ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயண குமார காவியம்
மகத காண்டம்
வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல்
சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான் நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும் வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். | 151 |
செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. | 152 |
உதயணன் மகதநாடு அடைதல்
கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம் காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன் காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். | 153 |
அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்
மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம் தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன் இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற் பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. | 154 |
காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்
காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற் சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில் நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. | 155 |
காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்
திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும் தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். | 156 |
பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்
பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத் திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். | 157 |
உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்
யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக் காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின் சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. | 158 |
உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்
எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும் மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத் தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். | 159 |
பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்
மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத் தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக் காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். | 160 |
அமைச்சன் உருமண்ணுவாவின் உரை
ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப் போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும் போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. | 161 |
அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்
உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள் மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள் மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். | 162 |
உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்
யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப் பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். | 163 |
சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு
அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப் படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான் முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான் உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். | 164 |
மகதத்தை அழிக்கத் துவங்குதல்
தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார் தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். | 165 |
அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி
கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். | 166 |
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம் இன்னு ரைகளியல்பின் வரவரத் துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை உன்னினர்கரந் துரைகள் பலவிதம் | 167 |
பகைவர் ஐயுற்று ஓடுதல்
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின் முரியும் சேனை முயன்றவ ரோடலிற் றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம் மருவி யையம் மனத்திடை நீங்கினார். | 168 |
பகைவர் கூடி விவாதித்தல்
இரவு பாசறை யிருந்தவர் போனதும் மருவிக் கூடியே வந்துடன் விட்டதும் விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின் அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். | 169 |
அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்
வார ணிக் கழல் வத்தவன் றன்செயல் ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக் கேரணிய ரசருக் கியல் கூறலும் தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். | 170 |
தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்
ஆரா வுவகையுள் ளாகி யரசனும் பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன் நேரா மாற்றரை நீக்குவனானென்றான். | 171 |
படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும் நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப் புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன் நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். | 172 |
உதயணன் பதுமாவதி மணம்
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத் தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின் மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். | 173 |
தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்
புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின் பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன் துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம் அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. | 174 |
அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும் நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும் பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும் உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். | 175 |
சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம் பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். | 176 |
வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச் செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன் எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். | 177 |
பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்
பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும் தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும் அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர் பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர். | 178 |
வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்
வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப் பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம் திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப் பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர். | 179 |
உதயணன் ஆருணி அரசன் போர்
அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச் சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும் அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன் அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே. | 180 |
போர்க் காட்சிகள்
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும் பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும் முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும் வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே. | 181 |
உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்
மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத் தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால் மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே. | 182 |
உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்
பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன் நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன். | 183 |
உதயணன் அரண்மனை புகுதல்
மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக் கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார் பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல் ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன். | 184 |
உதயணன் திருமுடி சூடுதல்
படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன் இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின் தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள். | 185 |
வத்தவ காண்டம்
உதயணன் அரசு வீற்றிருத்தல்
மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப் பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில் தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல் மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் | 186 |
உதயணனின் கொடை
மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக் கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான். | 187 |
உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்
மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத் துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப் பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே. | 188 |
உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்
அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான் திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே. | 189 |
பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்
மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும் மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள். | 190 |
உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன் ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான். | 191 |
உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்
கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார் அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள் கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம் இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார். | 192 |
உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்
வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம் தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே. | 193 |
அமைச்சர் உருமண்ணுவா விடுதலை
என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான். | 194 |
உருமண்ணுவா உதயணனை அடைதல்
மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக் காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே. | 195 |
வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்
வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும் ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும் தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார். | 196 |
உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்
நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள் வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப் பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை. | 197 |
யூகியின் உரை
இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும் திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன் அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே. | 198 |
உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்
ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச் சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட. | 199 |
பதுமாவதியின் வேண்டுகோள்
யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான் நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின் பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள் ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான். | 200 |
வாசவதத்தையின் ஊடல்
என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்து சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில் வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள் கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள். | 201 |
உதயணன் ஊடலைப் போக்குதல்
பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன் கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்ன ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும் நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான். | 202 |
இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்
நங்கைதன் மனங்கலங்கா நலம்புகழ்ந் தூடனீக்கி வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ்வ வேபோற் பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச் சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தானன்றே. | 203 |
உருவிலி மதன்கணைகளுற்றுடன் சொரியப் பாய இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல் திரிநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே. | 204 |
கோதையுஞ் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதினோடப் போதவும் விடாது புல்லிப் புரவலனினியனாகி ஏதமொன் றின்றிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில். | 205 |
உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
ஆனதன்னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே ஊனுமிழ் கதிர்வேன் மன்னனுருமண்ணுவாவு தன்னைச் சேனைநற்பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி ஈனமி விராசனைய யெழில்வேள்வி யாற்கொ டுத்தான் . | 206 |
உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே இயைந்தநல் லிடபகற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த செயந்தரு வளநன்னாடு சிறந்தவைம் பதும் அளித்து வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தானன்றே. | 207 |
யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல சேதிநன்னாட்டை யூகிக் காக நற்றிறத்தினீந்து சோதிநல்லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம் வீதி நன்னகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான். | 208 |
உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் தூதர் வந்து வாசகம் தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின்றானே. | 209 |
ஓலையில் வந்த செய்தி
பிரச்சோதன னன்றா னென்னும் பெருமகனோலை தன்னை உரவுச்சேர் கழற்கான் மிக்க வுதயண குமரன் காண்க வரவுச்சீர்க் குருகுலத்தின் வண்மையான் கோடல் வேண்டி வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன். | 210 |
கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச் சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு நலந்திகழ் தேரினேற்றி நன்குவுஞ் சயினி தன்னிற் பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும். | 211 |
கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும் மாமனான் மருகனீ யென் மாமுறை யாயிற் றென்றும் ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும் பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான். | 212 |
உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்
மன்னவனனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப மன்னனு முடிய சைத்த மைச்சனை நெடிது நோக்கி மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பினானே. | 213 |
பிரச்சோதனன் முரசறைவித்தல்
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கெள சாம்பியும் பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம் ஆர்மிகு முரச மறைகென நகரில் தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன். | 214 |
யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்
தருமநன்னூல்வகை சாலங் காயனோ டருமதி யூகியு மன்பினுரைத்தான் பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத் திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான். | 215 |
கல்விய தகலமுங் காட்சிக் கினிமையும் சொல்லருஞ் சூட்சியுஞ் சொற் பொருட் டிண்மையும் வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின் றெல்லையில் குணத்தினன் என்றுரை செய்தனன். | 216 |
இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல் இன்னவ ரின்றி யிலையர சென்றே இன்னன நீடிய வியல் பிற் பிறவுரை மன்னவனாடி மகிழ்வித் திருந்த பின் 217 |
யூகியின் திருமணம்
சாலங் காயன் சகோதர மானநன் னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற் பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக் கோலங் காரன்ன கூரெயி றாப்பியும். | 218 |
