அக்னி புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
இராமனைக் காட்டுக்கு அனுப்ப தசரதன் மறுத்து விட்டான். இதனை அறிந்த இராமன் தானே முன்வந்து காட்டுக்குப் போவதாகச் சொல்லி விட்டு, இலக்குவனுடனும் சீதையுடனும் காட்டுக்குப் புறப்பட்டான். அந்த நேரத்தில் பரதனும் சத்ருக்கனனும் மாமன் வீட்டிற்குச் சென்று இருந்தார்கள். இராமன் பிரிவைத் தாங்காத தசரதன் இறந்து விட்டான். பரதனுக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பி அயோத்திக்கு வரவழைத்தார்கள். நடந்ததை அறிந்த பரதன் பட்டத்தை ஏற்க மறுத்து, காட்டிற்குச் சென்று இராமனை மீண்டும் வருமாறு அழைத்தான். இராமன் மறுத்து விடவே, அவனுடைய பாதுகைகளைக் கொண்டு வந்து அயோத்திக்கு வெளியே நந்திக் கிராமத்தில் தங்கி, சிம்மாசனத்தில் பாதுகைகளை வைத்துவிட்டு இராமனின் பிரதிநிதியாக இருந்து அரசாட்சி செய்தான்.
காடு சென்ற இராமன், குகன் என்ற அரசனுடைய எல்லைக்குள் சென்று அவனோடு நட்புக் கொண்டு, ஜானவி நதியைக் கடந்து, பிரயாகை வந்து, பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்கி, பிறகு சித்திரக்கூட மலைக்குச் சென்று, அங்குள்ள பஞ்சவடி என்ற அழகிய இடத்தில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சூர்ப்பணகை என்ற அரக்கி இவர்களைக் கண்டு, இராமன் மேல் ஆசை கொண்டு பேச இலக்குவன் அவள் மூக்கையும் காதுகளையும் வெட்டி விட்டான். மூக்கை இழந்த சூர்ப்பனகை தன் தமையன் கரன் என்பவனிடம் முறையிட்டாள். பதினாயிரம் படையுடன் வந்த கரன் இராமனிடம் படைகளை இழந்து தானும் கொல்லப்பட்டான். இதை அறிந்த சூர்ப்பணகை மற்றொரு தமையனாகிய இராவணனிடம் சென்று முறையிட்டாள். இராவணன் மாரீசனைப் பொன் மான் வடிவுடன் பர்ணசாலை எதிரே உலவுமாறு கட்டளை இட்டான். சீதையின் விருப்பப்படி பொன் மானை விரட்டிக் கொண்டு இராம இலக்குவர் போய்விட்டனர். சீதை தனியே இருப்பதை அறிந்த இராவணன் அவளைக் கவர்ந்து செல்லும் பொழுது, ஜடாயு என்ற கழுகின் வேந்தன் அதைத் தடுக்க முயல, இராவணனால் கொல்லப்பட்டான். சீதையை எடுத்துச் சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான் இராவணன். மீண்டு வந்த இராம இலட்சுமணர் சீதையைக் காணாததால் பல இடங்களில் தேடிச் சென்று சுக்ரீவனை துணைக்குக் கொண்டு, அவன் தமயன் வாலியைக் கொன்று, குரங்குப் படையுடன் கடற்கரை அடைந்த இராமன், சேதுவுக்கும் இலங்கைக்கும் ஒரு கல் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று இராவணன் தம்பி கும்பகர்ணன், அவன் மகன் இந்திரஜித்தன். இராவணன் அனைவரையும் கொன்று சீதையை மீட்டு வந்து முடி சூடிக்கொண்டான். தம்பி சத்ருக்கனனைக் கொண்டு லவணன் என்ற அசுரனைக் கொன்று வருமாறு கட்டளை இட்டான். சத்ருக்கனன் அப்படியே செய்து அந்த நாட்டில் மத்ரா என்ற நகரை ஸ்தாபித்தான். ஜைனுசா என்ற கந்தர்வன் மக்களைக் கொடுமைப்படுத்தியதால் இராமன் உத்தரவின்படி பரதன் ஜைனுசாவுடன் போர் தொடுத்து அவனை வென்று அவன் நாட்டை இரு கூறுகளாகப் பிரித்து தக்ஜா என்ற மூத்த மகனுக்குத் தக்புசீலா என்ற பகுதியையும், புஷ்கரன் என்ற இரண்டாவது மகனுக்குப் புஷ்கரவதி என்ற பகுதியையும் பிரித்துக் கொடுத்து ஆளுமாறு செய்தான். இராமன் பிள்ளைகளாகிய லவ, குசர்களோடு பதினோராயிரம் ஆண்டுகள் நாட்டைச் சிறந்த முறையில் ஆட்சி செய்து உயிர் துறந்தான்.
அக்னி புராணத்தில் கண்டுள்ளபடி இராமாயணக் கதை இதுவாகும். இக்கதையை நாரதரிடம் கேட்டு வால்மீகி எழுதினார். இராமனாக விஷ்ணு அவதரித்தது ஏழாவது அவதாரம் ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 6 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இராமன், சென்று, கொண்டு, இராவணன், அறிந்த, அவன், கொன்று, வந்து, மறுத்து, விட்டான்