அக்னி புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
அரசனின் தலையாய கடமை, நாட்டின் பகைவர்களை வெல்லுதலும், தன் நாட்டு மக்களை நன்கு காப்பாற்றுவதும், நாட்டிற்கு வளம் சேர்த்தலும் ஆகும். அவனுடைய எல்லைக்குள் இருக்கும் தவசிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், அவர்கள் தவம் நன்கு நடைபெறப் பாதுகாப்பும் உதவியும் செய்யவேண்டும். அரசனுடைய அமைச்சர்கள் அறிவுக்கூர்மை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அவன் மனைவி அறநெறி பிறழாதவளாக இருத்தல் வேண்டும். ஒர் அரசன் இறந்தால், அமைச்சர்களும் புரோகிதர்களும் காலத்தை விரயம் செய்யாமல் அடுத்த அரசனுக்கு முடிசூட்ட வேண்டும். ஒரு நாடு அரசனில்லாமல் இருப்பது நினைக்க முடியாத ஒன்றாகும்.
முடி சூட்டப்பட வேண்டிய மன்னன், அந்நிகழ்ச்சிக்கு முன்னர் மண் குளியல் செய்யவேண்டும். ஒவ்வொரு உறுப்புக்கும் குறிக்கப்பட்ட முறையில், குறிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, குறிக்கப்பட்ட உறுப்பிற்குப் பூசுதல் வேண்டும்.
மலை உச்சியிலிருந்து எடுத்த மண்ணைக் காதுகளுக்கும், கிருஷ்ணன் கோயிலின் மண்ணை முகத்திற்கும், இந்திரன் கோயில் மண்ணை முதுகுக்கும், அரண்மனை மண்ணை நெஞ்சிற்கும், யானை தந்தத்தால் தோண்டிய மண்ணை வலக் கைக்கும், காளை மாட்டின் கொம்பு கிளறிய மண்ணை இடக் கரத்திற்கும், ஆற்றில் இருந்து எடுத்த மண்ணைப் பக்கங்களிலும், யாக குண்டத்தின் மண்ணைத் தொடைக்கும், மாட்டுக் கொட்டடியின் மண்ணைப் பாதத்திற்கும் பூசவேண்டும். மன்னன் இம்முறையில் மண் குளியல் செய்த பிறகு, பட்டாபிஷேகம் செய்து கொள்ளத் தகுதியுடையவனாகிறான். நான்கு வகைப்பட்ட அமைச்சர்கள் அபிஷேகம் செய்து வைப்பர். பிராமண அமைச்சர்கள் தங்கப் பாத்திரத்தில் காய்ச்சிய நெய்யினை ஏந்திக் கிழக்குத் திசையிலும், சத்திரிய அமைச்சர்கள் இனிப்புக் கலந்த தயிரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தெற்குத் திசையிலும், மேற்குப் புறத்தில் வைசிய அமைச்சர்கள் தாமிரப் பாத்திரத்தில் தயிரை வைத்துக் கொண்டு நிற்பார்கள். வடக்குப் புறத்தில் சூத்திர அமைச்சர்கள் எல்லா ஜீவநதிகளில் இருந்தும் கொண்டு வந்த நீரை அரசர் முடியில் ஊற்றுவார்கள். இந்தச் சடங்குகள் முடிந்த பிறகே அவன் உண்மையாகவே அரசனாவான். தீயினை வலம் வந்து, தன் குருவின் பாதத்தினைத் தொட்டு வணங்கித் தன்னுடைய படைகளுடன் யானை அல்லது குதிரை மீது அமர்ந்து வீதியில் வலம் வரவேண்டும்.
அரச பதவி ஏற்றுக் கொண்டபின், பல பதவிகளில் தக்கவர்களை நியமிக்க வேண்டும். ஒரு சத்ரியனோ பிராமணனோ படைத்தலைவனாக நியமிக்கப்பட வேண்டும். கடிதம் எடுத்துச் செல்பவன் வலுவான உடம்புடையவனாகவும், ரத சாரதிகள் குதிரைகளின் இயல்பைத் தெரிந்த வனாகவும், கருவூல அதிகாரி வைரம் முதலிய கற்களின் தன்மையை நன்கு அறிந்திருக்க வேண்டும். மருத்துவன், யானைகளின் கண்காணிப்பாளன் ஒருவன், குதிரைகளின் கண்காணிப்பாளன் ஒருவன், அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனைப் பெண்களைக் கவனித்துக் கொள்ள ஒர் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் அதற்குரிய தகுதியும், அதில் விருப்பமும் உள்ளவனையே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகள், அரசனுக்கு விசுவாசம் உடையவர்களாய் இருப்பதுடன் அவன் கட்டளைகளை மீறாமல் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும். இந்த அதிகாரிகள் பொது இடங்களில் மகிழ்ச்சி தரும் விஷயங்களையே அரசனுக்குச் சொல்ல வேண்டும். விரும்பத் தகாத கசப்பான விஷயங்களைச் சொல்ல வேண்டுமானால், அரசனைத் தனியே சந்தித்துக் கூறவேண்டும். அரசப் பணியில் ஈடுபட்டவர்கள் திருடர்களாகவோ, அரசனை அவமதிப்பவர் களாகவோ இருக்கக் கூடாது. அரசனைப் போல் உடை அணியவும் கூடாது. அரசனிடம் அதிகமாக நெருங்கவும் கூடாது. தாங்கள் அறிந்த ரகசியங்களை வெளியிடக் கூடாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 16 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், மண்ணை, அமைச்சர்கள், கூடாது, அதிகாரி, கொண்டு, ஒருவன், குறிக்கப்பட்ட, இருத்தல், அவன், நன்கு, பாத்திரத்தில்