பரதகன்றங்கை பான்மொழி வேற்கணி திருநிலம்புகழ் திலதமா சேனையும் பெருநில மறிய மணமிகப் பெற்றுடன் அரிய யூகிக் கரசன் கொடுத்தளன். | 219 |
சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன் நன்முது நகர்முன்னாடிப் போவெனப் பன்மதி சனங்கள் பரவி வழிபட வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன். | 220 |
யூகி உதயணனை அடைதல்
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன் இத்தல முழுது மாளுமினியநன் மாமன் சொன்ன ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துடனிருந்த போழ்தில் சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் செல்வார். | 221 |
உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்
பந்தடி காண்க வென்னப் பார்த்திபனினியனாகிக் கலந்துகப் பூசல் காணக் களிற்றின்மீதேறி வந்து கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப வந்தனன் பதுமை தோழி வனப்பிராசனையென் பாளாம். | 222 |
மகளிரின் பந்துப் போர்
ஓரெழுபந்து கொண்டே யொன்றொன்றி நெற்றிச் செல்ல பாரெழு துகளு மாடப் பலகலனொலிப்ப வாடிச் சீரெழு மாயி ரங்கை சிறுந்தவ ளடித்துவிட்டாள் காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள். | 223 |
வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக் காய்பொனின் கலன்களார்ப்பக் கார்மயிலாட்டம் போல ஆயிரத் தைஞ்நூறேற்றி யடித்தன ளகல வப்பால் ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராபதிபந்து கொண்டாள். | 224 |
சீரேறும் இமில் போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப் பாரோர்கள் இனிது நோக்கும் பலகலஞ் சிலம்போடார்ப்ப ஈராயிரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள் தோராத வழகி தத்தை தோழிவிச்வ லேகை வந்தாள். | 225 |
கருங்குழ நெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெடுத்துப் பெருங்கலனினிதினார்ப்பப் பெய்வளை கலக லென்ன ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ் நூ றடிட்த்து விட்டாள் கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள். | 226 |
ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச் சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச் சீரின்மூவாயிரங்கை சிறந்தவ ளடித்த பின்பு பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதினோக்கா. | 227 |
உதயணன் விரிசிகை மணம்
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட் காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட பூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத் தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே. | 240 |
உதயணனின் ஆட்சிச் சிறப்பு
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத் துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத் திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான். | 241 |
நரவாகன காண்டம்
வாசவதத்தை மசக்கை எய்துதல்
எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும் பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும் முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242 |
வாசவதத்தையின் விருப்பம்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட் பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும் குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே. | 243 |
உருமண்ணுவாவின் உரை
உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப் பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம் மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப் பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே. | 244 |
இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான் சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான் பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான். | 245 |
தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும் நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச் சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும். | 246 |
மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச் சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான். | 247 |
உதயணன் உரை
எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம் திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான். | 248 |
தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின் உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள் கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப் புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான். | 249 |
அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும் மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம் உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார். | 250 |
உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும் இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார். | 251 |
நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப் போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச் சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம். | 252 |
மக்கட்குப் பெயரிடுதல்
நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான் விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம் பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன் குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே. | 253 |
நரவாகனன் கலைபயிலுதல்
நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம் மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப் பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே. | 254 |
நரவாகனன் உலாப் போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன் மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர் வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர் சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான். | 255 |
நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக் களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான். | 256 |
நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின் இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே. | 257 |
மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான் திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே. | 258 |
மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே. | 259 |
வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப் பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே. | 260 |
வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப் புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான் தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால். | 261 |
மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்
மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல் வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள் இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன் புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள். | 262 |
தாது திர்ந்து தரணியிற் பம்பிட மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல் பேதையைக் கண்டுபீடுடைக் களையும் தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன். | 263 |
மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்
ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத் தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன் பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப் பாங்கில் வந்து பலவுரை செய்தனள். | 264 |
நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக் காட்டவே கண்டு காளை கலந்தனன் ஊட்ட வேகணை யுன்னத மாரனே. | 265 |
மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும் துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன் உன்னி வந்தவள் போன தறிந்துரை பன்னி வந்திரு வோரையும் பற்றினன். | 266 |
மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின் ஈனகஞ் செல வேலக் குழலியும் தான கம்விஞ்சை தானுடன் விட்டனள் கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன். | 267 |
நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக் கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம் எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன். | 268 |
