வாயு புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
வெகு காலத்திற்கு முன் கர்ணகி என்ற இடத்தில் ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. மனைவியுடன் இரண்டு பிள்ளை களையும் கர்ணகியில் விட்டு விட்டு பிராமணன் வாரணாசி சென்றான். அவன் அங்கேயே இறந்து விட்டதாகத் தெரிய வந்ததால் அங்கேயே சடங்குகளைச் செய்தனர். அவனுடைய மனைவி இறப்பதற்குரிய நேரம் வந்ததும் உயிர் பிரியாமல் அவதிப்பட்டாள். அவள் பிள்ளைகள், "தாயே! உன்னுடைய ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறாததால் உன் உயிர் பிரிய மறுக்கிறது. அது என்னவென்று தெரிவித்தால், நாங்கள் அதனைச் செய்கின்றோம்” என்றனர். கிழவி, 'பிள்ளைகளே! இறப்பதற்குள் உங்கள் தந்தையைப் போல வாரணாசி போய் வர நினைத்தேன். அது இயலாமல் போய்விட்டது. இப்பொழுது என்னுடைய எலும்புகளையாவது வாரணாசியில் கொண்டு சேர்ப்பதானால் நான் அமைதியாகச் சாவேன்” என்றாள். பிள்ளைகள் அவ்வாறு செய்வதாகக் கூறியவுடன் அவள் உயிர் நீத்தாள். அவள் மூத்த பிள்ளையாகிய சுவடி அந்த எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். மிக நீண்ட தூரம் ஆகையால் வழியில் தங்கிச் செல்ல நேர்ந்தது. ஒர் இரவு ஒரு பிராமணன் வீட்டில் தங்கினான். வீட்டுக்கார பிராமணன் காலையில் பால் கறக்க முற்படுகையில் கன்றுக்குட்டி அடம் பண்ணி அவனைப் பாலைக் கறக்க விடாமல் செய்தது. கோபம் கொண்ட பிராமணன் கன்றுக்குட்டியை நன்றாக அடித்து விட்டு, பாலைக் கறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றான். இப்போது அடிபட்ட கன்றுக்குட்டியுடன் பசுமாடு பேச ஆரம்பித்தது. திண்ணையில் படுத்திருந்த சுவடிக்கு இந்த உரையாடல் நன்கு கேட்டது. பசு கன்றுடன் பின்வருமாறு பேசிற்று: "என் அருமைக் கன்றே! அந்தக் கொடிய பார்ப்பான் உன்னை நன்றாக அடித்து விட்டான் என்று நீ வருந்த வேண்டாம். நான், இதற்குப் பழி வாங்கும் முறையில் இவனுடைய மகனை என் கொம்புகளால் குத்திக் கொன்று விடுகிறேன்” என்று கூறிற்று. இதைக் கேட்ட சுவடி எல்லையற்ற வியப்படைந்து, மறுநாள் என்ன நடக்கிறது என்று பார்க்க அங்கேயே தங்கி விட்டான். மறுநாள் விடியற்காலம் பார்ப்பானின் மகன் பால் கறக்க வந்தான். பசுமாடு தன் கொம்புகளால் அவனைக் குத்திக் கொலை செய்து விட்டது. சுவடி வியப்புடன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வெண்மை நிறமுடைய அப்பசு கருமை நிறமானது. பார்ப்பனனைக் கொன்றதால் 'பிரம்மஹத்தி தோஷம் பசுமாட்டைப் பற்றிக்கொண்டது. திடீரென்று அப்பசு வீட்டை விட்டுப் போகத் துவங்கியது. பார்த்துக் கொண்டிருந்த சுவடி அது எங்கே போகிறது என்று அறிந்து கொள்ள அதன் பின்னே போனான். நெடுந்துாரம் போன பசு, நர்மதை ஆற்றில் நந்தி தீர்த்தம் என்ற இடத்தில் இறங்கிக் குளித்தது. உடனே அதன் கறுமை நிறம் மாறி வெள்ளை நிறம் அடைந்தது. நந்தி தீர்த்தத்தில் மூழ்கினால் பிரம்மஹத்தி தோஷம்கூடப் போய்விடும் என்பதை அறிந்தான். தான் மட்டும் அங்கே குளித்து விட்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். அந்நிலையில், ஒர் அழகிய பெண் அவனெதிரே தோன்றினாள். "சுவடி! உன் தாயின் எலும்புகளை எடுத்துக் கொண்டு எங்கே போகிறாய்?” என்று கேட்டாள். தன் பெயரைச் சொல்லி அழைத்த அந்தப் பெண்ணைக் கண்டு வியப்படைந்த சுவடி, “நான் என் தாயின் எலும்புகளை கங்கையில் கரைக்கப் போகிறேன். நீ யார்?' என்று கேட்டான். அப்பெண் “நான் தான் கங்கை நீ கங்கை வரை செல்லத் தேவையில்லை. உன் தாயின் எலும்புகளை இந்த நந்திகேசுவரத்திலேயே கரைத்து விடு' என்று கூற, சுவடியும் அப்படியே செய்தான். அவன் தாய் ஆகாயத்தில் தோன்றி, "மகனே! நான் முழுத் திருப்தி அடைந்து விட்டேன். இதோ மோட்சம் போகிறேன்” என்று கூறி மறைந்தாள்.
'நந்தி தீர்த்தம் இவ்வளவு சிறப்புப் பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் சிவனை நோக்கி மிகக் கடுமையான தவம் செய்தாள். அப்படி தவம் செய்த இடம்தான் 'நந்தி தீர்த்தம்.'
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 9 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சுவடி, கொண்டு, எலும்புகளை, நந்தி, தீர்த்தம், ", விட்டு, பிராமணன், பிள்ளைகள், தாயின், கறக்க, உயிர், நான், அவள், அங்கேயே