வராக புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
பிரபசா என்ற பெயருடைய நைமிசாரண்ய வனத்திற்கு வந்த முனிவர் கெளரமுகா அங்கு தவம் இயற்ற ஆரம்பித்தார்.
திதிகள்
கெளரமுக முனிவர், சிந்தாமணியிடம் வேண்டிக் கொண்டவுடன் லட்சக்கணக்கான வீரர்கள் அதிலிருந்து வந்தார்கள் அல்லவா? விஷ்ணுவின் அருளால் அவர்கள் மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். இந்த மன்னர்களில், ஒரு மன்னன் வழிவந்தவன் பிரஜபாலா என்ற அரசன். அவன் ஒருமுறை மகாதபா என்ற சக்திவாய்ந்த முனிவரைச் சந்திக்க அவரது ஆசிரமம் சென்றான். பிரஜபாலா மன்னனிடம் அவர் திதிகளைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் கூறினார். சில குறிப்பிட்ட திதிகளில், இறைவன் மீது பாடல்களைக் கூறும்பொழுது, அவை சிறப்பான பலன்களைப் பெறுகின்றன என்றார்.
பிரதிபாதா
சுக்கிலபட்சம் முதல் நாள் பிரதிபாதா எனப்படும். இது அக்னி தேவனுக்குரிய நாள் ஆகும். பிரபஞ்ச உற்பத்தியின் போது, பிரம்மா தன்னுடைய கோபக்கனலில் இருந்து அக்னி தேவனை உருவாக்கினார். ஆகையால் அக்னியைத் தொழுவதற்கு இது உகந்த நாள்.
துவிதியை
சுக்கிலபட்சம் இரண்டாம் நாள் துவிதியை எனப்படும். இந்நாளில் அஸ்வினிகள் எனப்படும் தேவதைகளைத் தொழவேண்டும்.
குதிரையாகவும், பெண் குதிரையாகவும் இருந்த சூரியனுக்கும், சம்ஜனாவிற்கும் பிறந்த மக்கள் நதத்யா, தசரா. இவர்களின் பெற்றோர்கள் குதிரை வடிவில் இருந்த பொழுது இவர்கள் பிறந்ததால், அஸ்வினிகள் என்று அழைக்கப் பட்டனர்.
திரிதியை
மூன்றாம் நாள் திரிதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் ருத்ரனுக்கு ஏற்ற நாள். இந்நாளில் கடைப் பிடிக்கப்படும் விரதம், திருமணமான தம்பதியருக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்.
பிரம்மன், ருத்ரனைத் தோற்றுவித்து, உற்பத்தித் தொழிலைப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறினார். ருத்ரன் தன்னால் இயலாது எனக் கூறவும், அவனை நீருக்கடியில் ஆயிரம் வருடங்கள் தியானம் செய்து சக்தியைப் பெருக்கிக் கொள்ளும்படிக் கூறி அனுப்பினார் பிரம்மன். ருத்ரனும் அவ்வாறே செய்து, நீரிலிருந்து ஒளியுடன் கூடிய உடம்புடன் வெளியே வந்தார்.
தட்சன் ஒரு யாகம் செய்து வந்தான். நீரிலிருந்து வந்த ருத்ரன், இந்த யாகம் பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த கோபம் கொண்டான். “பிரம்மா என்னிடம் படைக்கும் வேலையைக் கொடுக்க, அதனைச் செய்வதற்காக சக்தியைப் பெருக்கும் காரணத்தினால் நான் தவம் செய்யச் சென்றிருந்தேன். இன்னும் என்னுடைய தொழில் ஆரம்பிக்குமுன், இந்த யாகத்தை நடத்தியவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள் இவர் களெல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள். இவர்களை நான் அழித்தே தீருவேன்” எனக் கூறினான், ருத்ரன். அவன் காதுகளில் இருந்து வெளிவந்த நெருப்புப் பொறிகளிலிருந்து அசுரர்களும் வெளிவந்தனர். இவர்கள் யாகத்தில் மிகுந்த குழப்பங்களை விளைவிக்க, பிரம்மன் தேவர்களை அனுப்பி ருத்ரனை அமைதிப்படுத்தும்படி வேண்டினான். அவர்களும் அவ்வாறே செய்து, தட்சன் மகளாகிய தாட்சாயணியை, ருத்ரனுக்கு மணம் செய்து கொடுத்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 13 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நாள், செய்து, ருத்ரன், எனப்படும், இருந்து, பிரம்மன்