கம்ப இராமாயணம் - 3. அகத்தியப் படலம்
மூவரும் தவக்குடிலில் இருந்து நீங்கல்
அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின், இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர், குனி வரு திண் சிலைச் குமரர், கொம்பொடும், புனிதனது உறையுள்நின்று அரிதின் போயினார். | 1 |
மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும், அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும், இலை செறி பழுவமும், இனிய சூழலும், நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினார். | 2 |
தண்டக வனத்தில் வாழும் தவமுனிவர்களின் மகிழ்ச்சி
பண்டைய அயன் தரு பாலகில்லரும், முண்டரும், மோனரும், முதலினோர்கள், அத் தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் கண்டனர் இராமனை, களிக்கும் சிந்தையார். | 3 |
கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஒர் வினை பிறிது இன்மையின், வெதும்புகின்றனர்; அனல் வரு கானகத்து, அமுது அளாவிய புனல் வர, உயிர் வரும் உலவை போல்கின்றார். | 4 |
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்; தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர் தாய் வர, நோக்கிய கன்றின் தன்மையார். | 5 |
கரக்க அருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின், பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர், அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார், ஒரு மரக்கலம் பெற்றென, மறுக்கம் நீங்கினார். | 6 |
தெரிஞ்சுற நோக்கினர்- செய்த செய் தவம் அருஞ் சிறப்பு உதவ, நல் அறிவு கைதர, விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந் துயர்ப் பெருஞ் சிறை வீடு பெற்றனைய பெற்றியார். | 7 |
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம் பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால், மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்; ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்அரோ. | 8 |
முனிவர்கள் மூவரையும் வாழ்த்தி, தம் குறை கூறல்
எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின் கொழுந்து என நின்ற அக் குரிசல் வீரனை; பொழிந்து எழு காதலின் பொருந்தினார், அவன் தொழும்தொறும் தொழும்தொறும், ஆசி சொல்லுவார். | 9 |
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி, 'இவ் வயின் நனி உறை' என்று, அவற்கு அமைய நல்கி, தாம் தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர் அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான். | 10 |
எய்திய முனிவரை இறைஞ்சி, ஏத்து உவந்து, ஐயனும் இருந்தனன்; 'அருள் என்? என்றலும், 'வையகம் காவலன் மதலை! வந்தது ஓர் வெய்ய வெங் கொடுந் தொழில் விளைவு கேள்' எனா, | 11 |
'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர், அரக்கர் என்று உளர் சிலர், அறத்தின் நீங்கினார், நெருக்கவும், யாம் படர் நெறி அலா நெறி துரக்கவும், அருந் தவத் துறையுள் நீங்கினேம். | 12 |
'வல்லியம் பல திரி வனத்து மான் என, எல்லியும் பகலும், நொந்து இரங்கி ஆற்றலெம்; சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்; வில் இயல் மொய்ம்பினாய்! வீடு காண்டுமோ? | 13 |
'மா தவத்து ஒழுகலெம்; மறைகள் யாவையும் ஓதலெம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்; மூதெரி வளர்க்கிலெம்; முறையின் நீங்கினோம்; ஆதலின், அந்தணரேயும் ஆகிலேம்! | 14 |
'இந்திரன் எனின், அவன் அரக்கர் ஏயின சிந்தையில் சென்னியில், கொள்ளும் செய்கையான்; எந்தை! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்? வந்தனை, யாம் செய்த தவத்தின் மாட்சியால். | 15 |
'உருளுடை நேமியால் உலகை ஓம்பிய பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்; அருளுடை வீர! நின் அபயம் யாம்' என்றார். | 16 |
இராமன் அபயம் அளித்தல்
'புகல் புகுந்திலரேல்; புறத்து அண்டத்தின் அகல்வரேனும், என் அம்பொடு வீழ்வரால்; தகவு இல் துன்பம் தவிருதிர் நீர்' எனா, பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான். | 17 |
'வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும், ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர் மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம் போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்' என்றான். | 18 |
'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை மறந்த புல்லர் வலி தொலையேன்எனின், இறந்துபோகினும் நன்று; இது அல்லது, பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? | 19 |
'நிவந்த வேதியர் நீவிரும், தீயவர் கவந்தபந்தக் களிநடம் கண்டிட, அமைந்த வில்லும் அருங் கணைத் தூணியும் சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால். | 20 |
'ஆவுக்கு ஆயினும், அந்தணர்க்கு ஆயினும், யாவர்க்கு ஆயினும், எளியவர்க்கு ஆயினும், சாவப்பெற்றவரே, தகை வான் உறை தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். | 21 |
'சூர் அறுத்தவனும், சுடர் நேமியும், ஊர் அறுத்த ஒருவனும், ஓம்பினும், ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர்'என்றான். | 22 |
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட, இரைத்த காதலர், ஏகிய இன்னலர், திரித்த கோலினர், தே மறை பாடினர்; நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார்; | 23 |
