நற்றிணை - 9. பாலை
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, அலமரல் வருத்தம் தீர, யாழ நின் நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
5 |
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, நிழல் காண்தோறும் நெடிய வைகி, மணல் காண்தோறும் வண்டல் தைஇ, வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே! மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
10 |
நறுந் தண் பொழில, கானம்; குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. |
வெள்ளிய பற்களையுடையோய!¢; யாம் செல்லும் நெறியில் உள்ள காடெல்லாம்; மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையை யுடையன; அன்றியும் அடுத்தடுத்துள்ள பல ஊர்களையுமுடையன; சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம் முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல; யாம் நெடுங்காலம் நின்னைப்பெற முயன்றதனானாகிய சுழற்சியையுடைய வருத்தமெல்லாந் தீரும்படியாக; நின் அழகிய மெத்தென்ற பருத்த தோள்களை அடைந்தனம் ஆதலினால்; இனி நீ பொரியையொத்த பூக்களையுடைய புன்கினது அழகுமிக்க ஒள்ளிய தளிரை; சுணங்கு நிரம்பிய அழகிய முலையிலே அதன் வீற்றுத் தெய்வம் சிறப்போடிருக்குமாறு அப்பி; நிழலைக் காணுந்தோறும் நெடும்பொழுது ஆண்டுத் தங்கி; மணல்களைக் காணுந்தோறும் சிற்றில் புனைந்து விளையாடி; நெறிவந்த வருத்தத்தைப் போக்கி விட்டு மெல்ல மெல்லச் செல்வாயாக;
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாம், குயில், செல்லும், அழகிய, காணுந்தோறும், காண்தோறும், சுணங்கு, ஆர்வ, வழிபடு, தெய்வம், நின், பாலை