போதி தன்வலிப் போத வுணர்ந்து தன் காதலிற்சென்று காளைதன்னாமமும் ஏதமில் தந்தை யெய்திய நாமமும் போதச் செப்பலும் போந்து பணிந்தனன். | 269 |
நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை அந்த மில் குணத் தையநீ ராரென் முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச் சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன். | 270 |
விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென் தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு எஞ்சு லின்னிலை மையது வென்றென விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான். | 271 |
முனிவனின் கூற்று
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம் உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத் தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான் கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின் | 272 |
நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்
மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத் தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின் தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும் ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன். | 273 |
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின் தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன் வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை ஈன மில்கும் ரன்னினி தேறினான். | 274 |
நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத் தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில் இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன். | 275 |
நரவாகனனை வித்தியாதரன் காணுதல்
நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன் நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன் அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன் | 276 |
நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும் தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான் அண்ணல் கேட்க வரிய வரைமிசைக் கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம். | 277 |
காவலன்னீல வேகற்குக் காரிகை நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும் பூவிளங்கொடி புத்திரி நாமமும் மேவி ளங்சூமநங்கவி லாசனை. | 278 |
சுரும்பார் மாலையளித் துயிலிடைக் கரும்பார் நன்மொழி காதற் கனவிடை விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான் பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே. | 279 |
வரைமி சைவந்து மன்னிய தன்முலை அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும் அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள் | 280 |
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன் சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன் நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன். | 281 |
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும் செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும் அறைந்த நின்மகட் காகு மணவரன் நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன். | 282 |
அம்முனிவன்சொலரசன் கேட்டுடன் தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச் செம்மை யெண்ணியே செப்பி விட்டனன் உம்மைக் கண்டனன் செல்க வென்றனன். | 283 |
நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்
போவதே பொருள் புண்ணியற்கொண்டு தேவனேயெனச் செல்வனுஞ்செலும் காவலன்னெதிர் கண்டு கண்மகிழ் ஏவலாளரோடினிதினெய்தினான். | 284 |
நீலவேகனின் ஆசை
கன்னல் விற்கணையில்லாக் காமனை இன்னி லக்கண மேற்ற காளையை மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான் பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன். | 285 |
அநங்க விலாசனை சுயம்வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால் சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை இனத்தொர் மாவர மியம்பி விட்டனர். | 286 |
அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்
மன்ன ரீண்டியே வந்திருக்கையில் அன்ன மென்னடை யமிர்த மன்னவள் மின்னின் மாலையை விரகினேந்திமுன் சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள். | 287 |
மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின் திருமணஞ் செய்து செல்வனின்புற இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர் வெருவு மானச வேகன் றன்மனம் 288 |
நரவாகனனின் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும் நாக நீள்புர நடுவிற் றோன்றலும் காமனேயெனக் கன்னி மங்கையர் தாமரைக்கணாற் றான்ப ருகுநாள். | 289 |
நரவாகனின் சிறப்புகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும் வாம நாகர் தம் மலையிற் சென்றனன் தாம மார்பனைத் தரத்திற் கண்டவர் நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290 |
நாம விந்திரனன்க ருள்செயக் காமனுக்கீந்து கண்டு சேவித்துத் தாம வந்தரர் தாம்ப ணிந்திடத் தோமனாலிரண் டொன்ற வாயிரம். | 291 |
நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்
சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன் தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம் அக்கணத்தினி லடிப்ப டுத்தினன். | 292 |
நரவாகனனின் வெற்றி
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன் தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே எஞ்ச லில்புரமிந்திரன்னென மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன். | 293 |
நரவாகனனின் மாட்சி
மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட விதன மின்றிநல்வேக வதியுடன் அதிக போக வநங்க விலாசனை அதிக வெண்ணா யிரமான தேவியர் | 294 |
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின் இனிய புண்ணிய மீண்டி மேல்வரத் தனிய ரசினைத் தானி யற்றியே நனிய தொன்றினன்னாம வேலினான். | 295 |
நரவாகனன் தந்தையைக் காண வருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர் பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன் மஞ்சு சூழ்மலை விட்டு வானவர் தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான். | 296 |
புரம திக்கப்பூ மாலை தோரணம் வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர் விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன். | 297 |
நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்
தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின் இந்து வாணுத லெழின்ம டந்தையர் வந்து மாமனை வணங்கி மாமியை அந்த மில்வனத் தடியி றைஞ்சினார். | 298 |
உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின் நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும் மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன் மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன். | 299 |
பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம் கொதிநுனைவேலின் கோமு கன்றனை இதம ளித்திடு மிளவ ரைசென அதுல நேமியனரசு நாட்டினான். | 300 |
நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற் றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும் இந்திரன்றானூ ரியல்பினேகினான். | 301 |
செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச் செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே. | 302 |
துறவுக் காண்டம்
உதயணனின் தவ எண்ணம்
வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்க உளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார் இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும் துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும். | 303 |
மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன் புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய எண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும் புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான். | 304 |
உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்
ஆசை யென்றனக் கருளும் தோழனா ஓசை வண்புகழ் யூகி யானதும் வாச வதத்தை மனைவி யானதும் பேச ரும்மகப் பெற்றெடுத்ததும். | 305 |
நரவாகனன்மக னாம மானதும் வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங் கரண நேமியா லடிப்ப டுத்ததும் பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும் | 306 |
மிக்க விந்திரன் மேவி விட்டதும் தக்க புத்திரன் றரத்திற் சென்றதும் தொக்க வானவர் தொல்சி றப்புடன் அக்கணம்விட வண்ணல் போந்ததும். | 307 |
