வராக புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
சனத்குமார முனிவர், ஒரு முறை பூமிதேவியிடம் அவள் வராகத்தினால் காப்பாற்றப்பட்ட கதையினைக் கூறுமாறு கேட்டார். பூமிதேவியும் அக்கதையைக் கூறினாள். ஒருமுறை பூமியானது பாதாள உலகில் மூழ்கிப்போன போது, பூமி தேவி விஷ்ணுவிடம் வேண்டி தன்னைக் காப்பாற்றும்படிக் கேட்டாள். விஷ்ணுவைப் புகழ்ந்து அவள் பாடிய பாடல்களே கேசவ ஸ்துதி எனப்படும். இதனைப் படிப்பவர்கள், ஏழ்மை, பாவம் இவற்றினின்று விடுதலை பெறுவர். பூமிதேவி கூறியதைக் கேட்ட விஷ்ணு, மிகப் பெரிய வராக உருவம் எடுத்தார். ஆறாயிரம் யோஜனை உயரமும், மூன்றாயிரம் யோஜனை அகலமும் கொண்டிருந்தது அவ்வராகம். கடலினுள் புகுந்த வராகத்தினால் பூமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பல மலைகள் கடலினுள் விழுந்தன.
வராகம், பூமியைத் தேடிக் கண்டுபிடித்து, தன் கொம்புகளிடையே வைத்து நீருக்கு மேலே கொண்டு வந்தது. ஆயிரம் வருடங்கள் தன் கொம்புகளிடையே பூமியை வைத்திருந்து, பிரபஞ்ச உற்பத்தியின் போது, பூமியை அதற்குரிய இடத்தில் வைததது.
விஷ்ணுவைத் திருப்திப்படுத்துதல் எவ்வாறு ?
பூமிதேவியை நோக்கி வராகம் சொல்லியதாவது: மக்கள் மேற்கொள்ளும் சடங்குகள், கிரியைகள், ஹோமங்கள் என்பவற்றால் நான் அதிகம் திருப்தி அடைவதில்லை. துவாதசி நாளன்று வெண்மையான உடை உடுத்திக் கொண்டு, வெண்மையான மலர்கள் கொண்டு விஷ்ணுவைப் பூஜித்தால் போதுமானது. அவ்வாறு பூஜை செய்பவர் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருசேர விஷ்ணுவை நினைப்பதில் ஈடுபடுவாரேயானால் அதைவிட விஷ்ணுவைத் திருப்தி செய்ய வேறு எந்த வழியும் தேவையில்லை. உண்மையான அன்பு ஒன்றையே விஷ்ணு விரும்புகிறார். சடங்குகளில் அன்புக்கு முக்கியத்துவம் இல்லை. ஆதலால் விஷ்ணு அதை அதிகம் விரும்புவதில்லை.
நால்வகை வர்ணத்தாரும் விஷ்ணுவின் ஆசியைப் பெறத் தகுதி உடையவர். மேல்நால்வகையினரும் நற்பழக்கங்கள், துயசிந்தனை, பிறருக்குக் கொடுத்தல், அன்புடைமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல் ஆகிய குணங்களுடன் இருப்பார்களேயானால் விஷ்ணுவின் ஆசியை எளிதில் பெற முடியும்.
சைவ உணவு உட்கொண்டு அமைதியாகவும், பொறி புலன்களை அடக்கிய முறையிலும், பிறரிடம் பகைமை, பொறாமை முதலிய தீக்குணங்கள் இல்லாமலும் யார் விஷ்ணுவை வழிபடுகிறார்களோ அவர்கள் எளிதில் விஷ்ணுவின் அருளைப் பெறுகிறார்கள். போதுமென்று மனத்தோடு வாழும் மனிதனையும், கணவனிடம் அன்பு கொண்ட மனைவியையும் விஷ்ணு அருள் செய்கிறார். விஷ்ணு மன்னிக்க முடியாததும், ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகிய சிலவற்றைக் காணலாம்.
1. அசுத்தமான உணவை உண்ணுதல், 2. குளிக்காமலும், இறந்த உடலைத் தொட்டு, சுடுகாட்டில் எரித்து வந்தும் தன்னைத் தூய்மை செய்து கொள்ளாது விஷ்ணுவை வணங்குதல், 3 அமைதி இல்லா மனத்துடனும், யாரிடமாவது கோபம் கொண்ட மனநிலையிலும், 4. மீன் உணவு வாத்துக் கறி உண்ட பின்பு, 5. விஷ்ணுவிற்குப் படைக்காமல் உண்ணப் படுகின்ற உணவு, 5. மது உண்ட பின்பு, 7. பன்றிக் கறி உண்ட பின்பு, 8. இசைவு இல்லாமல் விஷ்ணு கோவிலைத் திறப்பதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 11 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, உணவு, உண்ட, விஷ்ணுவின், பின்பு, ஆகிய, பூமியை, கொண்டு, வராகம், விஷ்ணுவை