நற்றிணை - 189. பாலை
தம் அலது இல்லா நம் நயந்து அருளி இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
5 |
எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக் கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப் புறவின் சேவல் வாய் நூல் சிலம்பி அம் சினை வெரூஉம், அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? |
10 |
கொடிய கொலைத் தொழிலில் வல்ல வேட்டுவனது வலையை அறுத்துவிட்டோடிய காட்டின்கணுள்ள சேவற்புறாவானது; தன் வாயில் உண்டாகும் நூலாலே கட்டிய சிலம்பியின் கோட்டையைக் கண்டு அஞ்சாநிற்கும்; சுழன்றடிக்கின்ற சூறைக்காற்றையுடைய சுரத்தின் கண்ணே சென்ற தலைவர்; அவரையன்றிச் சிறிதும் பொருந்தியிராத நம்மை விரும்பி அருள்செய்ய இன்னும் வந்திலர்; அங்ஙனம் வாராராயினும் வேறியாண்டைச் சென்றிருப்பர்?; பாணர் தெறுகின்ற சினம் தணிதற்கரிய தெய்வத்தின் முன்பு சென்று அதன் சினமடங்குமாறு சிறிய யாழின் நரம்பினோசையை யெழுப்பிப் பாடினாலொத்த இனிய குரலையுடைய குருகுகளிருக்கின்ற; கங்கையாற்றின்கண் ஓடுகின்ற மரக்கலத்தேறி யாண்டேனுஞ் செல்லுகிற்பர் கொல்?; அவர் பிற எந்தச் செயலைச் செய்கிற்பர் கொல்? ஓரிடத்தும் போகலர் ; ஒரு செயலுஞ் செய்கலர்; ஆதலின் இன்னே வருகுவர் காண்; நீ வருந்தாதே கொள்?
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 187 | 188 | 189 | 190 | 191 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொல், இன்னும்