கம்ப இராமாயணம் - 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
இராமன் முடிசூடப்படுவதை கோசலையிடம் அறிவிக்க மங்கையர் நால்வர் மகிழ்வுடன் செல்லுதல்
ஆண்ட அந்நிலை ஆக - அறிந்தவர் பூண்ட காதலர், பூட்டு அவிழ் கொங்கையர், நீண்ட கூந்தலர், நீள் கலை தாங்கலர், ஈண்ட ஓடினர், இட்டு இடை உற்றிலர். | 1 |
ஆடுகின்றனர்; பண் அடைவு இன்றியே பாடுகின்றனர்; பார்த்தவர்க்கே கரம் சூடுகின்றனர்; சொல்லுவது ஓர்கிலர்; மாடு சென்றனர்; - மங்கையர் நால்வரே. | 2 |
மங்கையரிடம் மகிழ்வுக்கான காரணத்தை கோசலை வினாவுதல்
கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள், கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை; 'உண்டு பேருவ கைப்பொருள் அன்னது தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்டு!' என்றாள் | 3 |
மங்கையர் கோசலைக்கு செய்தி அறிவித்தல்
'மன் நெடுங் கழல் வந்து வணங்கிட, பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!' என, நின் நெடும் புதல்வன் தனை, நேமியான், தொல் நெடும் முடி சூட்டுகின்றான்' என்றார். | 4 |
கோசலையின் மன நிலை
'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில் பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற, வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால் - துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே. | 5 |
செய்தி சொன்னவர்க்கு பரிசு வழங்கி கோசலை சுமித்திரையுடன் கோயிலுக்குப் போதல்
அன்னவளாயும், அரும்பெறல் ஆரமும், நல் நிதிக்குவையும், நனி நல்கித்தன் துன்னு காதல் சுமித்திரை யோடும் போய், மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள். | 6 |
கோசலை திருமாலின் திருவடிகளை வணங்குதல்
மேவி, மென் மலராள், நிலமாது எனும் தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும் ஆவியும், அறிவும், முதல் ஆயவன் வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள். | 7 |
கோசலை திருமாலை வணங்கி இராமனுக்கு அருள் புரிய வேண்டுதல்
'என்வயின் தரும் மைந்தற்கு, இனி, அருள் உன்வயத்தது' என்றாள் - உலகு யாவையும் மன்வயிற்றின் அடக்கிய மாயனைத் தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள். | 8 |
கோசலை கோதானம் புரிதல்
என்று இறைஞ்சி, அவ் இந்திரை கேள்வனுக்கு ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை நன்று இழைத்து, அவண், நல்ல தவர்க்கு எலாம் கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள். | 9 |
தயரதன் வசிட்டனை வரவழைத்தல்
'பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு' என்றனர், திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல் பெருந் திண் மால் யானையான், 'பிழைப்பு இல் செய் தவம் வருந்தினான் வருக' என, வசிட்டன் எய்தினான். | 10 |
இராமனுக்கு உறுதிமொழிகளை கூறும்படி வசிட்டனை தயரதன் வேண்டுதல்
'நல்லியல் மங்கல நாளும் நாளை; அவ் வில்லியல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும் சொல்லுதி பெரிது' எனத் தொழுது சொல்லினான். | 11 |
தம் மனைக்கு வந்த வசிட்டனை இராமன் வரவேற்றல்
முனிவனும், உவகையும் தானும் முந்துவான், மனுகுல நாயகன் வாயில் முன்னினான்; அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும், இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான். | 12 |
இராமனிடம் 'நாளை உனக்கு முடிசூட்டு விழா' என வசிட்டன் கூறுதல்
ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல் மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்; 'புல்கு காதல் புரவலன், போர் வலாய்! நல்கும் நானிலம் நாளை நினக்கு' என்றான். | 13 |
இராமனுக்கு வசிட்டன் கூறிய அறிவுரை
என்று, பின்னும் இராமனை, நோக்கி, "நான் ஒன்று கூறுவ துண்டு, உறுதிப் பொருள்; நன்று கேட்டுக் கடைப்பிடி நன்கு' என துன்று தார் அவற்கு சொல்லுதல் மேயினான். | 14 |
'கரிய மாலினும், கண்ணுத லானினும், உரிய தாமரை மேல் உறைவானினும், விரியும் பூதம் ஒர் ஐந்தினும், மெய்யினும், பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால். | 15 |
'அந்தணாளர் முனியவும், ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும், தேவருள் நொந்து உளாரையும், நொய்து உயர்ந்தாரையும், மைந்த! எண்ண, வரம்பும் உண்டாம்கொலோ? | 16 |
'அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ- வினையின் நீங்கிய மேலவர் தாளிணை புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி; இனிய கூறிநின்று ஏயின செய்தியால். | 17 |
'ஆவதற்கும், அழிவதற்கும், அவர் ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும் தேவரைப் பரவும் துணை சீர்த்தே? | 18 |
'உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும், மருள் இல் வாணியும், வல்லவர் மூவர்க்கும்; தெருளும் நல் அறமும், மனச் செம்மையும், அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ? | 19 |
