நற்றிணை - 281. பாலை
மாசு இல் மரத்த பலி உண் காக்கை வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
5 |
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், தாம் நம் உழையராகவும், நாம் நம் பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
10 |
அன்பிலர்- தோழி!- நம் காதலோரே. |
தோழீ! நம் காதலர்; மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடுபலியை உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வெல்லுகின்ற போரையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போகடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; தூங்காதிருந்தனமாதலையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ?
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம். - கழார்க் கீரன் எயிற்றியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 279 | 280 | 281 | 282 | 283 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, நாம், காக்கை