வராக புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
சுக்கிலபட்சம் நவமி என்று சொல்லப்படுவது ஒன்பதாவது நாள். காயத்ரி தேவியினால் சொல்லப்பட்ட வேத்ராசுரனின் கதை நடந்தது நவமி அன்றே.
(வேத்ராசுர என்ற பெயர் எந்தப் புராணத்திலும் குறிப்பிடப் பெறவில்லை. ஆகவே இது வராக புராணத்தின் கற்பனை என்று நினைக்க வேண்டியுள்ளது,)
முன்னொரு காலத்தில் வேத்ராசுரன் தந்தை இந்திரனால் கொல்லப்பட்டார். தனது அடுத்த பிறவியில் வேத்ராசுரன் தந்தைக்கு முற்பிறவியில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வந்தன. இதனால் கடுமையான விரதம் மேற்கொண்டு, இந்திரனைக் கொல்வதற்காக ஒரு மகனைப் பெறமுடியும் என்று நினைத் தான். வேத்ரவதி நதி தேவதையை மணந்து, வேத்ராசுரனைப் பெற்றான். இந்த வேத்ராசுரன் தேவர்களுக்கு எதிரியாகத் திகழ்ந்தான். தேவர்கள் சிவனின் உதவியை நாடிச் சென்றனர். வேத்ராசுரனை அழிக்க முடியாது என்று உணர்ந்த சிவபிரான், தேவர்களிடம், பிரம்மனைச் சென்று பார்க்கும்படி கூறினார்.
தேவர்கள் பிரம்மனைக் காணச் சென்ற பொழுது கங்கைக் கரையில் காயத்ரி மந்திரத்தைச் சொல்லியவாறு அமர்ந்திருந்தார் பிரம்மன். அவர் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி ஒன்றும் அறியாமல், சிவன் மீதோ, மற்ற தேவர்கள் மீதோ எந்தக் கவனமும் செலுத்தாமல் இருந்தார்.
அப்பொழுது திடீரென்று காயத்ரி தேவி தோன்றினாள். அவருக்கு எட்டு கைகளும், அக்கைகளில் எல்லாவிதமான ஆயுதங்களும் இருந்தன. இத்தேவி அசுரர்களுடன் ஒராயிரம் தேவ வருடங்கள் போர் செய்து, முடிவில் வேத்ராசுரனைக் கொன்றாள். பிரம்மனின் தவம் முடிவடைந்து, இமயமலையில் காயத்ரி தேவி வந்து தங்குவதற்கு ஒரு தகுந்த இடத்தை நிர்மாணித்தார்.
வேத்ராசுரன், காயத்ரி தேவியினால் கொல்லப்பட்டது நவமி திதி ஆகையால், அன்று காயத்ரி தேவியை வணங்குவது சாலச் சிறந்தது.
தசமி
சுக்கிலபட்சம் பத்தாம் நாள் வருவது தசமி திதியாகும். பிரம்மனால் படைக்கப்பட்ட பத்து தேவதைகளை வணங்க வேண்டும். இந்நாளில் வெறும் தயிர் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
ஏகாதசி
படைப்புத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த பிரம்மனுடைய வாயிலிருந்து ஒரு புழுதிக் காற்று புயல்போல் வெளியில் வந்தது. வந்தவுடன் அந்தப் புழுதி குபேரனுடைய வடிவைப் பெற்றது. இவ்வாறு குபேரன் பிறந்தது சுக்கிலபட்ச ஏகாதசி ஆகும். பிரம்மனின் உத்தரவுப் படி தேவர்களின் கஜானா அதிகாரியாகக் குபேரன் நியமிக்கப்பட்டான். குபேரனை நினைத்துச் செய்யும் இவ் விரதம் இந்த ஏகாதசி அன்று பொங்கலை உண்டு அனுஷ்டிக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 17 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காயத்ரி, நவமி, வேத்ராசுரன், வேண்டும், ஏகாதசி, விரதம், தேவர்கள்