நற்றிணை - 48. பாலை

அன்றை அனைய ஆகி, இன்றும், எம் கண் உளபோலச் சுழலும்மாதோ- புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ வைகுறு மீனின் நினையத் தோன்றி, புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, |
5 |
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமரிடை உறுதர, நீக்கி, நீர் எமரிடை உறுதர ஒளித்த காடே. |
புல்லிய புறவிதழ்களையுடைய கோங்கினுடைய மெல்லிய இதழ்மிக்க குடைபோன்ற மலர்கள் எல்லாம் வைகறைப் பொழுதிலே விளங்குகின்ற மீன்களாமெனக் கருதும்படி தோன்றா நின்று; காடெங்கும் அழகமைந்த மலர் மணம் வீசும் கன்னெறியிலே 'கிடின்' என்னும் ஓசையுண்டாக மோதாநின்ற அழகிய வீரவளையணிந்த மறவர்; கூர்மை பயின்ற அம்பினாற் செய்யுங் கொடுந்தொழிலையுடையராய் அஞ்சாது நும்பால் அமர் செய்ய வந்த பொழுது; அவரை வென்று போக்கி, அப்பால் எம் ஐயன்மார் எங்களைத் தேடிப் பின் தொடர்ந்து வருதலும் அதனை நோக்கிய நீயிர் எம்மைக் கைவிட்டுத் தமியராய்ச் சென்று மறைந்துகொண்ட காடு; அற்றைநாளில் அத்தன்மையவாய்த் தோன்றிய அன்றி இற்றைநாளினும் எம் கண்ணெதிரிருத்தல் போலச் சுழலாநிற்கும்; அக்காட்டின்கண் எங்ஙனம் ஏகற்பாலீர் ?
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உறுதர, அஞ்சாது, மறவர், இதழ்க், பாலை