அக்னி புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
பிரம்மனின் மகனாகிய அத்ரி முனிவரின் வழியில் தோன்றியவன் யயாதி மன்னன். அவனது இரு மனைவியருள் தேவயானியின் மகனாகிய யாதுவின் பரம்பரையில் வந்தவர்களே யாதவர்கள். யாதவ குலத்தில் தோன்றிய வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது மகனாக விஷ்ணு அவதரித்தார். கிருஷ்ணன் என்ற பெயர் சூட்டப்பெற்ற அவர் தேவகியின் சகோதரனாகிய கம்சனின் கொடுமைகளுக்குப் பயந்து நந்தகோபர்- யசோதையிடம் வளர்ந்தார்.
நந்தனிடம் வளர்ந்து வந்த பலதேவனையும், கிருஷ்ண னையும் கொல்வதற்காகக் கம்ச மன்னன் பூதனை என்ற அரக்கியையும் அனுப்பினார். அவளைக் கிருஷ்ணன் கொன்றான். யமுனை நதியில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும், அரிஷ்டா, விரிஷபா, கேசி, தேனுகா என்ற பல அரக்கர்களையும் கிருஷ்ணன் கொன்றார். இந்திரனை வழிபடுவதை நிறுத்திய கிருஷ்ணன், இந்திரன் கோபம் கொண்டு கோகுல மக்களைக் கொல்வதற்காக அனுப்பிய கொடிய மழையினின்றும் காப்பாற்றினார். கோவர்த்தன மலையினைத் தூக்கி, அதன் கீழே மக்கள் மழைக்கு ஒதுங்கி நிற்கும்படி செய்து அவர்களைக் காப்பாற்றியதால் கோவர்த்தன் என்ற பெயர் பெற்றார்.
தன் சகோதரி தேவகியின் எட்டாவது மைந்தனால் தனக்குச் சாவு நேரிடும் என்பதை அறிந்த கம்ச மன்னன் கிருஷ்ணனைக் கொல்லப் பல வழிகளில் முயன்றான். மதுராவிற்குக் கிருஷ்ண பலராமரை வரவழைத்து, குவலயா பீடம் என்ற மதம் பிடித்த யானை மூலமும், சானுரன், முஷ்டிகன் என்ற மல்யுத்த வீரர்களை அனுப்பியும் கொல்ல ஏற்பாடு செய்தான். அம்முயற்சியில் கம்சனால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் கிருஷ்ணன் கம்சனைக் கொன்றார்.
கம்சனின் மனைவியின் தந்தையாகிய ஜராசந்தன், கம்சன் இறந்த செய்தி கேட்டு யாதவர்களைக் கொடுமைப்படுத்தினான். கிருஷ்ணனுடன் நீண்டகாலம் யுத்தம் செய்து முடிவில் இறந்து போனான். பிறகு யாதவர்கள் கிருஷ்ணன் கூறியபடி துவாரகை என்ற நகரத்தைத் தோற்றுவித்து அங்கு குடியேறினர்.
நரகாசுரன் என்ற அசுரன் தேவர்கள், கந்தர்வர்களின் மகளிர் பதினாயிரம் பேரைச் சிறை வைத்திருந்தான். இவர்கள் அனைவரையும் மீட்டு கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். பஞ்சஜன என்ற தைத்திரியனையும், காலயவன னையும் கொன்றது கிருஷ்ணனின் வீரத்தின் எடுத்துக்காட்டுகள்.
கிருஷ்ணனுக்குச் சம்பா, பிரத்யும்னன் என்ற பிள்ளைகளும் இருந்தனர். இவர்களில் பிரத்யும்னனை சம்பரா என்ற அசுரன் கவர்ந்து சென்று கடலில் வீசிவிட்டான். அக் குழந்தையை ஒரு மீன் விழுங்கி விட்டது. அம்மீனை ஒரு மீனவன் சம்பராவின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். அந்த மீனை வெட்டிய மாயாவதி என்ற பெண், மீனின் வயிற்றில் உள்ள குழந்தையைப் பார்த்து அக்குழந்தையைத் தானே வளர்த்து வந்தாள். பெரியவனாக வளர்ந்த பிரத்யும்னன் சம்பராசுரனைக் கொன்று, மாயாவதியைத் திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்கு மகனாகப் பிறந்தான் அனிருத்தன். வலியின் மகனாகிய வாணாவின் மகள் உஷாவை, கந்தர்வ மணம் செய்து கொண்டான் அனிருத்தன். தன் மகள் அனிருத்தனை மணம் செய்து கொண்டதை அறிந்த வாணா, கடுங்கோபம் கொண்டு அனிருத்தாவுடன் போர் தொடுத்தான். கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன் ஆகியோர் அனிருத்தன் பக்கமும், சிவபெருமான், நந்திதேவர், கார்த்திகேயன் ஆகியோர் வாணாவின் பக்கமும் இருந்து போர் புரிந்தனர். முடிவில் கிருஷ்ணன் வாணாவின் ஆயிரம் கைகளை வெட்டி எறியும் பொழுது, சிவபெருமான் இடையிட்டு இரண்டு கைகளை விட்டு விடும்படி கூறவே, கிருஷ்ணனும் அதனை ஒப்புக் கொண்டார்.
மேலே கூறப்பட்ட கதைகள் அனைத்தும் அக்னி புராணத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ஆயினும், எட்டாவது அவதாரமாகிய கிருஷ்ணன் பற்றிய கதைகள் மகாபாரதத்திலும் கூறப்பட்டு இருப்பதால், அக்னி புராணம் இனி பாரதக் கதையினைக் கூறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 7 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், செய்து, பிரத்யும்னன், வாணாவின், அனிருத்தன், கொண்டு, மன்னன், எட்டாவது, கிருஷ்ண, மகனாகிய