வராக புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
சுக்கிலபட்சம் ஆறாவது நாள் சஷ்டி எனப்படும். இந்நாளில் கார்த்திகேயனைத் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளும், நினைத்த காரியங்களும் கைகூடும்.
சஷ்டி அன்றுதான், பிரம்மன் கார்த்திகேயனைப் படைத் தளபதியாக நியமித்தார். அசுரர்களில் ஹிரண்ய கசிபு, ஹிரண்யாகூடின், விப்ர சித்தி ஆகியோர் திறம்படப் போர் செய்தனர். தேவர்கள் படைப்பில் இந்திரன் மட்டுமே திறம்படப் போர் செய்யக் கூடியவன். இதனால் அசுரர்கள் தேவர்களை விரைவில் வென்று விடுவர் என்று கருதி, பிரகஸ்பதி முனிவர் ஒரு நல்ல படைத் தளபதியைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார். ஆகையால் தேவர்கள், பிரம்மன் தலைமையில் சிவனைச் சென்று சந்தித்து உதவி கோரினர். சிவனும், பார்வதியும் அழகும், பலமும் பொருந்திய மகனைத் தோற்றுவித்தனர். அந்த மகனே குமாரன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்று அழைக்கப் பட்டான். அந்தக் கார்த்திகேயனையே பிரம்மா படைத் தளபதியாக நியமித்தார்.
சப்தமி
சுக்கிலபட்சம் ஏழாம் நாள் சப்தமி எனப்படும் சூரிய தேவனுக்கு உகந்த நாள். சூரியனுடைய கதிர்களின் மிகு வெப்பம் காரணமாகப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் அபாயம் தோன்றிற்று. சப்தமி அன்று, மற்ற தேவர்கள் சூரியனிடம் அவனது ஒளியினைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் உலகம் அழிவினின்று காப்பாற்றப்படும் என்றும் கூறினர். சூரியனும் அதை ஒப்புக் கொண்டான்.
அஷ்டமி
சுக்கில பட்சம் எட்டாவது நாள் அஷ்டமி எனப்படும்.
காசிய முனிவருக்கும், திதிக்கும் பிறந்த மகனே அந்தகன் என்ற பெயர் பெற்றான். இவனுக்கு ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கண்கள் இருந்தன. அந்தகர்' என்றால் பார்வை இழந்தவன் என்று பொருள். ஆனால் அந்தகனுக்குப் பார்வை இருந்தது. அவன் ஆயிரம் கைகளும் கால்களும் பெற்றிருந்தமையால் அவன் நடை, குருடனைப் போல் தள்ளாடி நடக்க வேண்டி இருந்தமையால் அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் வந்தது. யாராலும் தனக்குச் சாவு ஏற்படக் கூடாது, தன் தலை கீழே விழக்கூடாது என்று பிரம்மனிடம் வரம் வாங்கியபின் தேவர்களுக்குக் கொடுமை விளைவிக்கத் தொடங்கினான். தேவர்கள் பிரம்மனிடம் வேண்ட நானே கொடுத்த வரத்தை என்னால் மீட்க முடியாது. ஆகவே நாம் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுவோம் என்று கூறிய பிரம்மன் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றார்.
இதை அறிந்த அந்தகன் பெருஞ்சேனையுடன் வந்து சிவலோகத்தை எதிர்க்கத் தொடங்கினான். அவன் எண்ணம் சிவனைக் கொன்று பார்வதியைத் திருமணம் செய்து கொள்வதாகும். பெரும் போர் நிகழ்ந்தது. சிவனுடைய சூலம் அவனுடைய மார்பைப் பிளக்க அதிலிருந்து ஒழுகிய ரத்தம் பூமியில் விழுந்ததும் புதிய புதிய அந்தகாசுரர்களை உண்டாக்கிற்று. இதை அறிந்த சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து தோன்றிய மாத்ரி என்ற தேவதை பெரு நெருப்பை உண்டாக்கி அவன் ரத்தம் கீழே விழாமல் செய்துவிட்டது. இந்த நிலையில் விஷ்ணுவின் சக்கரம் அந்தகாசுரன் கழுத்தை அறுக்க, அவன் தலை கீழே விழக்கூடாது என்ற பிரம்மனின் வரத்தைக் காக்க சிவன் அந்தத் தலையை சூலத்தில் குத்தி ஆகாயத்தில் தூக்கி விட்டார். இந்த முறையில் அந்தகாசுரன் அழிந்தான்.
அந்தகன் அழிவு அஷ்டமி திதியில் நடைபெற்றதால் அந்தக் குறிப்பிட்ட திதியில் மாத்ரிகாவை வணங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 16 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், ஆயிரம், தேவர்கள், நாள், எனப்படும், அந்தகாசுரன், கீழே, அந்தகன், அஷ்டமி, படைத், போர், சஷ்டி, சப்தமி, பிரம்மன்