நற்றிணை - 308. பாலை
செல விரைவுற்ற அரவம் போற்றி, மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், வேண்டாமையின் மென்மெல வந்து, வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
5 |
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
10 |
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. |
ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்?
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 306 | 307 | 308 | 309 | 310 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாம், நீரை, அதனை, ஒன்று, பொருள்வயிற், மெல்ல, பொருள், வந்து, கலங்கி, நினைந்து, மலர், நெஞ்சம்