'சூது முந்துறச் சொல்லிய மாத்துயர், நீதி மைந்த! நினைக்கிலை; ஆயினும், ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு ஓதும் மூலம் அவையென ஓர்தியே? | 20 |
'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின், வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? | 21 |
'கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள் நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின் ஆளும் அவ் அரசே அரசு; அன்னது, வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே! | 22 |
'உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும், இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும், சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும், அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. | 23 |
'என்பு தோலுடையார்க்கும் இலார்க்கும், தம் வன்பகைப்புலன் மாசு அற மாய்ப்பது என்? முன்பு நின்றுயர் மூன்று உலகத்தினும் அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ? | 24 |
'வையம் மன்னுயிர் ஆக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு, ஐயம் இன்றி, அறங்கடவாது, அருள் மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? | 25 |
'இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்; வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்; நினையும் நீதி நெறிகட வான் எனில் அனைய மன்னற்கு அழிவும் உண்டாங்கொலோ? | 26 |
'சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத் தாலம் அன்ன தனி நிலை தாங்கிய ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? | 27 |
"ஓர்வு இல் நல் வினை ஊற்றத்தினார் உரை, பேர்வு இல் தொல் விதி பெற்றுளது" என்றரோ, தீர்வு இல் அன்பு செலுத்தலில், செவ்வியோர் ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே. | 28 |
'தூம கேது புவிக்கெனத் தோன்றிய வாம மேகலை மங்கைய ரால்வரும் காமம் இல்லை எனில், கடுங் கேடெனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே. | 29 |
இராமனை வசிட்டன் திருமால் கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்
ஏனை நீதி இனையவும் வையகப் போன கற்கு விளம்பி, புலன்கொளீஇ ஆன வன்னொடும் ஆயிரம் மௌலியான் தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான். | 30 |
வசிட்ட முனிவன் இராமனுக்கு உரிய சடங்குகளை இயற்றுதல்
நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப் புண்ணி யப்புயல் ஆட்டிப், புலமையோர் எண்ணும் நல்வினை முற்றுவித்து, ஏற்றினான், வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ. | 31 |
நகரை அழகு செய்ய தயரதன் ஆணையிடல்
ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி, நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய், ஆற்றல்சால், அரசனுக்கு அறிவித்தான்; அவன் 'சாற்றுக, நகர் அணி சமைக்க' என்றனன். | 32 |
வள்ளுவன் பறை அறிவித்து செய்தி தெரிவித்தல்
ஏவினன் வள்ளுவர், 'இராமன், நாளையே பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக் கோ நகர் அணிக!' என, கொட்டும் பேரி அத் தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார். | 33 |
வள்ளுவன் சொல் கேட்ட மக்களின் மகிழ்ச்சி
'கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே புவி அமை மணிமுடி புனையும்' என்ற சொல், செவி அமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம் அவி அமுது ஆனது; அந் நகர் உளார்க்கெலாம். | 34 |
அயோத்தி மக்கள் மகிழ்ந்து நகரை அலங்கரித்தல்
ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்; வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம் மயிர் போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்; தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம். | 35 |
திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல், பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை மணியினை வேகடம் வகுக்குமாறு போல், அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே. | 36 |
வெள்ளிய, கரியன, செய்ய, வேறுள கொள்ளைவான் கொடிநிரைக் குழாங்கள் தோன்றுவ- கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே. | 37 |
மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்;- அங்கவர் கழுத்தெனக் கமுகம் ஆர்ந்தன; தங்குஒளி முறுவலின் தாமம் நான்றன; கொங்கையின் நிரைத்தன, கனக கும்பமே. | 38 |
முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில் கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என- மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் புதியன அலர்ந்தன புதவ ராசியே. | 39 |
துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம் வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின; புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின, பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே. | 40 |
முத்தினின் முழு நிலவு எறிப்ப, மொய்ம் மணிப் பத்தியின் இள வெயில் பரப்ப, நீலத்தின் தொத்து இனம் இருள் வரத் தூண்ட, சோதிட வித்தகர் விரித்த நாள் ஒத்த, வீதியே. | 41 |
ஆடல் மான் தேர்க்குழாம் அவனி காணிய வீடெனும் உலகின் வீழ் விமானம் போன்றன; ஓடைமாக் கடகளிறு உதய மால் வரை தேடருங் கதிரொடும் திரிவ போன்றவே. | 42 |
வளங்கெழு திருநகர் வைகும் வைகலும் பளிங்குடை நெடுஞ்சுவர் அடுத்த பத்தியில் கிளர்ந்துஎரி சுடர்மணி இருளைக் கீறலால்- வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே. | 43 |
பூமழை, புனல்மழை, புது மென் சுண்ணத்தின் தூமழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை, தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை, மா மழை நிகர்த்தன - மாட வீதியே. | 44 |
காரொடு தொடர் மதக் களிறு சென்றன, வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என; தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத் தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே. | 45 |
ஏய்ந்து எழு செல்வமும், அழகும், இன்பமும், தேய்ந்தில; அனையது தெரிந்திலாமையால், ஆய்ந்தனர் பெருகவும் - அமரர், இம்பரில் போந்தவர், 'போந்திலம்' என்னும் புந்தியால். | 46 |
அயோத்தி அலங்கரிக்கப்படுவதை கூனி காணுதல்
அந் நகர் அணிவுறும் அமலை, வானவர் பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில், இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல், துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள். | 47 |
கூனி கோபம் கொண்டு கைகேயின் அரண்மனை அடைதல்
தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்; ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்; கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்; மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள். | 48 |
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல் மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள், பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள் | 49 |
நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் பாற்கடல் படு திரைப் பவள வல்லியே- போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை- மேல் கிடந்தாள் தனை, விரைவின் எய்தினாள். | 50 |
கைகேயியை கூனி எழுப்புதல்
எய்தி, அக் கேகயன் மடந்தை, ஏடு அவிழ் நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் செய்த பேர் உவமைசால் செம் பொன், சீறடி கைகளின் தீண்டினள் - காலக் கோள் அனாள். | 51 |
கூனியின் உரை
தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள், நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்; மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை தூண்டிட, கட்டுரை சொல்லல் மேயினாள்; | 52 |
'அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும் குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல், பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும் உணங்குவாய் அல்லை; நீ உறங்கு வாய்' என்றாள். | 53 |
கைகேயின் மறுமொழி
வெவ்விடம் அனையவள், விளம்ப வேற்கணாள், 'தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர்; அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பவர்; எவ்விடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?' எனா, | 54 |
'பராவரும் புதல்வரைப் பயக்க, யாவரும் உராவருந் துயரைவிட்டு, உறுதி காண்பரால்; விராவரும் புவிக்கெலாம் வேத மேயன இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ ?' என்றாள் | 55 |
'கோசலை வாழ்ந்தனள்' என கூனி கூறலும், கைகேயின் வினாவும்
ஆழ்ந்த பேரன்பினாள் அனைய கூறலும், சூழ்ந்த தீ வினைநிகர் கூனி சொல்லுவாள், 'வீழ்ந்தது நின்னிலம்; திருவும் வீழ்ந்தது; வாழ்ந்தனள் கோசலை, மதியினால்' என்றாள். | 56 |
அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை 'மன்னவர் மன்னனேல், கணவன், மைந்தனேல் பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில் என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு?' என்றாள். | 57 |
மந்தரை இராமன் முடிசூடுவதால் கோசலைக்கு வரும் வாழ்வை எடுத்து இயம்புதல்
'ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற, தாடகை எனும் பெயர்த் தையலாள் பட, கோடிய வரி சிலை இராமன் கோமுடி, சூடுவன் நாளை; வாழ்வு இது' எனச் சொல்லினாள். | 58 |
இராமன் முடிசூடப்போவதை அறிந்த கைகேயி மனம் மகிழ்தல்
மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும் ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்; வேற்றுமை உற்றிலள், வீரன் தாதை புக்கு ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொலாம்? | 59 |