போந்து புண்ணியன் பொருவில் போகத்துச் சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா வேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக் காந்தி வாமனைக் கண்டடி தொழும் | 308 |
உதயணனை மகளிர் மயக்குதல்
எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன் புண்ணி யநோன்பு போந்த வேளைவேற் கண்ணின் மாதர்கள் காவ லன்மனம் உண்ணக் காமத்தை யுருவு காட்டினார். | 309 |
உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்
மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற் றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட் சொன்ன மும்மதந் தோன்ற வேழமும் உன்னிக் காற்றளை யுதறி விட்டதே. | 310 |
மதவெறி கொண்ட யானை
காய்ந்து வெம்மையிற் காலன் போலவே பாய்ந்து பாகரைப் பலசனங்களைத் தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல் ஆய்ந்த கண்களு மருவ ரையென. | 311 |
வெடிப டும்முழக் கிடியெனவிடும் கொடியு டைமதில் கிடுகி டென்றிடும் விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப் படப டென்னவே பயண மானதே. | 312 |
நகர மாந்தர் செயல்
அடிய டிய்யென வாயு தர்செலப் படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத் திடுதி டென்றொலி தெறித்த பேரிகை நடுந டுங்கினார் நகர மாந்தரே. | 313 |
களிற்றின் வெறிச்செயல்
பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக் குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன் கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட இடர்ப டுங்களி றெய்தி யோடுமே. | 314 |
நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்
நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற் சிகரம் போன்முடிச் சீர ரசற்குப் பகர வாரணம் பலரைக் கொன்றதென் சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான். | 315 |
யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்
நீல நற்கிரி நெடிய யானையும் மாலை நற்போது மாய்ந்து பின்னுறக் காலை நற்போதாற் கனன்று தோன்றின சோலை நல்வய றுகைத்த ழித்ததே. | 316 |
வழிவ ருவாரை மார்கி ழித்திடும் எழில்வனம்பொய்கையீட ழித்திடும் இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட் பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே. | 317 |
சாரணர் சார்ந்திருந்த பொழில்
வேத நான்கையும் விரித்த ருளுவர் மாத வர்வினை மாயச் செய்குவார் ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப் போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர். | 318 |
சாரணரின் பெருமை
இனமலர் மிசை யேகு வார்களும் புனல லைமிசைப் போகு வார்களும் கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர் இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும் | 319 |
மலைத்த லைமிசை வானிற் செல்வரும் நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும் தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும் பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும் | 320 |
மலைமு ழஞ்சுண் மன்னினான்முடி உலகெ லாமவ ரொருங்கி டம்விடும் அலம தீரவே வறம ழைபெய்யும் மலமறுந்தர மாமுனிவரும். | 321 |
பக்க நோன்புடைப் பரம மாமுனி மிக்க பாணிமீ தடிசின் மேதினி புக்கு முண்டிடப் போது வார்பகல் தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே | 322 |
தருமவீரர் அறம் கூறுதல்
தரும வீரரென்றவருட் டலைவன்பால் வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையை மருவி யோதவே வந்த யாவரும் திருமொழியினைத் திறத்திற் கேட்டனர் | 323 |
யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள் இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப் பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் விருந்த வையுண விட்ட தியானையே. | 324 |
யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்
கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால் ஆற்றலம்முனியறவு ரையுற ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை மாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே. | 325 |
யானையின் வருத்தம்
குருதியாறிடக் கொன்ற தீவினை வெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும் அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும் பெருந்து யரெனப் பேது றுக்குமே. | 326 |
யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்
நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும் அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக் குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி இஞ்சி வாய்தலினெய்தி நின்றதே. | 327 |
களிற்றினைக் காண உதயணன் வருதல்
கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்து நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர் முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான். | 328 |
உதயணன் களிற்றின் மீது ஏறல்
திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டு மருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப் பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை மருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான். | 329 |
யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்
வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச் சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம் பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்து காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே. | 330 |
உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்
விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப் பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகி மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான். | 331 |
முனிவர் கூறிய அறவுரைகள்
அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான் பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும் திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம் மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே. | 332 |
சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும் வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும் ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தை ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும். | 333 |
தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான கலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்று மலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார் தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார். | 334 |
தரும வீரர் தரும முறைத்திடப் பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன் மருவு வல்வினை மாசினுதிர்த்திடத் தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே. | 335 |
முனிவர் களிற்றின் வரலாறு கூறல்
காது வேன்மன்னன் களிறு கதமெழற் கேது வென்னென யெதிவ ரன்சொலும் தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடை வேதியர் குழு வாய்விளங் கும்புரம். | 336 |
கடக மென்பதூர் காதற் பிராமணன் விடப கன்னென்னும் பேரினன் மற்றவன் இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள் கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள். | 337 |
அமரி யென்னு மணிமுலை வேசிதன் அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன் சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும் அமைவி லன்பவ மஞ்சினனில்லையே. | 338 |
காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே தாம நற்குழ லாடுணை யாகவும் யாம மும்பக லும்மறி யாதவன் ஆமர ணத்தன்பினானைய தாயினன். | 339 |
மன்னனின் செயல்
அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர் மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச் சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும் அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும். | 340 |
கவள நாடொறு மூட்டெனுங் காவலன் பவள மாமெனும் பண்ணவர் தம்மடி திவளு மாமுடி சேர்த்து வணங்கியே உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன். | 341 |
உதயணன் முனிவரை வினவுதல்
மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக் குதவக் காரண மென்னெனக் கூறலும் சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர் மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார். | 342 |
முனிவர் கூற்று
உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார் கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே வெள்ளி யம்மலை மேல்வட சேடியில் வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள். | 343 |
சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன் அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம் செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை உகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன். | 344 |
காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர் சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல் நாம வேன்மகனன்மை விசையனும் சேம மித்திர ராகச் சிறந்தனர். | 345 |
ஒழியாக் காதலுடன்விளை யாடியே வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும் நழுவில் காட்சியனாமவேற் கோமுகன் ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை. | 346 |
விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய் வசையில் காம மயங்கிய மோகத்தின் இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந் தசையு ணாக்களி றாயின தாகுமே. | 347 |
மித்திரன்முன்பு வீறுநற் காதலால் அத்தி மேலுனக் கன்புமுன் டானதால் வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின் ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார். | 348 |
உதயணன் வருந்திக் கூறுதல்
திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரை பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய் வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச் சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான். | 349 |
உதயணன் செயல்
வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால் வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும் மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன் குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே. | 350 |
காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே போத வெங்கும் புரவலன் றைவரப் போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற் காத லிற்றிண் களிற்றியல் கூறெனா. | 351 |
உதயணன் அரண்மனை புகுதல்
யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன் தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர் ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச் சேனை சூழத் திருமனை சேர்ந்தனன். | 352 |
உதயணனின் வழிபாடு
சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை காலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும் ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின் பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள். | 353 |
உதயணனின் செயல்
சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும் நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச் சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும் நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன். | 354 |
நரவாகனனிடம் உதயணன் கூறுதல்
அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான் அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன் தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன். | 355 |
கோமுகனுக்கு முடிசூட்டுதல்
வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்கு வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின் சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான். | 356 |
உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்
தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின் மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும் போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன் தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர். | 357 |
உதயணனுடன் தேவியரும் செல்லல்
உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன் பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும் மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக் கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர். | 358 |
உதயணன் முனிவரிடம் வேண்டுதல்
நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின் தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே ஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன் ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான். | 359 |
உதயணன் முதலியோரின் தவக்கோலம்
காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச் சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின் கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர். | 360 |
அனைவரின் தவநிலை
அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும் பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள் அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே. | 361 |
புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட் டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும் திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும் திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே. | 362 |
ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன் மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும் பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர். | 363 |
சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம் பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும் சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன் ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர். | 364 |
உதயணன் கேவல ஞானம் எய்துதல்
உதயண முனிவனு மோங்குமாவரைதனில் இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய் இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன் பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன். | 365 |
தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்
அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும் சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின் இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய் அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார். | 366 |
தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்
பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும் அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும் கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவே விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர். | 367 |
காண்டங்களின் செய்யுட் தொகை
உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டு விஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும் எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம் அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே. | 368 |
[நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு. கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு செய்யுள் நீங்கலாக உஞ்சைக் காண்ட செய்யுட்தொகை]
நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில் அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம் அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந் திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே. | 369 |
உதயண குமார காவியம் முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உதயண குமார காவியம் - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயணன், நரவாகனன், மன்னன், கொண்டு, மகிழ்ந்து, சென்று, மன்னிய, குமரன், உதயணனை, வத்தவன், உருமண்ணுவா, வேந்தன், உதயணனின், கேட்டனன், காண்டம், செல்வரும், கேட்டு, போந்து, முனிவர், வென்றான், செல்லல், கூறுதல், அடைதல், வெற்றி, காரிகை, மானசவேகன், முனிவரிடம், சூழ்ச்சி, மருவிய, வாசவதத்தை, கண்டனன், அமைச்சன், உருமண்ணுவாவின், மன்னவன், நரவாகனனை, வெள்ளி, சிந்தை, தேவியர், கூற்று, வானிற், வேகவதி, நினைத்து, மாதவர், களிற்றின், சாரணர், வாசவதத்தையை, மாதரும், புண்ணிய, நரவாகனனின், விஞ்சை, மாதவன், கேட்டுடன், செய்து, தேவியரும், கூடுதல், தருசகன், கூறலும், திருநிறை, வரவேற்றல், திருமுடி, வென்றும், தானும், காமுறுதல், காவலன், கூறும், மடந்தை, புகுதல், உரைத்தல், இருவரும், கூர்ந்து, பொருவில், பிரச்சோதனன், பெருமை, யென்று, யூகியின், மீண்டும், வயந்தகன், புக்கு, யூகியு, வந்தாள்