மார்க்கண்டேய புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
ஒரு நாள், அரச சபையில் ஒரு பிராமணன் வந்தான். “அரசே! என்னுடைய மனைவியை யாரோ கவர்ந்து சென்று விட்டார்கள். அவளை எப்படியாவது மீட்டு வரவேண்டும்” என்றான். "ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ள நாட்டில் உன் மனைவியை எங்கே தேடுவது? அது முடியாத காரியம்” என்றான் அரசன். அதைக்கேட்ட பிராமணன், “அரசே! எங்கள் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு உனக்கு வரியாகச் செலுத்துகிறோம். எதற்காக அதைச் செலுத்துகிறோம்? எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு” என்றான். இதைக் கேட்ட அரசன் வேறு வழியில்லாமல் "உன் மனைவியின் அடையாளத்தைச் சொல்!” என்றான். பிராமணர், “அவள் ஒல்லியாக அழகே இல்லாத முகத்துடன், அவலட்சணமாக இருப்பாள்” என்றான். அரசன், "இப்படிப்பட்ட ஒரு மனைவி போய்விட்டதற்காக நீ ஏன் வருந்த வேண்டும்?” என்று கேட்டான். பிராமணன் அதற்கு “அவள் எப்படி இருந்தாலும் என்னுடைய மனைவி, அவளைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை" என்றான். வேறு வழியில்லாமல் உத்தமன் ரதத்தில் ஏறிப் புறப்பட்டான். எங்கெல்லாம் தேடியும் கிடைக்காமையால் காட்டில் இருந்த ஒரு முனிவரிடம் சென்றான். அரசனை வரவேற்ற முனிவர் தன் சிஷ்யனைப் பார்த்து, உபசரிக்கின்ற பொருட்களைக் கொண்டு வா! என்றார். சிஷ்யன் அரசன் முகத்தைப் பார்த்துவிட்டு, 'அதற்குத் தேவையில்லாத பாத்திரம் இது என்று கூறிவிட்டுப் போய்விட்டான். இருந்தாலும் முனிவர் அரசனை அமரச் செய்து வந்த விஷயம் என்ன என்று விசாரித்தார். முனிவர், “முக்காலமும் அறிந்தவன் நான். என் சீடனுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உன் வாழ்க்கை முழுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. அதனால்தான் உன் முகத்தைப் பார்த்து, 'உபசரிப்புக்குத் தகுதியில்லாதவன் நீ என்று கூறிவிட்டான். இருந்தாலும் உன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பிராமணன் மனைவியைத் தேடி வந்திருக்கிறாய். ஆதலால் உனக்கு உதவ வேண்டியது என் பொறுப்பாகிறது. வலகா என்ற ராட்சசன், உட்பலவதா என்ற காட்டில் அவளை ஒளித்து வைத்திருக்கிறான். நீ சென்று அவளை மீட்டுப் போ” என்று கூறிவிட்டார்.
அசுரன் இருக்குமிடத்தை நாடிச் சென்றான் உத்தமன். அந்த ராட்சசன் அரசனைக் கண்டதும் விழுந்து வணங்கி, “அரசே! என் இருப்பிடம் தேடி வந்த காரணம் யாது?’ எனக் கேட்டான். உத்தமன், “நீ பிராமணன் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். அவளைத் தின்னப் போகிறாயா? அல்லது மணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டான். அதற்கு ராட்சசன், “அரசே! நீங்கள் நினைப்பது போல் நரமாமிசம் தின்னும் ராட்சசன் அல்ல நான். பிராமணன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. அழகான மனைவியர் பலர் எனக்கிருக்கின்றனர்” என்றான். உத்தமன், "அப்படியானால் இவளை ஏன் சிறைப்பிடித்தாய்?" என்று கேட்க, அரக்கன், “அரசே! எனக்கு அதீத சக்திகள் பல உண்டு. ஒருவரைக் கண்டால் அவரிடம் உள்ள தீய குணங்களை எல்லாம் உறிஞ்சி விடுவேன். அந்தப் பிராமணப் பெண்ணின் தீய குணங்களை உறிஞ்சிவிட்டேன். இவளைக் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. இவள் கணவன் ராட்சசர்களை ஒழிப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் நிறைய யாகங்கள் செய்கிறான். இந்த யாகங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஒருவன் மனைவியோடு இருந்துதான் யாகம் செய்ய வேண்டும். இவளைத் தூக்கி வந்துவிட்டபடியால், பிராமணன் இனி யாகம் செய்ய முடியாது. இப்போது அவளை உன்னுடன் அனுப்புவதில் தடையில்லை” என்று கூறி அனுப்பிவிட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 16 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிராமணன், என்றான், உத்தமன், செய்து, “அரசே, ", அரசன், ராட்சசன், அவளை, முனிவர், கொண்டு, இருந்தாலும், வேண்டியது, காட்டில், வேறு, மனைவியை, கேட்டான்