கைகேயி மந்தரைக்கு மணிமாலை பரிசளித்தல்
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ, தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற, தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம் நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள். | 60 |
கோபம்கொண்ட மந்தரை மாலையை எறிந்து கூறுதல்
தெழித்தனள்; உரப்பினள்; சிறுகண் தீயுக விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்; அழித்தனள்; அழுதனள்; அம்பொன் மாலையால் குழித்தனள் நிலத்தை-அக் கொடிய கூனியே. | 61 |
வேதனைக் கூனி, பின் வெகுண்டு நோக்கியே, 'பேதை நீ பித்தி; நிற் - பிறந்த சேயொடும் நீ துயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்' என்றாள். | 62 |
'சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன், அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது, உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது?' என்றான். | 63 |
'மறந்திலள் கோசலை, உறுதி மைந்தனும், சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான், இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான்? பிறந்திலன் பரதன், நீ பெற்றதால்' என்றாள். | 64 |
'சரதம் இப் புவியெலாம், தம்பியோடும் இவ் வரதனே காக்குமேல், வரம்பில் காலமும் பரதனும் இளவலும், பதியின் நீங்கிப்போய், விரதமாம் தவம்செய விடுதல் நன்றுஎன்றாள். | 65 |
'பண்ணுறு கடகரிப் பரதன், பார்மகள் கண்ணுறு கவினராய் இனிது காத்த அம் மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று' என்றாள். | 66 |
'பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு ஆக்கிய பொலங்கழல் அரசன், ஆணையால் தேக்குயர் கல்லதர், கடிது சேணிடைப் போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.' | 67 |
மந்தரை, பின்னரும் வகைந்து கூறுவாள்; 'அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் தந்தையும் கொடியன்; நல் தாயும் தீயளால்; எந்தையே! பரதனே! என்செய் வாய்?' என்றாள். | 68 |
'அரசரில் பிறந்து, பின் அரசரில் வளர்ந்து, அரசரில் புகுந்து, பேர் அரசி யான நீ கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்; உரைசெயக் கேட்கிலை; உணர்தியோ?' என்றாள். | 69 |
'கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும், வில்வினை உரிமையும், அழகும், வீரமும், எல்லையில் குணங்களும், பரதற்கு எய்திய; புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல்' என்றாள். | 70 |
மந்தரையின் கோப உரையால் கைகேயி சினந்து உரைத்தல்
வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல், காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற, கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள் தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்; | 71 |
வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர், உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்; மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை; செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்! | 72 |
'எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் - தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின், உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட, மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்! | 73 |
'பிறந்து இறந்துபோய்ப் பெறுவதும், இழப்பதும், புகழே; நிறம் திறம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின் திறம் திறம்பினும், செய்தவம் திறம்பினும், செயிர்தீர் மறம் திறம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ? | 74 |
'போதி, என் எதிர்நின்று; நின் புன் பொறி நாவைச் சேதியாது இது பொறுத்தனன்; புறம் சிலர் அறியின், நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய் ஆதி; ஆதலின், அறிவு இலி! அடங்குதி' என்றாள். | 75 |
மந்தரை மீண்டும் பேசுதல்
அஞ்சி மந்தரை அகன்றிலள், அம் மொழி கேட்டும், நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்தென்ன, 'தஞ்சமே! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்; வஞ்சி போலி!' என்று, அடிமிசை வீழ்ந்து, உரைவழங்கும் | 76 |
'மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம் காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்வண்ணன்? ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால், மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ? | 77 |
'அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும், பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்; மறம் நினைந்து உமை வலிகிலராயினும், மனத்தால் இறலுறும்படி இயற்றுவர், இடையறா இன்னல். | 78 |
