அக்னி புராணம் - பகுதி 22 - பதினெண் புராணங்கள்
புராணங்களைப் படிப்பதாலும், கேட்பதாலும் நினைத்த காரியங்கள் கைகூடும். புராணங்கள் பற்றிச் சொற்பொழி வினுக்கு ஏற்பாடு செய்பவர்கள், நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன், மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று அக்னி புராணம் பேசுகிறது. சொற்பொழிவாற்றுபவருக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க வேண்டும் என்றும் அக்னி புராணம் மேலும் கூறுகிறது.
மருத்துவம்
தன்வந்தரி, தேவர்களுக்கு வைத்தியனாக இருந்தான். அவன் சுஷ்ருதா முனிவனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்தான். அக்னிபுராணம், சுஷ்ருதா முனிவர் கற்றுக் கொண்ட மருத்துவம் பற்றியும், என்ன நோய்க்கு என்ன மருந்து தரப்பட வேண்டும் என்பது பற்றியும் கூறுகிறது. இதில் விருக்ஷ ஆயுர்வேதம் என்ற தனிப்பகுதி இருக்கிறது. எந்தெந்த மரங்களை எங்கெங்கு நட வேண்டும் என்று கூறுகிறது. இவற்றோடு, விலங்குகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் பற்றியும், விஷமுறிவுகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது.
இலக்கியமும் இலக்கணமும்
கவிதைக்கு நான்கு வகையான சந்தங்கள் உண்டு. நெடுங்கணக்கில் மொத்தம் 64 எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் 21 உயிர் எழுத்துக்கள் என்று சொல்லப்படும். எழுத்துக்களை மூன்று வகையாக உச்சரிக்கலாம். அவை முறையே உதத்தா, அனுதத்தா ஸ்வரிதா ஆகும். எழுத்துக்கள் தோன்றுமிடம் எட்டாகும். அவையாவன: மார்பு, தொண்டை, தலை, அடிநாக்கு, பற்கள், மூக்கு, உதடு, மேலண்ணம் ஆகியவை ஆகும். உச்சரிப்புகள் சுத்தமாகவும், பிறர் கேட்கும் படியாகவும் இருக்க வேண்டும். மூக்கால் பேசுவதோ, முணுமுணுப்பதோ கூடாது.
கவிதைகளில் பயன்படும் அணிகள் பற்றி அக்னி புராணம் விரிவாகப் பேசுகிறது. கவிதை என்பது சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றினின்று வேறாகும். சாத்திரங்கள் என்பவை உரைநடையில் எழுதப்பட்ட சொற்களால் நிறைந்தவை. இதிகாசங்கள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ஆனால் இவை கவிதை அல்ல. தூய்மையான உண்மையான மனிதர்களை இவ்வுலகில் காண்பது கடினம். தூய்மையான மனிதர்களைக் கண்டாலும், அவருள் கற்றவர்களைக் காண்பது அரிது. தூய்மையும் கல்வியும் உள்ளவர்களிடையேயும் கவிதை உணர்ச்சி உடையவர்களைக் காண்பது கடினம். கவிதை உணர்ச்சி இருந்தாலும் கவிதை இயற்றும் ஆற்றல் உடையவர்களைக் காண்பது அரிது. கவிதை இலக்கணம் தெரியாமல் கவிதை இயற்றுவது கடினம். கவிதை இலக்கணத்தைவிட கவிஞனுக்கு அதிகம் தேவைப்படுவது உணர்ச்சிப் பெருக்கு.
சமஸ்கிருதம் தேவபாஷை, பிராகிருதமே மக்கள் பேசும் பாஷை, கவிதை கத்யம், பத்யம், மிஸ்ரை என்று மூன்று வகைப்படும். இதிகாசம் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட வேண்டும். ஒரளவு பிராகிருத சொற்கள் கலப்பதால் தவறில்லை. அவை காண்டம் அல்லது சர்க்கங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ரசங்களில்லாத இலக்கியம் பயனற்றது. அவை ஒன்பது வகைப்படும். அவையாவன: ஹாஸ்யம், கருணா, ரெளத்ரம், வீரம், பயனகா, பீபத்ளலா, அற்புதம், சிருங்காரம் என்பவை ஆகும். ரசங்கள் பயன்படுத்தப்படும் பொழுது அவை உணர்ச்சியோடு கலந்திருக்க வேண்டும். உணர்ச்சியோடு கலந்த ரசபாவம் இல்லாத இலக்கியம் இரண்டாம் தரம் ஆகும். சில இடங்களில் கவிஞனுடைய சாதுரியத்தால் ரசபாவத்தில் கூடப் பல நுணுக்கங்களைக் காட்டலாம். அறுபத்து நான்கு கலைகள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் பெண்களோடு சம்பந்தப்பட்டவை. ஆடல், பாடல், இசைக்கருவிகள் இயக்குதல் முதலியவை இக்கலைகளுக்குள் அடங்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 22 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, புராணம், கவிதை, வேண்டும், அக்னி, ஆகும், காண்பது, பற்றியும், கடினம், கூறுகிறது, மருத்துவம், என்பது, எழுத்துக்கள்