வராக புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் விப்ரசித்தி என்ற கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மிக அழகான ஒரு பெண் இருந்தாள். மகிஷ்மகி என்ற பெயருடைய அவள், தன் தோழிகளோடு சேர்ந்து அழகிய பள்ளத்தாக்கு ஒன்றில் சென்று கொண்டு இருக்கையில், ஆற்றங்கரையில் அமைந்த அழகிய ஆசிரமம் கண்டார்கள். அந்த ஆசிரமம், அது அமைந்திருக்கும் சூழ்நிலை ஆகியவற்றைக் கண்ட மகிஷ்மகி அந்த ஆசிரமத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். உள்ளே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். அவர் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டால், அந்த ஆசிரமம் தனக்குக் கிடைக்கும் என்று எண்ணிய மகிஷ்மகி ஒரு பெண் எருமை வடிவு கொண்டு ஆசிரமத்தின் வெளியே குழப்பம் விளைவித்தாள். பிறகு முனிவனை பயமுறுத்த அவ்வடிவுடன் உள்ளே நுழைந்தாள். முதலில் சற்று பயந்து போன முனிவர் உடனே தன் அறிவு விளக்கத்தால் அந்த எருமை மகிஷ்மகி என்பதைக் கண்டு விட்டார். கடுங் கோபம் கொண்ட அவர், நீ ஒரு பெண் எருமையாக நூறு ஆண்டுகள் திரிவாயாக என்று சாபமிட்டார். மகிஷ்மகி தன் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று மிகவும் வேண்டிக் கொள்ள அவளுக்கு எப்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறக்கிறதோ அப்பொழுது அவளுடைய சாபம் நீங்கும் என்றும், சாப விமோசனம் கூறினார்.
நர்மதை ஆற்றின் கரையிலேயே இந்தப் பெண் எருமை திரிந்து கொண்டிருக்கும் பொழுது அந்த ஆற்றில் ஒரு விசேஷம் நடைபெற்றது. சிந்து துவீபா என்ற முனிவனின் சக்தியால், நர்மதை ஆற்று நீர் ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றது. அந்த நேரத்தில் இந்தப் பெண் எருமை நர்மதை நீரில் குளிக்கவும், அவளுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் மூன்று உலகங்களும் யாருடைய பெயரைக் கேட்டவுடன் நடுங்குகின்றனவோ அந்த 'மகிஷாசுரன்’ ஆகும்.
இதே மகிஷாசுரன் தான் வைஷ்ணவி தேவியை மணக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தூதர்களை அனுப்பினான். வைஷ்ணவி தேவி தன்னையோ தன் பரிவாரங்களில் எந்த ஒருவரையுமோ கூட அவன் மணக்க முடியாது என்று சேதி அனுப்பி விட்டாள். அதன் பிறகு தேவபடைகள் அழிந்தாலும் வைஷ்ணவி தேவியும், அவரது துணைவியரும் போருக்கு எழுந்த பொழுது அசுரப் படைகள் அழிந்தன. இறுதியாக தேவியே, மகிஷாசுரனுடன் நேரடியாகப் போர் புரிந்தார். பல காலம் போர் புரிந்தபின், வைஷ்ணவி தேவி மகிஷனை வென்றாள் என்று வராக புராணம் கூறுகிறது.
(இக்கதையை விரிவாகச் சொல்லும் மார்க்கண்டேய புராணம், தேவி பாகவதம் ஆகிய அனைத்துமே துர்க்கைதான் மகிஷனைக் கொன்றவள் என்று பேசுகின்றனவே தவிர, வைஷ்ணவியின் பெயரைக் கூறவில்வை என்பதைச் சிந்திக்க வேண்டும்,)
வராக வடிவிலிருந்த விஷ்ணு, பிருத்விக்குச் சொன்ன சத்யதபா முனிவர் கதை
சத்யதபா என்ற முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு முறை சுள்ளிகளைச் சேர்த்துக் கட்டுவதற்காக வெட்டின பொழுது அவருடைய கையிலுள்ள சுண்டுவிரல் வெட்டப்பட்டு தெறித்து விட்டது. வெட்டப்பட்ட விரலில் இருந்து ரத்தம் வராமல், சாம்பல் போன்ற பொடி வெளி வந்தது. துண்டிக்கப்பட்ட விரலை எடுத்து வெட்டுண்ட பகுதியில் வைத்து அமுக்கியவுடன் அந்த விரல் உடம்புடன் ஒட்டிக் கொண்டது. அந்த முனிவர் எந்த மரத்தடியில் தங்கி இருக்கும் பொழுது இந்நிகழ்ச்சி நடைபெற்றதோ அந்த மரத்தில் கின்னர தேவ ஜாதியைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் இந்த நிகழ்ச்சி முழுவதையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதில் ஏற்பட்ட அதிசயம் தாங்காமல் அவர்கள் இருவரும் தேவேந்திரனிடம் சென்று தாங்கள் கண்டதைக் கூறினர். தேவேந்திரன் விஷ்ணுவிடம் சென்று இவர்கள் கூறியதை எடுத்துச் சொல்லி, அந்த முனிவனைச் சோதிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 9 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்த, வேண்டும், பெண், முனிவர், மகிஷ்மகி, வைஷ்ணவி, எருமை, பொழுது, தேவி, குழந்தை, சென்று, ஆசிரமம், நர்மதை