அக்னி புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
சுக்கிலபட்சம், ஒன்பதாம் நாள் வருவது நவமி திதி. அது அஸ்வினி மாதத்தில் வரும்பொழுது, கெளரி தேவியை வணங்கி விரதம் இருப்பதற்கு மிகச் சிறந்த நாளாகும்.
பத்தாம் நாள், சுக்கிலபட்சம் தசமி திதியில் விரதம் இருந்தால் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ முடியும். பதினோராம் நாள் ஏகாதசி திதி. விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த நாளாகும். ஏகாதசி விரதம் இருப்போருக்குக் குழந்தைப் பேறும், பொருட்களும் கிடைக்கும்.
பன்னிரண்டாம் நாள், சுக்கிலபட்சம் துவாதசி திதி எனப்படும். ஆவணி மாதத்தில் வரும் துவாதசி மாடு, கன்றுகளை வழிபடுவதற்கும், சித்திரையில் வரும் துவாதசி மன்மதனை வணங்கவும் சிறந்த நாளாகும். வருடம் முழுதும் துவாதசி விரதம் இருந்தால் ஒருவர் நரகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அதிலும், ஆவணி மாதம், சுக்கிலபட்சம் துவாதசி அன்று திருவோண நட்சத்திரத்தில் விரதம் இருந்தால், புண்ணிய நதிகளில் நீராடினால் கிடைக்கும் புண்ணியத்தை விட அதிகமாகக் கிடைக்கும். புதன் கோளும் அச்சமயத்தில் இருந்தால், கிடைக்கும் புண்ணியம் இரட்டிப்பாகும்.
பதின்மூன்றாம் நாள், சுக்கிலபட்சம் அனுஷ்டிக்கப்படுவது திரயோதசி விரதம். மன்மதன், இவ்விரதம் இருந்து சிவபெருமானை வேண்டியதாகக் கூறப்படுகிறது. இத்திதியில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் மிக்க சிறப்புகளைப் பெற்று வாழ முடியும். இந்திரனும், இத்திதியில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில், சுக்கிலபட்சம் பதினான்காம் நாள் கடைப்பிடிப்பது சதுர்த்தசி விரதம். இச்சமயத்தில் விரதம் இருந்து, தான, தருமங்கள் செய்து சுவர்க்கத்தை அடைய முடியும். மகா, பால்குண மாதங்களில், கிருஷ்ணபட்சம் பதினான்காம் நாள் வரும் சதுர்த்தசி சிவராத்திரி எனப்படும். இவ்விரதம் இருப்போர், உண்ணாநோன்பு இருந்து, இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவராத்திரி அன்று உறங்காமல் விரதம் இருப்போரின் பாவங்கள் அனைத்தும் தொலைக்கப்படும்.
காயத்ரி மந்திரம்
ஒவ்வொரு மனிதனுடைய உடம்பிலும், ஆணாயினும், பெண்ணாயினும் பல நூறு நரம்புகள் உள்ளன. அவற்றுள் 10 நரம்புகள் மிக மிக முக்கியமானவை. அவையாவன: இட, பிங்கல, சுஷீமுனா, காந்தாரி, ஹஸ்திஜிஷவா, பிரித, யஷ, அலம்புஷா, ஹீஹீ, சங்கினி என்பனவாம். இந்த நரம்புகளே உயிர் உடம்பிலிருக்க உதவுகின்றன. இழுத்து விடும் மூச்சுக் காற்று பிராணவாயு எனப்படும். இந்தப் பிராணவாயு அல்லாமல், அபான, சமான, உதான, வியான, நாக, கூர்ம, கிரிகர, தேவதத்தா, தனஞ்செயா என்ற ஒன்பது வகை வாயுக்களும் உடலில் இயங்குகின்றன. சிவனாலும் விஷ்ணுவாலும் கூட வணங்கப்படுபவள் காயத்ரி. இந்த தேவி எங்கும் நிறைந் திருக்கிறாள். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அன்ன வடிவாக இருக்கிறாள். ஒருவர் இந்த மந்திரத்தை ஏழு தடவை கூறினால், அவர்கள் பாவம் தொலைந்துவிடும். பத்து முறை கூறினால், சுவர்க்கம் செல்லலாம். நூற்றி எட்டு முறை கூறினால், பிறப்பினின்று விடுபடலாம். 'ஓம்' என்ற பிரணவத்துடன் இம்மந்திரத்தைத் தொடங்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 15 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விரதம், நாள், சுக்கிலபட்சம், இருந்து, துவாதசி, இருந்தால், கிடைக்கும், சிவபெருமானை, கூறினால், வரும், முடியும், திதி, மாதத்தில், நாளாகும், எனப்படும்