அக்னி புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
யயாதி மன்னன் பரம்பரையில் வந்தவனாகிய குரு வம்சத்தைச் சேர்ந்தவன் சந்தனு அரசன். சந்தனுவும் கங்கையும் மணம் புரிந்து, அவர்களுக்கு பீஷ்மர் மகனாகப் பிறந்தார். சந்தனு அரசன், சத்யவதி என்பவளையும் மணந்து சித்ரங்கதா, விசித்ரவீரியன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சித்ரங்கதா இளமையிலேயே இறந்து போனதால், காசி அரசனை வென்று அவனுடைய மகள்களாகிய அம்பிகா, அம்பாலிகா இருவரையும் தன் சகோதரன் விசித்ரவீரியனுக்கு மணம் செய்து வைத்தார் பீஷ்மர். விசித்ரவீரியனுக்குப் பிள்ளைகள் இல்லாமலே இறந்து போனவுடன், வியாசதேவர் அஸ்தினா புரத்திற்கு அழைக்கப்பட்டார். வியாசதேவருக்கும் அம்பிகா விற்கும் பிறந்த பிள்ளை திருதராஷ்டிரன் என்றும், வியாச தேவருக்கும் அம்பாலிகாவிற்கும் பிறந்த பிள்ளை பாண்டு என்றும் அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரன் காந்தாரியை மணந்து, துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். பாண்டு, குந்தியை மணந்து யுதிஷ்டிரன், பீமன், அருச்சுனன் என்ற மக்களையும், மாத்ரியை மணந்து நகுலன், சகாதேவன் என்ற மக்களையும் பெற்றான். பாண்டுவின் மகன்களாகிய பஞ்ச பாண்டவர்களை அழிக்க துரியோதனன் பல வழிகளில் முயன்றான். அரக்கு மாளிகைகளில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்தான், துரியோதனன். அங்கிருந்து தப்பிய பாண்டவர்கள், ஏகசக்ரா என்ற இடத்தில் பிராமணர்களைப் போன்று மாறு வேடத்தில் உலவினர். பாஞ்சால நாட்டு மன்னனைத் தோற்கடித்து அவன் மகளாகிய பாஞ்சாலியை ஐவரும் மணந்து கொண்டனர்.
பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்த துரியோதனன், வேறு வழியின்றி அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்தான். அக்னி தேவன் மூலம் தெய்வீக ஆயுதங்களைப் பெற்றான் அருச்சுனன். குருவாகிய துரோணர் அவனுக்குப் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார்.
ஒரு சமயம், பாண்டவர்கள் ராஜசூய வேள்வி நடத்தி, பல அரசுகளையும், பெரும் பொருட்களையும் பெற்றனர். இதனால் பொறாமை அடைந்த துரியோதனன் தன் மாமனாகிய சகுனியின் துணையுடன், சூதாட்டத்தில் பாண்டவர்களை வெற்றி கொண்டான். தோல்வியின் காரணமாகப் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒராண்டு அஞ்ஞாத வாசமும் ஏற்க வேண்டி வந்தது. திரெளபதியுடன் பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் முடித்த பஞ்ச பாண்டவர்கள், ஒராண்டுக் காலம் மாறுவேடத்தில் வாழ, விராட மன்னன் அவைக்கு வந்தனர். கெளரவர்களுக்கும், விராட மன்னனுக்கும் நடந்த போரில், பாண்டவர்கள் விராட மன்னனுக்கு உறுதுணையாக நின்று வெற்றி பெற்றனர். ஒராண்டுக் காலம் முடிந்த பின்னர், விராட அரசன் மகளாகிய உத்தரையை, அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவிற்கு மணம் முடித்தனர்.
மீண்டும் அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள் தங்களுக்குச் சேரவேண்டிய அரசாட்சியைக் கேட்க, துரியோதனன் மறுத்தான். கிருஷ்ணனே இவர்களுக்குத் தூதாகச் சென்று, ஐந்து கிராமங்களையேனும் பாண்டவர் களுக்குக் கொடுக்கும்படி சொல்ல, துரியோதனன் அதற்கும் மறுத்து விட்டான். குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் போர் துவங்கியது. வயதில் மூத்தவர்களாகிய பீஷ்மர், குருவாகிய துரோணர் முதலியோர் கெளரவர்கள் பக்கம் இருந்து போர் புரிவதைக் கண்ட அருச்சுனன், போர் செய்தவற்குச் சற்றுத் தயங்கினான். அருச்சுனனுக்குக் கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே 'பகவத் கீதை' எனப்படும். இதில் கிருஷ்ணன் அருச்சுனனைப் பார்த்து, “அருச்சுனா பீஷ்மர், துரோணர் இப்போரில் இறந்து விடுவார்களோ என்று கலங்க வேண்டாம். இறப்பு என்பது அவர்களின் உடலுக்கு மட்டுமே. ஆன்மாவிற்கு என்றுமே இறப்பு இல்லை. மனிதன் இறந்தவுடன் அவனது ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியே வரும் ஆன்மா, வேறோர் உடம்பிற்குள் புகுந்து விடுகிறது. ஆகையால் ஆன்மா என்றும் அழியாதது. ஆன்மாவும் பரமாத்மாவும் இரண்டறக் கலக்கும் பொழுது ஏற்படுவதே உண்மையான விடுதலை” என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 8 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துரியோதனன், பாண்டவர்கள், மணந்து, அருச்சுனன், விராட, பெற்றான், பீஷ்மர், போர், துரோணர், காலம், என்றும், மணம், இறந்து, அரசன்