவிடை உறையும் அலங்கல் வேற் படை ஐ - இரு கோடிக்கும் அரசன், வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான், விலங்கு நாட்டத்தன் என்று உளன், வெயில் உக விழிப்பான். | 43 |
|
'நாமம் நாட்டிய சவம் எனின், நாள் தொறும் ஒருவர் ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான், தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன், தூம நாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான். | 44 |
|
'போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர் நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்; ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அமரில் பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்! | 45 |
சேனை காவலன் பிரகத்தன்
|
'இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் - அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்? சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் தொகையான், பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு பித்தன்; | 46 |
|
'சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல, ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய, சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான். | 47 |
கும்பகருணனின் வலிமை
|
'தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி, செம் பொன் மால் வரை மதம் பட்ட தாம் எனத் திரிந்தான், கும்பகன்னன் என்று உளன், பண்டு தேவரைக் குமைந்தான். | 48 |
இராவணனது புதல்வர்களின் ஆற்றல்
|
'கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக் குமரன் மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என மொழிவான்; ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை, தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. | 49 |
|
'தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான், முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான், அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழிந்தான் பின் ஒர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன். | 50 |
|
'தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா, என்னும் மூவர் ஆம், - "தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின், போவாராம்; தகை அழிவராம்" எனத் தனிப் பொருவார் ஆவாரம் - தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர். | 51 |
இராவணனது திறம் எடுத்துரைத்தல்
|
'இனைய நன்மையர் வலி இஃது; இராவணன் என்னும் அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்; தனையன், நான்முகன் தகை மகன் சிறுவற்கு; தவத்தால், முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான். | 52 |
|
'என் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி, அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் அனுங்க. | 53 |
|
'ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை ஊன்று கோடு இற, திரள் புயத்து அழுத்திய ஒண்மை தோன்றும் என்னவே, துணுக்கமுற்று இரிவர், அத் தொகுதி மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர். | 54 |
|
'குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய, அலங்கல் வாள் கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின், "இலங்கை வேந்தன்" என்று உரைத்தலும், இடி உண்ட அரவின் கலங்குமால் இனம், தானவர் தேவியர் கருப்பம். | 55 |
|
'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன், திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,- புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என, போனான்- இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து. | 56 |
|
'"புண்ணும் செய்தது முதுகு" என, புறங்கொடுத்து ஓடி, "உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல் நண்ணும் செய்கையது" எனக் கொடு, நாள்தொறும், தன் நாள் எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான். | 57 |
|
'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க; என்றும் அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, பண்டு அமரில், பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால் வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து. | 58 |
|
'என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும் குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்? இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள் சென்று உலப்பினும், நினக்கு அன்றி, பிறர்க்கு என்றும் தீரான். | 59 |
அனுமன் இலங்கையில் புரிந்த வீரச் செயல்கள்
|
'ஈடு பட்டவர் எண்ணிலர், தோரணத்து, எழுவால்; பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்; சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துர்ந்த ஆடு பட்டது பட்டனர், அனுமனால் அரக்கர். | 60 |
|
'எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர், கிங்கரப் பெயர்க் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்; வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி, சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். | 61 |
|
'வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான், அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி, உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான், சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு - தலைவ! | 62 |
|
'சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர் வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர், தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், தாமும், யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார். | 63 |
|
'காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல், நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின் வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் வாங்கி, தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தெருவில். | 64 |
|
'சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச் சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே ஆதரிப்பார்? இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட எரிந்த அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று. | 65 |
இலங்கை அனலால் அழிந்ததும், அதை அயன் மீண்டும் படைத்ததும்
|
'விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ- அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள் இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை இருந்தான்! | 66 |
|
'நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்; அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்; இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் விரைவினின் ஏவ, பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான். | 67 |
வீடணன் தான் போந்த காரணத்தை உரைத்தல்
|
'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின் வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் இலங்கை தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது - புகழோய்!' 68 |
இராமன் அனுமனைப் புகழ்ந்து உரைத்தல்
|
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான், வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன மயிலை, நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்: | 69 |
|
'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்; ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று உண்டோ? கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும் மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ? - வீர! | 70 |
|
'நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்; பின் செய்தோம் சில; அவை இனிப் பீடு இன்று பெறுமோ? - பொன் செய் தோளினாய்! - போர்ப் பெரும் படையொடும் புக்கோம்; என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்? | 71 |
|
'என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும் உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்! முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன் பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.' 72 |
|
என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி, ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்; நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன் வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார். | 73 |
கடல் கடக்கும் உபாயம் உரைக்குமாறு இராமன் வீடணனைக் கேட்டல்
|
'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால் அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள் அன்றால்; கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல் கற்றாய்!' | 74 |
கடல் கடக்க வீடணன் வழி கூறுதல்
|
'கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக் கருதும்; பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய் வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான். | 75 |
இராமன் துணைவருடன் கடற்கரையை அடைதல்
|
'நன்று, இலங்கையர் நாயகன் மொழி' என நயந்தான், ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன், சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த குன்றின் மேல் நின்று குதித்தன, பகலவன் குதிரை. | 76 |
மிகைப் பாடல்கள்
|
திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும், அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே, 'அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல் பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். | 14-1 |
|
மருக் கிளர் தாமரை வாச நாள்மலர் நெருக்கிடு தடம் என இருந்த நீதியான், திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை, 'இருக்க, ஈண்டு எழுந்து' என இருந்த காலையில். | 14-2 |
|
'வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு, இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத் தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு "இலங்கை" என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். | 18-1 |
|
'ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள் போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும் ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! | 19-1 |
|
'பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா மா இரும் புற மதில் வகுத்த மாப் படை ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள் ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! | 28-1 |
|
'ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும், ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும், தாங்கிய சக்கர வாளச் சார்பினும், ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். | 30-1 |
|
'ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர் காய் எரி படுத்திய கடுமையார்களில், நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். | 32-1 |
|
'இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும், துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட, மேல்நாள் பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். | 51-1 |
|
கோ...ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா வாடலிந்திர .......ளடைவர வமரிற் கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா ஓடினான் தரு முதலியர் பிற விழுந்துருகி. | 56-1 |
|
'பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் இவர்ந்தே, அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில், கொடியோன். | 58-1 |
|
'சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின் பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்; பெரியோய்! இற்று அவன் செயல்' என்று கொண்டு இனையன உரைப்பான்: | 58-2 |
|
'ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன் மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி, ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும், காது வெஞ் சினத்து அரக்கர் தம் வலிமையும், கடந்தான். | 59-1 |
|
மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும் தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும், எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக் குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். | 63-1 |
|
'இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது எவனோ? அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான் அணிந்த கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள் இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான். | 65-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5. ஒன்னார் வலி அறி படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இலங்கை, இராமன், பெரும், இலங்கையின், கொண்டு, வாயிலின், பெருந், இரட்டி, அலங்கல், ஆக்கிய, உலப்பினும், இராவணன், என்னும், கோடியின், சென்று, என்பரால், பழுத்து, அரக்கர், நோக்கும், காவலர், பொருள், அமைந்த, தொழில், அன்னவன், தவத்தின், விசும்பிடை, கரந்து, ஆழியாய், வாங்கி, தீயவர், வைகும், கோடியால், வீடணன், இராவணனது, கோயில், அவ்வழி

