நற்றிணை - 59. முல்லை

உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
5 |
வன் புலக் காட்டு நாட்டதுவே- அன்பு கலந்து நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவின் பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. |
10 |
அன்பு மிகுதலாலே உள்ளங் கலந்து நம்பால் விரும்பிய கொள்கையுடனே என்றுந் தன்னெஞ்சிலே எம்மை நினைந்துறையும் காதலியின் ஊர; பகற் பொழுதெல்லாம் சூழ ஆடைபரப்பி நின்று கலைத்தவழி வெளிவந்த உடும்பை ஈட்டியாலே குத்தி; மண்ணின் முழுகி மறைந்து கிடக்கும் வரிகளையுடைய நுணலையை மண் வெட்டியாலே பறித்தெடுத்து; நெடுகிய கோடுகளையுடைய புற்றுக்களை வெட்டிப் புகை மூட்டியை வைத்துழி வெளிவந்த ஈயலைத் தாழியிலே பெய்து கொண்டு; வளைதடியாலே முயலை எறிந்து பற்றிய வேட்டுவன்; இரவிடை அழகிய தோளிலே சுமந்து வந்த பல்வேறு வகையாகிய அப்பண்டங்களைப் பொதிந்த மூடையுடனே ஏனைய கருவிகளையும் மனையகத்தே போகட்டு மறந்து; ஆங்கு மிகுதியாகப் பருகிய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு கிடவா நிற்கும்; வன்புலத்ததாகிய காடு சூழ்ந்த நாட்டின்கண் உளதாயிரா நின்றது; அங்ஙனம் முல்லையின் நுண்ணிய அரும்பு மலர்ந்த புறவின் கண்ணதாகிய ஊரிலிருந்தாலும் அவள் உள்ளம் பொறுமையுடையதாயிரா நின்றது; இன்று செல்லாவிடில் நனி வருந்தா நிற்கும்;
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புறவின், வெளிவந்த, நிற்கும், நின்றது, கலந்து, அன்பு, வேட்டுவன், மறந்து, கள்ளின், முல்லை