ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம்
வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரவை
(கொச்சகக் கலி)
'குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி, அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன், மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க, முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ?' என-முனியாதே, 'மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை, | 5 |
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான்' என்றாள். என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி, நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து, குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்; இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின், | 10 |
சிறுகுடியீரே! சிறுகுடியீரே! தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர் தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! | 15 |
தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்; கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்; குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்; பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்; பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- | 20 |
ஒரு முலை இழந்த நங்கைக்கு, பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே. | 1 |
கொளுச் சொல் ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்: அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல், சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து, இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே. ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி! 'அஞ்சல் ஓம்பு' என்று, நலன் உண்டு நல்காதான் மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே. | 2 |
எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக் கல் தீண்டி வந்த புதுப் புனல்; கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார் உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. | 3 |
என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப் புனல்; பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார் முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. | 4 |
யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப் போது ஆடி வந்த புதுப் புனல்; போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார் மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. | 5 |
பாட்டு மடை
உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப, புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின், உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக் குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி! | 6 |
சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே- பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள், சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. | 7 |
அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும், இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே- பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம் மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. | 8 |
சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே- வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து, குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே. | 9 |
பாட்டு மடை
'இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே- கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே, வெறியாடல் தான் விரும்பி, 'வேலன், வருக' என்றாள்! | 10 |
ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே- மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்! வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின் குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். | 11 |
செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே- வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்! வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்; ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின். | 12 |
நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன் மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்! தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன், கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின். | 13 |
பாட்டு மடை
வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து, நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால், மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே! | 14 |
கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல் மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்- அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. | 15 |
மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல் குல மலை உறைதரு குறவர்-தம் மகளார், நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்- பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே. | 16 |
குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும், அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்- துறைமிசை நினது இரு திருவடி தொடுநர் பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே. | 17 |
பாட்டு மடை
என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி, மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன் சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! | 18 |
'கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி, மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்: அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை; குறமகள் இல்லை; செறி தோள் இல்லை; கடம் பூண் தெய்வமாக நேரார் மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.' | 19 |
பாட்டு மடை
என்று, ஈங்கு, அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு, புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்; முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடி, பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுதும் யாம். | 20 |
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்; பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்; கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்; தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால், மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே. | 21 |
பாடு உற்று, பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே; பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே. | 22 |
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த, கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே. | 23 |
மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட, பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி! பெற்றி உடையதே, பெற்றி உடையதே, பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப் பெற்றி உடையது, இவ் ஊர். | 24 |
வாழ்த்து
என்று, யாம் கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக் கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்- வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே! | 25 |
25. காட்சிக் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து, வானவர் மருள, மலை வில் பூட்டிய வானவர் தோன்றல், வாய் வாள் கோதை, விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து, இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி, | 5 |
'துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும் மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்' என, பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி, வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன், வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு | 10 |
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும், இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும், அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி; ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த | 15 |
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று; கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை, நாகம், திலகம், நறுங் காழ் ஆரம், உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து, மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட, | 20 |
நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப- குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும், வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும், | 25 |
தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும், நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும், பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும், புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும், கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும், | 30 |
பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும், இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப- அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து, வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, | 35 |
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல; யானை வெண் கோடும், அகிலின் குப்பையும், மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும், சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும் | 40 |
ஏல வல்லியும், இருங் கறி வல்லியும், கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும், தெங்கின் பழனும், தேமாங் கனியும், பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும், காயமும், கரும்பும், பூ மலி கொடியும், | 45 |
கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும், பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்; ஆளியின் அணங்கும், அரியின் குருளையும், வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும், குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும், | 50 |
வரை ஆடு வருடையும், மட மான் மறியும், காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும், பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும், கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்; மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-ஆங்கு | 55 |
ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்! கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி, வானவர் போற்ற மன்னொடும் கூடி, வானவர் போற்ற, வானகம் பெற்றனள்; | 60 |
எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ? நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்; பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!' என- மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த | 65 |
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் 'ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம், திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்; தீவினைச் சிலம்பு காரணமாக, ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்; | 70 |
வலம் படு தானை மன்னன் முன்னர், சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்; செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர், வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி, 'அம் சில் ஓதி! அறிக' எனப் பெயர்ந்து, | 75 |
முதிரா முலைமுகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்; 'அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன், | 80 |
மயங்கினன் கொல்' என மலர் அடி வருடி, தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள், கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள், 'மன்னவன் செல்வுழிச் செல்க யான் என தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல், | 85 |
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்; 'கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று' எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல், தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள், நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை' என்று, | 90 |
ஒழிவு இன்றி உரைத்து, 'ஈண்டு ஊழி ஊழி வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்' என- தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் 'எம்மோரன்ன வேந்தர்க்கு' உற்ற | 95 |
செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன், 'உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு' என, வல் வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; | 100 |
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்; குடி புர உண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் துன்பம் அல்லது, தொழுதகவு இல்' என, துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த | 105 |
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-'ஆங்கு, உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும், செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும், நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?' என, மன்னவன் உரைப்ப-மா பெருந்தேவி, | 110 |
'காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து; அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்' என- மாலை வெண்குடை மன்னவன் விரும்பி, | 115 |
நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர், 'ஒற்கா மரபின் பொதியில் அன்றியும், வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக் கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்; கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும், | 120 |
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து' என- 'பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு, முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல், மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு, சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று; | 125 |
புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை, முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின், | 130 |
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும், தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை | 135 |
நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும், நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு' என, | 140 |
'குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும், நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும், பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும், குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், | 145 |
வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலிய, சூட்டி; பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என், வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்' என- 'பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!' என, | 150 |
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்: 'நும் போல் வேந்தர் நும்மொடு இகலி, கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன; | 155 |
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர், பங்களர், கங்கர், பல் வேல் கட்டியர், வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன் கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது; கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம், | 160 |
எம் கோமகளை ஆட்டிய அந் நாள், ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம் கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம் இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய | 165 |
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர் முது நீர் உலகின் முழுவதும் இல்லை; இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின், வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் | 170 |
தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி, மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என- 'நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே | 175 |
தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ? அறை பறை' என்றே அழும்பில் வேள் உரைப்ப- நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து, கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சி மா நகர் புக்கபின்- | 180 |
'வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை! ஊழிதொறு ஊழி உலகம் காக்க' என, 'வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர் கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின், வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் | 185 |
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின், கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும், விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும், கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின், தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்; | 190 |
தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி, வாழ்க, சேனாமுகம்!' என வாழ்த்தி, இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி, அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என். |
26. கால்கோள் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய உறை முதல் கட்டில் இறைமகன் ஏற; ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர், தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ, 'மன்னர்- மன்னன் வாழ்க!' என்று ஏத்தி, | 5 |
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப- வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் 'இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி | 10 |
நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்: வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக் கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது, வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்; | 15 |
செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப் பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின் குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக' என- 'ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும், சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால், | 20 |
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின் வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ? இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்; அமைக நின் சினம்', என, ஆசான் கூற- ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று, | 25 |
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து, 'வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்! இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல் | 30 |
எழுச்சிப்பாலை ஆக' என்று ஏத்த- மீளா வென்றி வேந்தன் கேட்டு, 'வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க' என- உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப, பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப; | 35 |
இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின் விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும், வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், | 40 |
தரும வினைஞரும், தந்திர வினைஞரும்; 'மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!' என, பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும், புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி; | 45 |
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர- அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து- பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி | 50 |
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து, ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் காலை- முரசம் கடைமுகத்து எழுதலும், நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி, உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி | 55 |
மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு, மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த, கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்- | 60 |
'குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க' என, ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த, தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின், | 65 |
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத் தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி- நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் கூடையின் பொலிந்து, 'கொற்ற வேந்தே! வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு | 70 |
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க, வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து, கண் களிகொள்ளும் காட்சியை ஆக' என- 'மாகதப் புலவரும், வைதாளி கரும், சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த; | 75 |
யானை வீரரும், இவுளித் தலைவரும், வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த- தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும் வானவன் போல, வஞ்சி நீங்கி; தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும் | 80 |
வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத, மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட, உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு; ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு; | 85 |
ஆடு இயல் யானையும், தேரும், மாவும், பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின் பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன் இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு, அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த, | 90 |
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்- இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப, விசும்பு இயங்கு முனிவர், 'வியல் நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும்' என்றே, அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து, | 95 |
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற; மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை- செஞ் சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்; மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய | 100 |
நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின், அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்; பெரு நில மன்ன! காத்தல் நின் கடன்' என்று, ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்- 'வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!' என, | 105 |
கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும் தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்; இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்; வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை, | 110 |
கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு; 'இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய, அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார் காதலர்' என்னும் மேதகு சிறப்பின் மாதர்ப் பாணி வரியொடு தோன்ற- | 115 |
'கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்; காலம் காணாய்; கடிது இடித்து உரறிக் காரோ வந்தது! காதலர் ஏறிய தேரோ வந்தது, செய்வினை முடித்து! என, காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண் | 120 |
கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற- தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து, 'வாள்வினை முடித்து மற வாள் வேந்தன் ஊழி வாழி!'என்று ஓவர் தோன்ற- கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின் | 125 |
ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி- நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும், கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும், தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை | 130 |
நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும், கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும், கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞூறும், ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும் எய்யா வட வளத்து இரு பதினாயிரம் | 135 |
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும், சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞூற்றுவரும், சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே! வாயிலோர்' என வாயில் வந்து இசைப்ப- | 140 |
'நாடக மகளிரும், நலத்தகு மாக்களும், கூடு இசைக் குயிலுவக் கருவியாளரும், சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு' என- செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து, சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி, | 145 |
ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு மாண் வினையாளரை வகை பெறக் காட்டி- வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே! 'வட திசை மருங்கின் வானவன் பெயர்வது | 150 |
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின், ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு, யாம் தரும் ஆற்றலம்' என்றனர்' என்று, 'வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க!' என- | 155 |
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் கடல் அம் தானைக் காவலன் உரைக்கும்: 'பாலகுமரன் மக்கள், மற்று அவர் காவா நாவின் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி, | 160 |
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என, கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது; நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு, கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெரு நிரை செய்க- தாம்' என, | 165 |
சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள், எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞூற்றுவர்; சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து; கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் | 170 |
மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு, ஆங்கு, அவர் ஏகிய பின்னர்- வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த, பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து; | 175 |
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி; ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு, ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ, பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த | 180 |
தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்- உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம், 'தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்' என, | 185 |
