வராக புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
ருத்ரனை மணந்த தாட்சாயணி, தன் தந்தை யாகத்தில் தன் கணவனை அவமானப்படுத்தியதை நினைவில் கொண்டு, இமயமலை சென்று கடும் தவம் புரிந்தார். தன் கணவனுக்கு அவமானம் செய்த தட்சன் கொடுத்த உடம்பு ஆதலால் அந்த உடம்போடு இருக்க விரும்பவில்லை. அதனால் தன் உடம்பை நீத்தாள், தாட்சாயணி.
இமவான் மகள் பார்வதியாக மீண்டும் பிறந்தார். சிவனையே கணவனாக அடைய வேண்டும் என்று தவத்தில் ஈடுபட்டார். ஒருநாள், மெலிந்த தேகமுடைய பிராமணன், பார்வதிதேவியின் ஆசிரமத்திற்கு தானம் கேட்டு வந்தார். பார்வதியும் சிறிது உணவினைக் கொண்டுவந்து, அந்த பிராமணனுக்குக் கொடுத்தார். உணவினை உண்பதற்கு முன் அந்த பிராமணர், ஆசிரமத்திற்கு அருகில் ஒடும் ஆற்றில் குளித்துவிட்டு வரச் சென்றார். அவர் அங்கு குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு முதலை அவர் காலைப் பற்றிக் கொண்டது. பிராமணர் பெருங்குரலெடுத்து மற்றவர்களை உதவிக்கு அழைத்தார்.
பார்வதிக்கு என்ன செய்வதென்று குழப்பம் ஏற்பட்டது. அந்த பிராமணனுக்கு உடனே உதவி செய்தாக வேண்டும். ஆனால் அவர் தன் கணவருமல்லர் உறவினரல்லர்: அப்படிப்பட்ட ஒருவரைத் தொட்டு உதவி செய்தால் அது தவறாகும். அதே சமயத்தில், ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்யாமல் இருப்பது பாவம். ஒருவேளை அந்த பிராமணர் இறந்துவிட்டால், அக்குற்றத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சிந்தித்துப் பார்த்த பார்வதி, உடனே உதவி செய்ய விரைந்தார். அந்த பிராமணனைத் தொட்டவுடன், அந்த உருவம் கலைந்து உண்மையான சிவன் வெளிப்பட்டார். சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. தேவர்கள், முனிவர்கள். அப்ஸ்ரஸ், கந்தர் வர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் திருதியை திதியில் நடைபெற்றதால், ருத்ரனை அந்நாளில் வழிபடுதல் சிறப்பாகும்.
சதுர்த்தி
சுக்கிலபட்சம் நான்காம் நாள் வருவது சதுர்த்தி விரதம். விநாயகருக்காக அனுஷ்டிக்கப்படுவது. இந்நாளில் எள்ளினை உண்ணுவது, மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.
தொடக்கத்தில், தகுதியை அடிப்படையாகக் கொண்டே எல்லாக் காரியங்களும் நடந்தன. காலப்போக்கில், நேர்மைக்கு இடம் குறைந்து கொண்டே வர, தேவர்கள் இந்த முட்டுக் கட்டைகளை நீக்கி, நல்ல காரியங்கள் நடைபெற ஒரு தேவனை உருவாக்கும்படி ருத்ரனை வேண்டினர். இதைக் கேட்ட ருத்ரன், விநாயகன் என்ற பெயரில் ஒர் உருவத்தைத் தன் வாயிலிருந்து தோற்றுவித்தார். அத்துடன் தன் மயிர்க்காலில் இருந்து பல்லாயிரக்கணக்கான விநாயகர்களைத் தோற்றுவித்ததால், இவர்களில் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் யார் என்று தெரியாமல் தேவர்கள் குழம்பினர். பிரம்மன் தலையிட்டு, ருத்ரனின் கோபத்தை அடக்கி, ருத்ரன் வாயிலிருந்து வெளிப்பட்ட விநாயகனே முதன்மையானவர் என்றும், மற்றவர்கள் அவருக்குத் தோழர்களாக இருப்பர் என்றும் கூறி கணங்களுக்குப் பதியாக இருப்பதால், தலைமைப் பொறுப் பேற்கும் விநாயகனுக்குக் கணபதி என்ற பெயர் கொடுத்தார். சதுர்த்தி அன்று கணேசர் பிறந்ததால் சதுர்த்தி சிறப்பு வாய்ந்த நாளாகும்.
(விநாயகர் பிறப்புப் பற்றி மற்ற புராணங்கள் வெவ்வேறு விதமாகப் பேசுகின்றன என்பதை அறியவும்,)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 14 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்த, உதவி, சதுர்த்தி, தேவர்கள், அவர், பிராமணர், ருத்ரனை