நற்றிணை - 111. நெய்தல்
அத்த இருப்பைப் பூவின் அன்ன துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
5 |
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் பெருங் கழிப் பாக்கம் கல்லென வருமே- தோழி!- கொண்கன் தேரே. |
10 |
தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் !
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மீன், தோழி, மீன்களையும், கல்லென, பாக்கம், மேற்கொண்டு, இருப்பைப்