பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணன், திடீரென்று பாலை அருந்த வேண்டும் என்று நினைத்து, தன் இடப்பக்கத்தினின்று சுரபி என்னும் பசுவினைப் படைத்தான். அப்பசுவினின்று பாலைக் கறந்து, அப்பாலைக் குடித்தான் கிருஷ்ணன். அப்பாத்திரத்தில் மீதமிருந்த பால் ஒர் ஆற்றின் அளவு அதிகமாகிப் பெருகியது. சரோவரா என்ற பெயருடைய பாலாறாக ஒடியது. சுரபியின் மயிர்க்கால்களில் இருந்து காமதேனு பசுக்கள் உண்டாயின.
வராக கல்பத்தில், விஷ்ணு மூவுலகத்திலும் பால் இல்லாமல் போகவே, இந்திரன் சுரபியை வேண்டிப் பாலினைப் பெற்றான். கார்த்திகை மாதத்தில் தீபாவளியை அடுத்த நாள் சுரபி என்னும் பசுவைத் தொழுது வணங்குவதற்குச் சிறந்த நாள்.
கணேசன்
கணேசனைப் பற்றி அறிய விரும்பிய நாரத முனிவருக்கு, நாராயண முனிவர் கூறத் தொடங்கினார். தேவர்களின் சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு தட்சன் மகள் சதியாகப் பிறந்தார். தட்சன் யாகத்தில் சிவனை அவமானம் செய்த காரணத்தினால், தீக்குள் பாய்ந்த சதி இமவானுக்கும், மேனகைக்கும் பார்வதி என்ற பெயருடன் மகளாகத் தோன்றினார். புண்யக விரதம் என்ற விரதம் இருந்து, கிருஷ்ணனையும் வணங்கியதால், அக்கிருஷ்ணனே பார்வதிக்குள் குழந்தையாகத் தோன்றினார். குழந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யும் பொழுது, சூரியனின் புத்திரனாகிய சனி அங்கு தோன்றி, தாய், குழந்தை இருவரையும் பாராது, தன் கண்களைத் தாழ்த்தியவாறே நின்றார். அவரைப் பார்த்த பார்வதி தேவி, "நீ ஏன் என் குழந்தையைப் பார்க்கவில்லை?” என்று கேட்க, சனியும் "என் மீது ஒரு சாபம் உள்ளது. நான் எதை நேரிடையாகப் பார்க்க நேரிட்டாலும், அது அழிந்துவிடும். நான் என் மனைவியை உதாசீனப்படுத்தியதால் எனக்கு இச்சாபம் ஏற்பட்டது” என்று கூறினான். இச்செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பார்வதி, தன் மகனைக் காணும்படி சனியை அழைக்க, ஆவலினால் சனி அங்கு சென்று தன் கடைக்கண்ணால் குழந்தையை நோக்கினான். சாபத்தின் காரணமாக, அவன் பார்த்தவுடன் குழந்தையின் தலை தனியே வந்து பார்வதியின் மடியில் விழுந்தது. இதைக் கண்ட பார்வதி மயக்கமுற்றார். கருட வாகனத்தில் சென்ற கிருஷ்ணன், ஐராவத யானையின் தலையை வெட்டி, குழந்தைக்குப் பொருத்தி உயிர் கொடுத்தார்.
இருப்பினும், கோபம் கொண்டிருந்த பார்வதி சனிக்கு, அவன் அங்கஹlனனாக இருக்கும்படி சாபம் கொடுத்தாள். சுற்றி இருந்தோர் அவளைச் சமாதானம் செய்தனர். கணேசனுக்கு பிரம்மா கமண்டலத்தினையும், பிருத்வி ஒரு எலியையும் பரிசாகக் கொடுத்தார். கணேசனுக்கு கஜானனன், லம்போதரன், ஏகதந்தன், விக்னேஸ்வரன் எனப் பல பெயர்கள் உண்டு. தடைகளை நீக்குபவன் என்பதால் விக்னேஸ்வரன் என்ற பெயர் பெற்றார் கணேசன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 12 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பார்வதி, கிருஷ்ணன், இந்திரன், அவன்