அக்னி புராணம் - பகுதி 23 - பதினெண் புராணங்கள்
குறிப்பிட்ட காலத்தில் பிரளயங்கள் வந்து போகின்றன. நாலாயிரம் யுகங்களுக்குப் பிறகு பிரளயம் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளுக்கு மழை இன்மையால் உயிர் வர்க்கங்கள் மடிகின்றன. விஷ்ணுவின் ஏவலால், சூரியன் சமுத்திரத்தின் நீரை வற்றச் செய்கிறான். ஏழு சூரியன்கள் ஆகாயத்தில் தோன்றி மூன்று உலகங்களையும் எரிக்கின்றனர். பெரும் பாம்பின் மூச்சுக்காற்றும் எஞ்சியவற்றை எரிக்கின்றது. மூன்றுலகமும் எரிந்து அனைத்தும் சம நிலையான பொழுது, கருமேகங்கள் தோன்றி விடாது மழை பொழிகின்றது. நூறு வருடங்களுக்கு விடாது மழை பொழிகிறது. விஷ்ணுவின் மூச்சுக் காற்றிலிருந்து, புயல் காற்று உருவாகி மேகங்களை விரட்டுகிறது. எங்கும் நீரே நிறைந்திருப்பதால், விஷ்ணு நீரின் மேல் உறங்குகிறார். ஒரு கல்பம் முழுவதும் உறங்கிய விஷ்ணுவிடம் முனிவர்கள் வந்து மூன்று உலகங்களையும் படைக்குமாறு வேண்டுகின்றனர்.
கீதை
ஸ்ரீகிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த கீதையின் சாரத்தை அக்னி புராணம் இங்கு பேசுகிறது.
இப்பூத உடம்பு இருப்பதால் மகிழ்ச்சி அடைவதற்கோ, இவ்வுடம்பு அழிந்து விட்டால் துக்கப்படுவதற்கோ எவ்விதக் காரணமும் இல்லை. ஆன்மா அழிவதும் இல்லை, தேய்வதும் இல்லை. அழிக்கப்படாதது. அது சிரஞ்சீவித்துவம் உள்ளது. ஆத்மனைப் பற்றி யாரும் அழத் தேவையில்லை. ஆத்மன் அதை விரும்புவதும் இல்லை. பொறிபுலன்களுக்கு அடிமைப் பட்டவர்கள் இந்த உண்மையை அறிய முடியாது. ஆத்மாவை அறிந்தவன் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதில்லை. ஆத்மா எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதும் இல்லை. லாப நஷ்டம் எதையும் பெறுவதும் இல்லை. இந்த உண்மையை அறிவது மாயையாகிய வெள்ளத்தில் இருந்து தப்புவதற் குரிய கருவியாகும். இந்த அறிவு செயலிலிருந்து ஆத்மாவை விடுதலை செய்கின்றது. செயல் என்பது பரப் பிரம்மத்தில் இருந்து தோன்றுவதாகும். இதை அறிந்த ஆத்மா தாமரை மலரில் இருக்கும் பனித்துளிபோல் மிகப் பரிசுத்த மானது. இந்த ஞானம் பெற்றவன் எல்லாப் பொருளிலும் தன்னையும், தன்னில் எல்லாப் பொருளையும் காண்கிறான். விஷ்ணுவை நான்கு வகைப்பட்ட மனிதர்கள் வணங்குகிறார்கள். துன்பத்தினால் நைந்து போனவர்கள் முதல் நிலையினர்; பொருட் செல்வம் தேடுபவர் இரண்டாவது வகையினர். மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டவர்கள். நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை அறிந்தவர்கள்.
பரப் பிரம்மம் மிக அல்பமான புல்லினிடத்தும், பேராற்றலும் தூய்மையும் படைத்த ஞானிகளிடத்தும் கலந்து நிற்கிறது. உடம்போடு சேர்ந்த பொறிபுலன்கள் பயனற்றவை. உலகப் பொருள்களோடு தொடர்பை உண்டாக்கவே இவை பயன்படுகின்றன. பரப் பிரம்மம் பொறிபுலன்களைக் கடந்து நிற்பது. அதற்கென்று சில இயல்புகள் உண்டு என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். பரப் பிரம்மமே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது. எல்லையற்ற பேராற்றலே பிரம்ம சொரூபம் ஆகும். ஒருசிலர் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒற்றுமையை தியானத்தில் அறிகின்றனர். ஒருசிலர் நல்ல செய்கைகளின் மூலம் பரமாத்மாவை அறிகின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 23 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இல்லை, பரப்