'புரியும் தன்மகன் அரசு எனில், பூதலம் எல்லாம் எரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமையாம்; என்றால், பரியும் நின்குலப் புதல்வற்கும், நினக்கும் இப் பார்மேல் உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்! | 79 |
'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால் ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால் மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? | 80 |
'சிந்தை என் செயத் திகைத்தனை, இனி, சில நாளில், தம்தம் இன்மையும், எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க, உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற உன் குலத்து உள்ளோர், வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்! | 81 |
'காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச் சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன் மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ? பேதை! உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்? | 82 |
'மற்றும் நுந்தைக்கு வான்பகை பெரிதுள மறத்தார் செற்ற போது, இவர் சென்று உதவார் எனில், செருவில் கொற்றம் என்பது ஒன்று, எவ்வழி உண்டு? அது கூறாய்? சுற்றமும் கெடச் சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்! | 83 |
'கெடுத்து ஒழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர் உடுத்த பாரக முடையவன், ஒருமகற்கு எனவே கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும், அடுத்த தம்பிக்குமாம்; பிறர்க்கும் ஆகுமோ?' என்றாள் | 84 |
கைகேயி உள்ளம் திரிதல்
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர் மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும், ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும். | 85 |
அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும், துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்; இரக்கம் இன்மை அன்றோ, இன்று இவ் உலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே.? | 86 |
உள்ளம் திரிந்த கைகேயி பரதன் முடிசூட உபாயம் கேட்டல்
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம், வினை நிரம்பிய கூனியை, விரும்பினள், நோக்கி, 'எனை உவந்தனை; இனியை என் மகனுக்கும்; அனையான் புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி' என்றாள். | 87 |
மந்தரை உரைத்த உபாயம்
மாழை ஒண் கணி உரைசெய, கேட்ட மந்தரை, 'என் தோழி வல்லள்; என் துணை வல்லள்' என்று, அடி தொழுதாள்; 'தாழும் மன் நிலை; என் உரை தலைநிற்பின், உலகம் ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென்' என்றாள் | 88 |
'நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்; நளிர் மணி நகையாய்! தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை, ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் கோடி' என்றனள், உள்ளமும் கோடிய கொடியாள். | 89 |
'இரு வரத்தினில், ஒன்றினால் அரசு கொண்டு, இராமன் பெரு வனத்திடை ஏழ் - இரு பருவங்கள் பெயர்ந்து திரிதரச் செய்தி, ஒன்றினால்; செழு நிலம் எல்லாம் ஒருவழிப்படும் உன் மகற்கு; உபாயம் ஈது' என்றாள். | 90 |
கூனியைக் கைகேயி புகழ்ந்துரைத்தல்
உரைத்த கூனியை உவந்தனள், உயிர் உறத் தழுவி, நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி, 'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்; தரைக்கு நாயகன் தாய் இனி நீ' எனத் தணியா. | 91 |
கைகேயின் உறுதிமொழி
"நன்று சொல்லினை; நம்பியை நளிர்முடி சூட்டல்; துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்; இவ் இரண்டும் அன்றது ஆம்எனில், அரசன்முன் ஆர் உயிர் துறந்து பொன்றி நீங்குதல் புரிவென்யான்; போதிநீ" என்றாள் | 92 |
மிகைப் பாடல்கள்
பொன்னும் மா மணியும், புனை சாந்தமும், கன்னி மாரொடு காசினி ஈட்டமும், இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு; அன்ன முந்தளிர் ஆடையும் நல்கினாள் | 9-1 |
நல்கி, நாயகன் நாள்மலர்ப் பாதத்தைப் புல்லிப் போற்றி, வணங்கி, புரையிலா மல்லல் மாளிகைக் கோயில் வலங்கொளா தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் | 9-2 |
கடி கமழ் தாரினான், கணித மாக்களை முடிவு உற நோக்கி, ஓர் முகமன் கூறிப்பின் 'வடி மழுவாளவற் கடந்த மைந்தற்கு முடிபுனை முதன்மை நாள் மொழிமின்' என்றனன். | 9-3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. மந்தரை சூழ்ச்சிப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - என்றாள், மந்தரை, இராமன், பொருள், கைகேயி, திறம்பினும், கைகேயின், உனக்கு, வசிட்டன், உண்டாகுமோ, மகற்கு, மங்கையர், புனையும், செய்தி, இராமனுக்கு, கேகயன், அரசரில், உபாயம், நல்லையும், வாழ்வு, எனக்கு, எய்தினான், யாவையும், செல்வம், நெடும், கோசலைக்கு, நல்கினாள், தயரதன், நோக்கி, நாயகன், வசிட்டனை, என்றால்