வராக புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
சுக்கிலபட்சம் ஐந்தாவது நாள் வருவது பஞ்சமி, இந்நாளில் புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பாம்புகளுக்குப் பால் ஊற்றி வணங்க வேண்டும். பஞ்சமி அன்று தான் பிரம்மா, எல்லா நாகங்களையும் அழைத்து, அவற்றை பாதாள லோகத்திற்குச் செல்லுமாறு கூறினார்.
மிகுதியான விஷத்தினை உடைய அனந்தா, வாசுகி, பத்மா, மகாபத்மா, குளிகா போன்ற பாம்புகளை பிரம்மனே படைத்தார். இந்தப் பாம்புகள், பிரம்மனின் படைப்புகளைப் பாழ்செய்தமையால் மிகுந்த கோபம் கொண்ட பிரம்மன் நாகங்களை நோக்கி, “என் படைப்புகளைப் பெரிதும் வீணாக்கிய நீங்கள், உங்கள் தாயினாலேயே அழிக்கப் படுவீர்கள்” என்று சாபமிட்டார். இதைக் கேட்ட நாகங்கள், பிரம்மனை நோக்கி, ‘ஐயனே! எங்களைப் படைத்த நீரே, எங்களுக்கு இப்படி ஒரு குணத்தினைக் கொடுத்தீர்கள். இக்குணத்தினாலேயே நாங்கள் மக்களைக் கடிக்கிறோம். எங்களுக்கு விஷத்தன்மையைப் படைத்த நீங்கள், எங்களை ஏன் குறை சொல்கிறீர்கள், நாங்கள் எப்படிப் பொறுப்போம்? என்று கேட்டனர்.
இதைக் கேட்ட பிரம்மன், நாகங்களுக்குத் தனி இடம் ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அவர்கள் அவ்விடத்தில் தங்கி இருந்தால், மனிதர்களுக்கும், நாகங்களுக்கும் சண்டை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார். பாதாள லோகத்தினை ஏழு பிரிவுகளாகப் பிரித்து, அதில் மூன்று பிரிவுகளில், நாகங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்' என்றும் கூறினார்.
(பிரபஞ்ச உற்பத்தி பற்றிப் புராணங்களிடையே சில வேறுபாடுகள் உள்ளன. தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், மற்ற உயிரினங்கள் அனைத்தும் பிரம்மனிவிருந்து தோன்றியவை என்று சிவ புராணங்களும், காசிய முனிவர் அவர் மனைவிகளின் பிள்ளைகளே தேவர்கள், மனிதர்கள், மற்ற உயிரினங்கள் என்று சில புராணங்கள் பேசுகின்றன. இங்குக் காணப்படும் முரண்பாடு பின்னே வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.)
நாகங்களிடம், பிரம்மன் அடுத்த கல்பத்தில் காசிப முனிவருக்கும், அவன் மனைவி கத்ருவுக்கும் பிள்ளைகளாகப் பிறப்பார்கள் என்று கூறினார். காசிப முனிவர், தன் மனைவி கத்ருவின் விருப்பப்படியே அவள் ஆயிரம் நாகங்களைப் பெற்றெடுப்பாள் என்று வரம் கொடுத்தார். மற்றொரு மனைவியான வினதாவிடம், அவள் விருப்பப்படியே இரண்டு பிள்ளைகள் பெறுவாள் என்றும், அவர்கள் கத்ருவின் மக்களை விடப் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் வரம் கொடுத்தார். கத்ருவிற்கு ஆயிரம் பாம்புகள் மக்களாகத் தோன்றினர். வினதாவிடம் இருந்து இரண்டு முட்டைகள் தோன்றின. நெடுநாட்கள் முட்டையினின்று எதுவும் வெளி வராததால், பொறுமையிழந்த வினதா ஒரு முட்டையை உடைத்தாள். அதிலிருந்து அங்கஹீனமுள்ள உருவம் வெளி வந்தது. அருணா என்ற பெயருடைய அவ்வுருவம், தன் தாயின் பொறுமை இன்மையால் தன் உருவம் பாழ்பட்டது என்பதால், தன் தாய் கத்ரு தனக்கு ஐந்நூறு ஆண்டுகள் அடிமையாக இருக்க வேண்டும் என்றும், மற்றொரு முட்டையினை உரிய காலம்வரை பத்திரமாக வைத்திருந்தால் அதிலிருந்து தோன்றும் மகன் தன் தாயினை விடுவிப்பான் என்றும் கூறினான். பின்பு, ஆகாயத்திற்குச் சென்று சூரியதேவனுடைய தேர்ப் பாகனானான்.
இதற்கிடையில் வினதாவிடம் இருந்து தோன்றிய மற்றொரு முட்டையிலிருந்து பாதி பறவையும், பாதி மனிதனும் சேர்ந்த உருவம் தோன்றிற்று. அதற்குக் கருடன் என்பது பெயர். பாம்புகளே தனக்கு இரையாக வேண்டும் என்ற வரத்தினை இந்திரனிடம் இருந்து கருடன் பெற்று வந்தது. கருடன் தன் தாயினை அடிமைத் தளையினின்று விடுவிக்க விரும்பியது. இதை அறிந்த பாம்புகள், தங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால், கருடனின் தாய் வினதாவை விடுவிப்ப தாகக் கூறின. கடுமையான முயற்சிக்குப்பின் அமிர்தத்தைக் கொண்டு வந்தது கருடன். அமிர்தத்தை பாம்புகளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, சொரசொரப்பான விளிம்புகளை உடைய தர்ப்பைப் புல்லைக் கொடுத்தது. அதனாலேயே பாம்புகளுக்குப் பிளவுபட்ட நாக்கு ஏற்பட்டது. அதனாலேயே பாம்புகளுக்கும், கருடனுக்கும் பெரும் பகை ஏற்பட்டது.
கருட மந்திரம் சொல்பவர்களப் பாம்புகள் தீண்டுவதில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 15 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், வேண்டும், பாம்புகள், கருடன், கூறினார், உருவம், வந்தது, இருந்து, மற்றொரு, பிரம்மன், பஞ்சமி, வினதாவிடம்