வாயு புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
ஏழாவது ஜோதிர்லிங்கம் வாரணாசியில் உள்ள விசுவநாதர் ஆகும். புண்ணியத் தலங்களில் எல்லாம் மிகச் சிறப்பு உடையதாகும். ஒருமுறை பிரம்மாவே இங்கிருந்து தவம் செய்தார். மிக உக்கிரமானதும், பிறர் எளிதில் செய்ய முடியாததும் ஆன அத்தவத்தைக் கண்டு விஷ்ணுவே தலையை உலுப்பிக்கொண்டார். உலுப்பிய பொழுது அவர் காதில் இருந்து ஒரு மணி வாரணாசியின் ஒரு பகுதியில் விழுந்தது. அப்பகுதிக்கு ‘மணிக்கரணிகை என்று பெயர் வந்தது. பிரளயகாலத்தில் உலகம் முழுதும் நீரில் மூழ்கி விடும் பொழுது, சிவன் தன்னுடைய சூலத்தால் வாரணாசியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். பிரளயம் முடிந்து உலகம் படைக்கப்படும் பொழுது வாரணாசியை அந்த இடத்தில் வைக்கிறார்.
ஒருமுறை சிவனையும், பார்வதியையும் கண்ட பிரம்மன், தன் ஐந்து முகங்களாலும் சிவனுடைய பெருமையைப் பாடினார். அதில் ஒரு தலை மந்திரங்களைத் தவறாகச் சொன்னதால் சிவன் அந்தத் தலையைக் கிள்ளிவிட்டார். பிராமணனாகிய பிரம்மனின் தலை கொய்யப்பட்டதால் சிவனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. சிவனிடம் ஒட்டிக் கொண்ட அந்தத் தலை என்ன செய்தும் கீழே விழவில்லை. சிவன் வாரணாசி பக்கம் வந்த பொழுது தலை தானே கீழே விழுந்து விட்டது. எனவே வாரணாசியின் பெருமையை அறிந்த சிவன், விசுவநாதராக அங்கேயே தங்கிவிட்டார்.
8. திரியம்பகமும் கெளதமனும்
நாட்டின் தென்பகுதியில் பிரம்ம பர்வதம் என்ற ஒரு மலை இருந்தது. அதன் ஒரு பகுதியில் கெளதம முனிவரும், அவன் மனைவி அகல்யையும் தவம் செய்து கொண்டிருந்தனர். பல ஆண்டுகளாக மழை இன்மையால் காடெல்லாம் கரிந்து சாம்பலாகும் நிலை வந்தது. அப்பொழுது கெளதமரும், அகல்யையும் வருணனைக் குறித்துத் தவம் செய்தனர். வருணன் எதிர்ப்பட்டவுடன் "நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டும்” என்று வரம் கேட்டார். வருணன் "அது தன்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது” என்றும், "தன்னால் முடிந்தது ஒரு நீர் நிறைந்த குளம் அங்கு இருக்குமாறு செய்வதுதான்” என்றும் கூறினான். நீர் நிறைந்த குளம் உண்டாயிற்று. இந்தக் குளத்தை ஏனைய முனிவர்களும் பயன்படுத்தி வந்தனர். கெளதமரின் சீடர்களும் தண்ணிர் கொண்டுவரச் சென்று மிகவும் காலம் தாழ்த்தி வந்தனர். ஏன் என்று முனிவர் கேட்டபொழுது ரிஷிகளின் மனைவிமார்கள் தங்களைத் தண்ணிர் எடுக்க விடுவதில்லை என்று கூறினர். அன்றிலிருந்து அகலிகையே தண்ணிர் கொண்டுவரப் புறப்பட்டாள். அவளையும் அப் பெண்கள் எளிதில் நீர் எடுக்க விடவில்லை. அவளையும், கெளதமரையும் அந்த இடத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும் என்று மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களை நச்சரித்தனர். வேறு வழியில்லாமல் முனிவர்கள் கணேசனை நோக்கி வேண்டினர். கணேசன் வந்த பொழுது கெளதமரையும், அகல்யையையும் அந்த எல்லையை விட்டுப் போக வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோள் தவறானது என்பதை அறிந்த கணேசன், இவர்களுக்கு புத்தி கற்பிப்பதற்காகத் தானே ஒரு பசுமாட்டு உருவம் எடுத்து அவர் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் வைத்திருந்த தானியத்தைத் தின்னத் தொடங்கிற்று. ஒரு புல்லை எடுத்து கெளதமர் விரட்ட அது அங்கேயே விழுந்து செத்து விட்டது. பசுவதை செய்ததால் கெளதமரையும், அகல்யையையும் அவ்விடத்தை விட்டு விரட்டி விட்டனர். பசுவதைக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பிய கெளதமர், பிரம்ம பர்வதத்தை நூறுமுறை சுற்றி வரவேண்டும் என்றும், இன்னும் சில கடுமையான கடமைகளையும் முனிவர்கள் கூறினார்கள். சொல்லப்பட்ட சடங்குகளை எல்லாம் முடித்தபிறகு கெளதமரும் அகல்யையும் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர். சிவன் தோன்றிய பொழுது, தங்களுடைய ஆசிரமத்திற்குப் பக்கத்தில் கங்கைநதி ஓட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உடனே கங்கை, சிவனும் பார்வதியும் இங்கே தங்குவதானால் தான் இங்கே ஒடுவதாக ஒத்துக் கொண்டாள். சிவன் தங்கிய இடம் திரியம்பகம் என்று போற்றப்பட்டது. கோதாவரி என்ற பெயருடன் கங்கை அங்கே ஒடிக் கொண்டிருக்கிறது. கொடுமை செய்த முனிவர்களையும், அவர்கள் பத்தினிமார்களையும் மன்னிக்குமாறு கெளதமர் வேண்டிக் கொண்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 12 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பொழுது, சிவன், அந்த, தண்ணிர், கெளதமரையும், கெளதமர், நீர், ", அகல்யையும், தவம், என்றும்