நற்றிணை - 380. மருதம்
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
5 |
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; கொண்டு செல்- பாண!- நின் தண் துறை ஊரனை, பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
10 |
புரவியும் பூண் நிலை முனிகுவ; விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! |
பாணனே! எம்முடைய ஆடைதானும் நெய்யும் நறும்புகையும் அளாவிப் புதல்வதற்குத் தீட்டும் மையும் இழுகி அழுக்குப் படிந்திரா நின்றுது; சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனியபால் பெருகுதலாலே அந்தப் பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக் கொண்டு எம் தோளும் ஈன்ற அணிமையானாகிய முடைநாற்றம் வீசாநிற்கும்; இங்ஙனம் ஆகையில் தூய இழையணிந்த பரத்தையர் சேரிக்கண்ணே தோன்றுகின்ற தேரையுடைய காதலன் கூடுதற்குரிய தகுதிப்பாடுடையேமல்லேம்; ஆதலின் நின் தண்ணிய துறையையுடைய அவ்வூரனை இப்பொழுதே கொண்டு சென்று பரத்தையர் பால் விலைகொண்டு ஈடாக உய்ப்பாயாக!; பொன்போன்ற நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழையெடுத்துப் பாடுதலில் நீ வல்லனே யாயினும்; ஈண்டு எம்மைத் தொழுது படாதேகொள்; சிறந்த எமது மனையின்கண்ணே நீ நின்று பாடுதலைச் செய்யாதபடி நெடும் பொழுது நிற்றலையுடைய தேரிலே பூட்டிய குதிரைகளும் தம்மைப் பிணித்திருத்தலை வெறுக்கின்றன கண்டாய்; யாம் விரும்பியது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற்களை எம்பால் மொழிய வேண்டா!
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - கூடலூர்ப் பல்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 378 | 379 | 380 | 381 | 382 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்டு, பால், பரத்தையர், யாம், நின், நரம்பின், தோளும், நெய்யும்