கலந்த கேண்மையில் கனக விசயர் நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர- இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர் | 190 |
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப; வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர், வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர், இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில், உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து | 195 |
மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர; சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர், கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர், வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர், மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள், | 200 |
களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும் விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய; தாரும் தாரும் தாம் இடை மயங்க; தோளும் தலையும் துணிந்து வேறாகிய | 205 |
சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து, எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட; பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில் கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட; | 210 |
அடும் தேர்த் தானை ஆரிய அரசர் கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து; நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும், விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட; 'எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை, | 215 |
ஒரு பகல் எல்லையின், உண்ணும்' என்பது ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய, நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன், போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய- | 220 |
வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும், ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு, செங்குட்டுவன் - தன் சின வலைப் படுதலும்- சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர், | 225 |
பீடிகைப் பீலிப் பெரு நோன் பாளர், பாடு பாணியர், பல் இயத் தோளினர், ஆடு கூத்தர், ஆகி; எங்கணும், ஏந்து வாள் ஒழிய, தாம் துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர- | 230 |
கச்சை யானைக் காவலர் நடுங்க, கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக, ஆள் அழி வாங்கி, அதரி திரித்த வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி; தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி, | 235 |
முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி; கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி; | 240 |
பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை- முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி, தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட, சிறப்பு ஊண் கடி இனம், 'செங்கோல் கொற்றத்து | 245 |
அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க!' என- மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன், 'வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை, காற்றூ தாளரை, போற்றிக் காமின்' என, | 250 |
வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த பல் வேல் தானைப் படை பல ஏவி, பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக் கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என். | 255 |
27. நீர்ப்படைக் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின் கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின், சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக் கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி, செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் | 5 |
அறியாது மலைந்த ஆரிய மன்னரை, செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று, யாண்டும், மதியும், நாளும், கடிகையும், ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள; | 10 |
வரு பெரும் தானை மறக்கள மருங்கின், ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து பால் படு மரபில் பத்தினிக் கடவுளை | 15 |
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து- மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும், பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும், உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும், திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும், | 20 |
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும், ஆரிய மன்னர் அழகுற அமைத்த தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண், வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு- நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து, | 25 |
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்; உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி, தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்; நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து, வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்; | 30 |
குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து, வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்; கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்- மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய, | 35 |
தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்; திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ, புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்; மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை, கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோர்; | 40 |
நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து, புறம்பெற, வந்த போர் வாள் மறவர்- 'வருக தாம்' என, வாகைப் பொலந் தோடு பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து, தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து, | 45 |
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன், ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்; மாடல மறையோன் வந்து தோன்றி, 'வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை கானல் - பாணி கனக- விசயர்- தம் | 50 |
முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம் அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க!' என- 'பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா நகைத் திறம் கூறினை, நான்மறையாள! யாது, நீ கூறிய உரைப் பொருள் ஈங்கு?' என- | 55 |
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்: 'கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள் மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு, ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ, கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன் | 60 |
மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு, இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த, கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி, குடவர் கோவே! நின் நாடு புகுந்து வட திசை மன்னர் மணி முடி ஏறினள். | 65 |
இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை மன்னர் கோவே! யான் வரும் காரணம் மா முனி பொதியின் மலை வலம் கொண்டு, குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன், ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின் | 70 |
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் 'வலம் படு தானை மன்னவன்- தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை' என்றலும், தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து, 'கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்; | 75 |
அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்! குடையும் கோலும் பிழைத்தவோ?' என, இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்; தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் | 80 |
போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி, 'என்னோடு இவர் வினை உருத்ததோ?' என, உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்; பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு | 85 |
என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றிச், செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க; மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும், செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு; கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி, | 90 |
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு, இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு, அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று, துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்; | 95 |
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள், இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்; கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்; | 100 |
தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்; மற்று அது கேட்டு, மாதவி மடந்தை நற்றாய் தனக்கு. 'நல் திறம் படர்கேன்; மணிமேகலையை வான் துயர் உறுக்கும் | 105 |
கணிகையர் கோலம் காணாதொழிக' என, கோதைத் தாமம் குழலொடு களைந்து, போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்; என் வாய்க் கேட்டோ ர் இறந்தோர் உண்மையின், நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்; | 110 |
மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!' என- 'தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை, 'மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை' என- | 115 |
'நீடு வாழியரோ, நீள் நில வேந்து!' என, மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் 'நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா, ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்; | 120 |
வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின், ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன் பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்! பழையன காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து, | 125 |
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர் ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு, ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி, | 130 |
உரை செல வெறுத்த மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை, தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின், மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின், நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட | 135 |
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என, மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்; ஊழிதொறு ஊழி உலகம் காத்து, வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என- | 140 |
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்; அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க, பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை, செந் தீப் பரந்த திசை முகம் விளங்க, | 145 |
அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற; பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், 'எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது; மண் ஆள் வேந்தே வாழ்க!' என்று ஏத்த- | 150 |
நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த கொடும்பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள், குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி, வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் | 155 |
சித்திர விதானத்துச், செம் பொன் பீடிகை, கோயில், இருக்கைக் கோமகன் ஏறி, வாயிலாளரின் மாடலன் கூஉய், 'இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர், வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு | 160 |
செங்கோல் தன்மை தீது இன்றோ?' என- 'எம் கோ வேந்தே, வாழ்க!' என்று ஏத்தி, மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் 'வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்; | 165 |
குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க, அரிந்து உடம்பு இட்டோ ன் அறம் தரு கோலும்; திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? தீதோ இல்லை, செல்லற் காலையும், | 170 |
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு' என்று அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே- 'பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை | 175 |
மாடல மறையோன் கொள்க' என்று அளித்து- ஆங்கு, ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை, சீர் கெழு நல் நாட்டுச் செல்க' என்று ஏவி- 'தாபத வேடத்து உயிர் உய்ந்துப் பிழைத்த மா பெரும் தானை மன்ன-குமரர்; | 180 |
சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல், அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண், விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய், சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள், வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை, | 185 |
பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு; எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர், அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனக விசயரை | 190 |
இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி- திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும், பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய, வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி, | 195 |
குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற; குட திசை ஆளும் கொற்ற வேந்தன் வட திசைத் தும்பை வாகையொடு முடித்து, தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு- நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிலை நிவந்து | 200 |
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை, முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய சித்திர விதானத்து, செய் பூங் கைவினை, இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய, | 205 |
மடை அமை செறிவின், வான் பொன் கட்டில், புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை, இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு, எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம் | 210 |
அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர், 'தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக' என, பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச் சிறு குறுங் கூனும் குறளும் சென்று, 'பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; | 215 |
நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக' என- அமை விளை தேறல் மாந்திய கானவன் கவண் விடு புடையூஉக் காவல் கைவிட, வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த, | 220 |
'வாகை, தும்பை, வட திசைச் சூடிய வேக யானையின் வழியோ, நீங்கு' என, திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து, குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்- 'வட திசை மன்னர் மன் எயில் முருக்கிக் | 225 |
கவடி வித்திய கழுதை ஏர் உழவன், குடவர் கோமான், வந்தான்; நாளை, படு நுகம் பூணாய், பகடே! மன்னர் அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம்' எனும் தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும | ் 230 |
தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட, வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து; விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை, வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் | 235 |
முருகு விரி தாமரை முழு மலர் தோய, குருகு அலர் தாழைக் கோட்டு மிசை இருந்து, 'வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப் பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்' என, காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ, | 240 |
கோவலர் ஊதும் குழலின் பாணியும் வெண் திரை பொருத வேலை வாலுகத்துக் குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை, வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து | 245 |
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி, 'வானவன் வந்தான், வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும், மடவீர்! யாம்' எனும் அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் | 250 |
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ, மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள, | 255 |
வஞ்சியுள் புகுந்தனன், செங்குட்டுவன் என். |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - மன்னர், பெரும், வேந்தன், கடவுள், மன்னவன், மருங்கின், சிறப்பின், எல்லாம், விளங்கு, செங்கோல், கொண்டு, வேந்தே, மறையோன், உரைக்கும், நெடுங், கொற்றம், இருந்த, பாடுகம், வானவர், கேட்டு, கங்கைப், தானையொடு, புதுப், ஓதையும், வானவன், காவலன், தும்பை, எழுந்து, வஞ்சியும், நீர்க், பத்தினிக், முடித்து, முடித்த, உற்றதும், பாணியும், வெற்பன், தொழில், புக்கு, பாட்டு, தேர்க், வாழ்க்கை, தீர்க்க, கோமான், கோட்டு, உண்ணும், இமயத்து, ஆதலின், ஆற்றல், சஞ்சயன், வினைஞரும், சென்னி, வந்தான், பெற்றி, நெஞ்சு, ஓங்கிய, நாட்டு, நல்லாய், போந்தை, சுமந்து, நின்று, யாங்கணும், திருவடி, பின்னர், ஆடுதுமே, விளங்கிய, மடந்தை, வீங்கு, சிறுகுடியீரே, குடையும், வந்தது, உயிர்த், நூற்றுவர், மருங்கு, வாழ்த்தி, முடித், முடிக்கு, துயில், செங்குட்டுவன், ஆள்வோன், புகுந்து, நெடுந், ஐஞ்ஞூற்றுவர், அளித்து, விசயர், யானையின், பேய்மகள், கோவலன், வெயில், ஏறினன், கஞ்சுக, சேயிழை, தன்னினும், செல்வன், ஆகின்றே, குருகு, தொழுதேம், கடம்பு, குடவர், காதலர், வேங்கைக், ஏந்திய, தொடுத்து, இழந்து, வேங்கை, சென்று, தெய்வம், ஒன்றும், மற்றையார், புலத்தல், காணேம், நிலைமண்டில, ஆசிரியப்பா, வெண்குடை, துன்பம், குடிப், காக்கும், நீர்ப்படை, காஞ்சியும், வேந்தர், வேந்தற்கு, மலைந்த, தென்னர், மூதூர், ஒருங்குடன், பரந்து, எறிந்து, இயங்கு, மாக்கள், எழுந்த, வஞ்சிக், மன்னன், பெருந்தகை