கம்ப இராமாயணம் - 9. அகலிகைப் படலம்
மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல்
|
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல், புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல், சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார். | 1 |
|
நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக் கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன், உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில் கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான். | 2 |
மூவரும் இரவு சோலையில் தங்குதல்
|
கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப, பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார். | 3 |
மூவரும் கங்கை நதியைக் காணுதல்
|
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான் நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள், மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். | 4 |
|
அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார், செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன் பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும் கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். | 5 |
மூவரும் மிதிலை சேர்தல்
|
பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை, வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா, அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். | 6 |
மிதிலை நாட்டு வளம்
|
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க, அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப, நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின், கரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. | 7 |
|
பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால், எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப, வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர் கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. | 8 |
|
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர, கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய், ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி, பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. | 9 |
|
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும், துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும், அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம் நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். | 10 |
|
இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை, மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம் முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. | 11 |
|
படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி, கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி, மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார் குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள். | 12 |
அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணுதல்
|
இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்; மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். | 13 |
கல்லின்மேல் இராமனது பாத தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல்
|
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,- உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம் கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,- பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: | 14 |
அகலிகையை வரலாறு
|
'மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த! மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள், தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண் ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்' என்றான். | 15 |
|
பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன், 'என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்! முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ ? அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக!' என்றான் | 16 |
|
அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி, 'செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல் அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி, நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்; | 17 |
|
'தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய, உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து, பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான். | 18 |
|
'புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும், 'தக்கது அன்று' என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான். | 19 |
|
'சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா, நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்; புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான். | 20 |
|
'தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால், "ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக" என்று ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன், இமைப்பின் முன்னம் | 21 |
|
'எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப் புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை, மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும் கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள். | 22 |
|
'"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால், அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!" என்ன, "தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான் கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி" என்றான். | 23 |
|
'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ? மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன் கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.' | 24 |
அகலிகை இராமன் பாதம் பணிந்து செல்லுதல்
|
தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல், கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு 'மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே, போது நீ, அன்னை!' என்ன பொன் அடி வணங்கி போனாள். | 25 |
அகலிகையை கௌதமரிடம் சேர்த்த பின் மூவரும் மிதிலையில் புறமதிலை அடைதல்
|
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும், விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன், பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல் புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, | 26 |
|
'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம், வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்; நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன, கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான் | 27 |
|
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள் வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். | 28 |
மிகைப் பாடல்கள்
|
'இனைய சோலை மற்று யாது?' என இராகவன் வினவ, வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; 'மேல்நாள், தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது மனையுளாள் தவம் புரிந்தனள், இவண்' என வலித்தான். | 3-1 |
|
'அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை, புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ, வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து. | 3-2 |
|
'அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம், கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா, "என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்" என்று, அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். | 3-3 |
|
'"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன் இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல், அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள் அளியால், | 3-4 |
|
'"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல், ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?" என ஆடி, வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய் உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான் | 3-5 |
|
'பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும் செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின் மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும் மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க, | 3-6 |
|
'அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன் சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப, கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க, | 3-7 |
|
'நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை போலவே, இரு புடையினும், சாமரை புரள, கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி, மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க, | 3-8 |
|
'தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும், வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப, முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான். | 3-9 |
|
'தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன் கை வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி, துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்; பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது, அப் பகடு. | 3-10 |
|
'"கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால், அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்" என்று, அழியா, விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட; எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும். | 3-11 |
|
'புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின் நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்; சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப, "மிகை எழுந்திடு சதமக! கேள்" என வெகுண்டான். | 3-12 |
|
'"பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு இல் வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும் ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால். | 3-13 |
|
'"இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும் ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப, குன்றி, நீ துயர் உறுக" என உரைத்தனன், கொதித்தே. | 3-14 |
|
'அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம், சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின். | 3-15 |
|
'அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து, வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த, "நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால், நயக்க முந்தும்" என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான். | 3-16 |
|
'வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம் வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும், தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி, செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார். | 3-17 |
|
'வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி, கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும், "தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்" எனச் செப்ப, "அஞ்சல், அஞ்சல்!" என்று உரைத்தனன், உலகு எலாம் அளந்தோன் | 3-18 |
|
'"மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண் மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து, கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்; | 3-19 |
|
'"யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென எழுந்து போமின்" என்று அருள்புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்து, "நாமம் இன்று" எனக் குனித்தனர், நல்குரவு ஒழிந்தது. ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர். | 3-20 |
|
'மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்; அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான். | 3-21 |
|
'திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப, மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே, அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான். | 3-22 |
|
'இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால், பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க, சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார். | 3-23 |
|
'வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து, தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி, மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி, திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி, | 3-24 |
|
'அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள், வந்து காசிபன் மலரடி வணங்கி, "என் மைந்தர் இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர் மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு" என்றாள். | 3-25 |
|
'என்று கூறலும், "மகவு உனக்கு அளித்தனம்; இனி, நீ, சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர, நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி" என்று அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள். | 3-26 |
|
'கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து, வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி, நாட்டம் நீர் தர, "மருந்து" எனும் நாமமும் நவின்றான். | 3-27 |
|
'ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான்.' | 3-28 |
|
'இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும், எந்தை! கூறுக' என்று இராகவன் வினவுற, 'எனை ஆள் மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ் விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான். | 5-1 |
|
'விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்; பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். | 5-2 |
|
'திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள் கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று, வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்; ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். | 5-3 |
|
'வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி, பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து, தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து, மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு. | 5-4 |
|
'கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த, வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி, நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி, தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற. | 5-5 |
|
'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக் கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்; ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின் சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார். | 5-6 |
|
'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப, பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல், ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்; வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர். | 5-7 |
|
'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா, அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல், இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து, தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். | 5-8 |
|
'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன் புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ, "கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான். | 5-9 |
|
'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால் தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா, முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் - எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து. | 5-10 |
|
'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப, மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும் நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில், பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான். | 5-11 |
|
'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி, இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம், அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன் திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்: | 5-12 |
|
'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர் முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம், அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்: | 5-13 |
|
'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர் உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே, செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி; நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன், | 5-14 |
|
'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி, கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி, காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப, மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்: | 5-15 |
|
'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர், முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால், மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி, என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான். | 5-16 |
|
'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன் வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்; தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். | 5-17 |
|
'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம் தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள் அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்; கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான். | 5-18 |
|
'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்? பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்? அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து, பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள். | 5-19 |
|
'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை, நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா, அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், | 5-20 |
|
'எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும! அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்! பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை, முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். | 5-21 |
|
'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும் பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம், உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான். | 5-22 |
|
'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும் இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து, வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன் சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர. | 5-23 |
|
'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன் சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து, மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று" என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள். | 5-24 |
|
'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக, கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால், அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப, கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா, | 5-25 |
|
'உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப, கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற, "கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து, விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே. | 5-26 |
|
'நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல, விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்; முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க, அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான் | 5-27 |
|
'அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார் கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர, மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த! | 5-28 |
|
'சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி, பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி" ஆகி, மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால், நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம்'. | 5-29 |
|
என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி, சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக் குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக, நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா, | 5-30 |
|
மது மலைந்த் வெண் தரளமும், (வயிரமும்), மணியும், கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி, எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக), புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம். | 7-1 |
|
அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச் சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க, தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். | 23-1 |
|
'வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்; எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி' என்ன, 'பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக, அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம்' என்றான். | 23-2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
9. அகலிகைப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - ஆயிரம், கொண்டு, நோக்கி, நின்று, யாவையும், மூவரும், வண்ணம், வணங்கி, புக்கு, அகலிகை, உரைத்தனன், மிதிலை, என்றான், பெரும், நாயகன், நீங்கினர், வெகுளியால், மன்னவன், வேந்தனுக்கு, விண்டு, இன்றியே, சென்னியில், எழுந்து, கண்டார், நின்றாள், கடவுள், புண்டரீக, சென்று, நெடுங், தெரியல்

