வாயு புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
கமதா என்றொரு வனாந்திரம் இருந்தது. அங்கு 100 ஆண்டுகளாக மழை பெய்யாததால் மரங்கள் கருகி அங்குள்ள உயிரினங்கள் மிகவும் துன்புற்றன. அவ்வனத்தில் அத்ரி முனிவரும் அவர் மனைவி அனுசுயாவும் வாழ்ந்து வந்தனர். மழை வேண்டி சிவனைக் குறித்து அத்ரி தவம் இயற்றினார். அன்ன ஆகாரமின்றி அவர் தவம் இயற்றுவதைப் பார்த்து அனுசுயாவும் சிவனைப் பார்த்துத் தவம் இயற்றினாள். 54 ஆண்டுகள் தவம் நீண்டது. திடீரென்று அத்ரிக்கு அதிக தாகம் எடுக்கவே அனுசுயாவைப் பார்த்து, “எங்காவது சென்று கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா!” என்றார். குடத்தை எடுத்துக் கொண்டு காட்டினுள் சென்ற அனுசுயாவின் எதிரே ஒரு பெண் வந்தாள். அப்பெண் இவளைப் பார்த்து, 'அனுசுயா! நான்தான் கங்கா தேவி. உன் தவத்திற்கு மிகவும் மெச்சினேன். வேண்டும் வரத்தைக் கேள்” என்று சொன்ன வுடன், அனுசுயா அப்பெண்ணைப் பார்த்து, “நீதான் கங்கை என்றால் இங்கே ஒரு குளத்தை உண்டாக்கி அதை கங்கை நீரால் நிரப்புக!” என்றாள். அவ்வாறே நடந்தது. அனுசுயா குடம் நிறைய அந்நீரை எடுத்துக் கொண்டு கணவனிடம் சென்றாள். அதைக் குடித்துப் பார்த்த அத்ரி முனிவர். "இது நாம் வழக்கமாகச் சாப்பிடும் தண்ணீர் இல்லையே, எங்கே கிடைத்தது?" என்றார். நடந்ததைக் கூறிய அனுசுயாவுடன் குளக்கரைக்குச் சென்றார். அங்கு இருந்த கங்கையைப் பார்த்து, "தாயே! நீ இங்கேயே இருக்க வேண்டும்’ என்று வேண்டினார். கங்கையும் ஒப்புக் கொண்ட பிறகு சிவன் அனுசுயாவிடம் “உன் தவத்திற்கு மெச்சினேன்; வரம் என்ன வேண்டும்?” என்று கேட்க, "தாங்களும் இந்த வனத்திலே தங்கிவிட வேண்டும்” என்று அனுசுயா வேண்ட சிவனும் ஒப்புக் கொண்டார். சிவனும் கங்கையும் தங்கிய இந்த இடத்திற்கு “அத்ரிஈசுவர தீர்த்தம்” என்ற பெயர் வந்தது.
ஜோதிர்லிங்கங்களின் கதை :
1. சோமநாதர்
தட்சனுடைய 27 பெண்களையும் மணந்துகொண்ட சந்திரன் (சோமன்). அவர்களுள் ரோகிணியிடம் அதிக அன்பு பாராட்டி மற்றவர்கள் மனம் வருந்துமாறு செய்துவிட்டான். அந்தப் பெண்கள் தங்கள் தந்தையாகிய தட்சனிடம் சென்று முறையிட்டனர். தட்சன் எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டுமென்று பலமுறை சந்திரனை எச்சரித்தும் அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரோகிணி யிடம் இருந்துவிட்டான். கோபம் கொண்ட தட்சன் சந்திரனைப் பார்த்து “நீ தேய்ந்து (க்ஷீணித்து) போவாயாக’ என்று சாபமிட்டான். பயந்து போன சந்திரன் பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மன் "உனக்கு உதவும் சக்தி எனக்கில்லை. நீ சிவனிடம் சென்று முறையிடுக!” என்று அறிவுரை கூறினான். சோமன் சரசுவதி நதியின் கரையில் பிரபச தீர்த்தத்தில் ஒரு லிங்கம் அமைத்து ஆறு மாதங்கள் தீவிரமாக வழிபட்டான். சிவன் நேரில் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். சோமன் நடந்த வற்றைக் கூறி தன்னைக் காக்குமாறு வேண்டினான். செய்த தவறுக்குத் தண்டனையாக வழங்கப்பட்ட சாபத்தைப் போக்க முடியாது என்று கூறிய சிவன், "இதற்கு ஒரு வழி காணலாம். கிருஷ்ணபட்சம் 14 நாட்களும் உன் மாமனார் சாபப்படி நீ தேய்ந்து (க்ஷீணித்து) போவாயாக சுக்கிலபட்சம் 14 நாட்களும் நீ வளர்ந்து முழுவடிவம் பெறுமாறு நான் வரம் தருகிறேன்” என்றார். அதிலிருந்து சந்திரன் தேய்வதும், வளர்வதும் நிலைத்து விட்டன. சோமன் வழிபட்ட இடம்தான் சோமநாதர் இருக்குமிடம்.
2. மல்லிகார்ஜுனர்
தனக்கு முன்னர் கணேசனுக்குத் திருமணம் ஆகி விட்டதால் பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கோபம் கொண்ட கார்த்திகேயன், கிரெளஞ்ச மலையில் வந்து தங்கினான். பெற்றோர்கள் மகனைப் பிரிந்த துயரத்தால் அடிக்கடி பார்க்க வந்த பொழுது, கார்த்திகேயன் அவர்களை நெருங்க விடவில்லை. தூரத்தில் இருந்து அடிக்கடி வருவது கஷ்டம் என்பதால், கிரெளஞ்ச மலைக்கு மிகச் சமீபத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனத்தில் சிவனும், பார்வதியும் வந்து தங்கினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 10 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ", பார்த்து, அனுசுயா, சோமன், தவம், சென்று, வரம், சந்திரன், சிவனும், சிவன், வேண்டும், கொண்டு, என்றார், அத்ரி, கொண்ட