அக்னி புராணம் - பகுதி 20 - பதினெண் புராணங்கள்
இராமன், இலக்குவனுக்குக் கூறியதாகப் பல அரச நீதிகளை அக்னி புராணம் கூறுகிறது. அவையாவன: அரசனுடைய கடமைகள் நான்கு ஆகும். முதலாவது, செல்வத்தைச் சேகரிக்க வேண்டும். இரண்டாவது, சேகரித்த தைப் பெருக்க வேண்டும். மூன்றாவது, அதனைக் காக்க வேண்டும். நான்காவது, அதனை வழங்க வேண்டும். அரசன் பொறுமை உடையவனாக இருத்தல் வேண்டும். பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பணிவும் பொறுமையும் புலன்களை வெல்வதால் கிடைக்கின்றது. பொறி புலன்கள் மதம் பிடித்த யானை போன்றவை. அவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் பொறுமை, பணிவு என்ற பண்புகளை இந்த யானைகள் கீழே போட்டு மிதித்து விடும்.
அரசன், அஹிம்சை மேற்கொள்பவனாய், சத்தியத்தைக் காப்பவனாய், தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும். அரசன் எல்லாச் சடங்குகளையும் தவறாமல் செய்வதுடன் ஏழைகட்கு உணவிடுவதையும், பாதுகாப்பு வேண்டி வருபவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும். இனிய வார்த்தைகளையே பேச வேண்டும். இன்றிருக்கும் உடம்பு நாளை இல்லாமல் போகும்.
உடம்புக்குத் தேவைப்படும் இன்ப வேட்டையில் இறங்கி அரச கடமைகளிலிருந்து தவறுபவன் அடிமுட்டாளாவான். துயரப்பட்ட மக்கள் கண்ணிர்விட்டுக் கொடுக்கும் சாபம் எத்தனை பெரிய அரசனையும் கீழே தள்ளிவிடும். தேவர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் உண்டு. தேவர்கள் இனிய வார்த்தை பேசுகின்றனர். விலங்குகள் கடுமையான சொற்களையே பேசுகின்ரன. தெய்வங்கள் இனிய வார்த்தை பேசுவதுபோல மன்னனும், தனக்கு நன்மை செய்யும் நண்பர்களிடம் மட்டும் அல்லாமல், தீமை செய்யும் பகைவர்களிடம் கூட இனிய சொற்களையே பேச வேண்டும். அரசன் தன் குருவிடம் வணக்கத்தையும், நேர்மையானவர்களிடம் நேர்மைப் பண்பையும், கடமை மூலம் தெய்வங்களையும், அன்பு செய்வதன் மூலம் பணியாளர்களையும், தானம் செய்வதன் மூலம் ஏழைகளையும் திருப்திப்படுத்த வேண்டும்.
அரசனுக்கு ஏழு அங்கங்கள் உள்ளன. 1. அரசன், 2. அமைச்சர்கள், 3. நண்பர்கள், 4. கருவூலம், 5. படை, 6. கோட்டை, 7. நாடு. இவற்றுள் மிக முக்கியமானது நாடாகும். எப்படியும் அதனைக் காத்தே தீரவேண்டும். அரசன் அமைச்சர் களையும், அரசியல் புரோகிதனையும் தேர்ந்தெடுப்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அறிவில்லாத முட்டாள்களாகிய அமைச்சர்களை அரசன் கலந்தாலோசிக்கக் கூடாது.
அரசனுக்குரிய அடையாளங்கள், அவனுடைய செங்கோல், பொன்னாலாகிய தடி, வெண்கொற்றக்குடை ஆகியவையாம். அரசனுடைய குடை அன்னத்தின் தூவி, மயிலிறகு, கொக்குகளின் இறகு ஆகியவற்றால் செய்யப் படலாம். எதனால் செய்யப்பட்டாலும், முழுவதும் ஒன்றாகவே இருக்க வேண்டுமே தவிர, தூவி, மயிலிறகு, இறகு ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது. சிம்மாசனம் மரத்தால் செய்யப்பட்டுப் பொன் தகட்டால் மூடப்பட வேண்டும். வில் என்பது இரும்பு, கொம்புகள், மரம் ஆகியவற்றில் எதனாலும் செய்யப்படலாம். சிறந்த வில் என்பது நான்கு கையளவு நீளம் உடையதாய் இருக்க வேண்டும். அரசன் ஒராண்டு வரிப்பணத்தைப் படைக்கலங்கள் செய்யச் செலவழிக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 20 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், அரசன், இனிய, இருக்க, மூலம்