'தோன்றல்! நீ முனியின், புவனத் தொகை மூன்று போல்வன முப்பது கோடி வந்து ஏன்ற போதும், எதிர் அல; என்றலின் சான்றலோ, எம் தவப் பெரு ஞானமே. | 24 |
'அன்னது ஆகலின், ஏயின ஆண்டு எலாம், இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய்' எனச் சொன்ன மா தவர் பாதம் தொழுது, உயர் மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான். | 25 |
பத்து ஆண்டுகள் இனிது கழிதல்
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண், மைந்தர், தீது இலர் வைகினர்; மா தவர் சிந்தை எண்ணி, 'அகத்தியற் சேர்க' என, இந்து - நன்னுதல் தன்னொடும் ஏகினார். | 26 |
அகத்தியனைக் காணச் செல்லும் இராமனைச் சுதீக்கணன் உபசரித்தல்
விடரகங்களும், வேய் செறி கானமும், படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்; சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ் இடர் இலான் உறை சோலை சென்று, எய்தினார். | 27 |
அருக்கன் அன்ன முனிவனை அவ் வழி, செருக்கு இல் சிந்தையர், சேவடி தாழ்தலும், 'இருக்க ஈண்டு' என்று, இனியன கூறினான்; மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார். | 28 |
வைகும் வைகலின், மாதவன், மைந்தன்பால் செய்கை யாவையும் செய்து, 'இவண், செல்வ! நீ எய்த யான் செய்தது எத் தவம்? 'என்றனன்; ஐயனும், அவற்கு அன்பினன் கூறுவான்; | 29 |
'சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர் முன்னையோருள், உயர் தவம் முற்றினார் உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய என்னின் யார் உளர், இற் பிறந்தார்?' என்றான். | 30 |
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு, எதிர், நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்: 'அவம் இலா விருந்து ஆகி, என்னால் அமை தவம் எலாம் கொளத் தக்கனையால்' என்றான். | 31 |
மறைவலான் எதிர், வள்ளலும் கூறுவான்: 'இறைவ! நின் அருள் எத் தவத்திற்கு எளிது? அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர் குறை கிடந்தது, இனி' எனக் கூறினான். | 32 |
'நல்லதே நினைந்தாய்; அது, நானும் முன் சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ செல்தி ஆண்டு; அவற் சேருதி; சேர்ந்தபின், இல்லை, நின்வயின் எய்தகில்லாதவே. | 33 |
'அன்றியும் நின் வரவினை ஆதரித்து, இன்றுகாறும் நின்று ஏமுறுமால்; அவற் சென்று சேருதி; சேருதல், செவ்வியோய்! நன்று தேவர்க்கும்; யாவர்க்கும் நன்று' எனா, | 34 |
இராமன் அகத்தியனைக் காணல்
வழியும் கூறி, வரம்பு அகல் ஆசிகள் மொழியும் மா தவன் மொய்ம் மலர்த் தாள் தொழா, பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள் பொழியும் சோலை விரைவினில் போயினார். | 35 |
ஆண்தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான்; ஈண்டு, உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த, மாண்ட வரதன் சரண் வணங்க, எதிர் வந்தான் - நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான். | 36 |
பண்டு, 'அவுணர் மூழ்கினர்; படார்கள்' என வானோர், 'எண் தவ! எமக்கு அருள்க' எனக் குறையிரப்பக் கண்டு, ஒரு கை வாரினன் முகந்து, கடல் எல்லாம் உண்டு, அவர்கள் பின், 'உமிழ்க' என்றலும், உமிழ்ந்தான் | 37 |
தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்; ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்; மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக் காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர் களைந்தான் | 38 |
யோகமுறு பேர் உயிர்கள்தாம், 'உலைவுறாமல் ஏகு நெறி யாது?' என, மிதித்து அடியின் ஏறி, மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். | 39 |
மூசு அரவு சூடு முதலோன், உரையின், 'மூவா மாசு இல் தவ! ஏகு' என, வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். | 40 |
உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,- நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங் கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான். | 41 |
அகத்தியன், இராமனை வரவேற்று, அளவளாவல்
'"விண்ணினில், நிலத்தினில், விகற்ப உலகில், பேர் எண்ணினில், இருக்கினில், இருக்கும்" என யாரும் உள் நினை கருத்தினை, உறப் பெறுவெனால், என் கண்ணினில்' எனக் கொடு களிப்புறு மனத்தான். | 42 |
'இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு அரைத்தும், அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று உரைக்கு உதவுமால்' எனும் உணர்ச்சியின் உவப்பான் | 43 |
'உய்ந்தனர் இமைப்பிலர்; உயிர்த்தனர் தவத்தோர்; அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள்; ஆனா வெந் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் வந்தனன் மருத்துவன்' என, தனி வலிப்பான். | 44 |
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின் கான அனலைக் கடிது அவித்து, உலகு அளிப்பான், வான மழை வந்தது' என, முந்துறு மனத்தான். | 45 |
கண்டனன் இராமனை வர; கருணை கூர, புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய, நின்றான் - எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய, குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான் | 46 |
நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்; அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால், 'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்- என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் | 47 |
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற, காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர் மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ, போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். | 48 |
பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்; விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; 'விரும்பி, இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என் அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச!' என்றான். | 49 |
என்ற முனியைத் தொழுது, இராமன், 'இமையோரும், நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும், உன் தன் அருள் பெற்றிலர்கள்; உன் அருள் சுமந்தேன்; வென்றனென் அனைத்து உலகும்; மேல் இனி என்?' என்றான் | 50 |
'"தண்டக வனத்து உறைதி" என்று உரைதரக் கொண்டு, உண்டு வரவு இத் திசை என, பெரிது உவந்தேன்; எண் தகு குணத்தினை!' எனக் கொடு, உயர் சென்னித் துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: | 51 |
'ஈண்டு உறைதி, ஐய! இனி, இவ் வயின் இருந்தால், வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்; தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால், மாண்டு உக மலைந்து, எமர் மனத் துயர் துடைப்பாய்; | 52 |
'வாழும் மறை; வாழும் மனு நீதி; அறம் வாழும்; தாழும் இமையோர் உயர்வர்; தானவர்கள் தாழ்வார்; ஆழி உழவன் புதல்வ! ஐயம் இலை; மெய்யே; ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு உறைதி' என்றான் | 53 |
'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தித் தருக்கு அழிதர, கடிது கொல்வது சமைந்தேன்; வருக்க மறையோய்! அவர் வரும் திசையில் முந்துற்று இருக்கை நலம்; நிற்கு அருள் என்?' என்றனன் இராமன் | 54 |
இராமனுக்கு அகத்தியன் வில், கணை புட்டில் வழங்குதல்
'விழுமியது சொற்றனை; இவ் வில் இது இவண், மேல்நாள் முழுமுதல்வன் வைத்துளது; மூஉலகும், யானும், வழிபட இருப்பது; இது தன்னை வடி வாளிக் குழு, வழு இல் புட்டிலொடு கோடி' என, நல்கி, | 55 |
இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால் ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும், வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. | 56 |
பஞ்சவடியின் சிறப்பு
'ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி, மணல் ஓங்கி, பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி, தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் பாங்கர் உளதால், உறையுள் பஞ்சவடி - மஞ்ச! | 57 |
'கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின் செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப் பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதா, அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட | 58 |
மூவரும் அகத்தியனிடம் விடைபெற்றுச் செல்லுதல்
'ஏகி, இனி அவ் வயின் இருந்து உறைமின்' என்றான்; மேக நிற வண்ணனும் வணங்கி, விடை கொண்டான்; பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் போக, முனி சிந்தை தொடர, கடிது போனான். | 59 |
மிகைப் பாடல்கள்
'அருந் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின் புரந்திடும் தசமுகத்து ஒருவன், பொன்றிலாப் பெருந்தவம் செய்தவன், பெற்ற மாட்சியால் வருந்தினெம் நெடும் பகல்-வரத!-யாம் எலாம். | 14-1 |
'தேவர்கள் தமைத் தினம் துரந்து, மற்று அவர் தேவியர்தமைச் சிறைப்படுத்தி, திக்கு எலாம் கூவிடத் தடிந்து, அவர் செல்வம் கொண்ட போர் மா வலித் தசமுகன் வலத்துக்கு யார் வலார்? | 14-2 |
'அவன் வலி படைத்து, மற்று அரக்கர் யாவரும், சிவன் முதல் மூவரை, தேவர் சித்தரை, புவனியின் முனிவரை, மற்றும் புங்கவர் எவரையும் துரந்தனர்-இறைவ!-இன்னுமே. | 14-3 |
'ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல் மேய போர் அரக்கரே மேவல் அல்லதை, தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம், ஐயா! | 14-4 |
'வெள்ளியங் கிரியிடை விமலன் மேலை நாள், "கள்ளிய அரக்கரைக் கடிகிலேன்" எனா, ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான்; கடற் பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான். | 14-5 |
'நான் முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்; வானில் வெஞ் சுடர் முதல் வயங்கு கோள் எலாம் மேன்மை இல் அருஞ் சிறைப்பட்டு மீண்டுளார்.' | 14-6 |
என்று, பினும், மா தவன் எடுத்து இனிது உரைப்பான்; 'அன்று, அமரர் நாதனை அருஞ் சிறையில் வைத்தே வென்றி தரு வேல் தச முகப் பதகன் ஆதி வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே! | 53-1 |
'ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே, தூய தவ வாணரொடு தொல் அமரர்தம்மை நீ தனி புரந்திடுதல் நின் கடனது' என்றான்; நாயகனும், 'நன்று!' என அவற்கு நவில்கின்றான். | 53-2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3. அகத்தியப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - அரக்கர், என்றான், நீங்கினார், வாழும், ஆயினும், நின்று, தோன்றல், உலகும், அவற்கு, வனத்து, இராமனை, சொல்லுவான், இராமன்