புதுக் கவிதைகள் - கிழமைகள் கிழிக்கப்படுகின்றன
- சரவணக்குமார் தணியாத மோகம் தனிமையில்... அசைபோட ஆரம்பித்துவிட்டேன் நினைவுத் தளைகளை... அகழ்வாராய்ச்சியில் இறங்கி விட்டேன் புதைந்து போன நினைவுகளோடு காணாமல் போன கனவுகளையும் தேடுகிறேன்... மூக்குக் கண்ணாடி... செய்தித் தாள்... கைத்தடி... சாய்ந்த நாற்காலி தூக்கம்... டீக்கடை... பொடி நடை... இவைகள் மீது... ஆசை அப்பிக்கொண்டது! ஐய்யகோ என்னை முதுமை நோய் பீடித்துக் கொண்டதோ...! தேய்ந்தது செக்க... ஓடி களைத்தது கடிகாரமுள்... மண்ணை நெருங்கிவிட்டது மழைத்துளி... தீபத்தில் திரியின் சுடர் எண்ணெயை நெருக்கிக் கொண்டது... நதியில் மணல் பரப்பு தெரிய தொடங்கிவிட்டது... வாழை குலை தள்ளியது... பால் பூத் ரேசன் கடை இன்னும் பிற வரிசைத் திருவிழாவிற்கு சிபாரிசு செய்யப்படுகிறேன்... ஆம் அறுபது வளையங்கள் தாண்டிய தென்னையானேன்... திண்ணை காக்கும் ஐய்யனாரானேன்... மாதம் ஒரு முறை மரியாதை பலமாயிருக்கும் என்று என் பென்சன் கவருக்குள் சிறைபட்டு வந்திடுவாள் காகித லட்சுமி... பாரங்களை கரையேற்றிய கப்பலா தண்ணீரில்! நானும் இப்படித்தான் கொஞ்சம் பாதுகாப்புடன். நங்கூரம் பாய்ச்சப்பட்டது- "முதியோர் இல்லத்தில்"... நான், நான் விரும்பிய பள்ளியில் சேர்த்ததாலோ என்னவோ அவர்கள், அவர்கள் விரும்பிய இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள்... பசி தெரியாமல் வளர்த்தேன் பாவி! அப்படியே செய்துவிட்டேன் பாசத்தையும்... "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" உண்மைதான் அவர்கள் நாவுதான் என்னை வெளியே விரட்டியது... ஐந்தில் வளைந்தது தப்பாகிவிட்டது இன்றும் வளைந்தே இருக்க நேர்ந்து விட்டது... உடை அலங்காரம் நாகரிகம் நன்றாகச் சொல்லித் தந்தேன் உறவுகளின் உன்னதம் ஓரளவு கூட கற்றுத்தர மறந்துவிட்டேன்... வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல வாழ்க்கையையே இழந்தவர்களும் வெள்ளை ஆடைகள் அணிவதுண்டு... கோவில் மணி கொலுசு மணியாய் சிறுத்துவிட்டது... புலி பசித்தால் புல்லைத் தின்னும் முதுமையென்னும் மரண யாத்திரை செல்லநேர்ந்தால்... வெள்ளை ஆடைகள் அணிந்து கொண்டு பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சூசகமான சமாதானம் சொல்லிப் பிழைத்துக் கொள்வேன்... நான் வேலைக்குச் செல்லும் நாட்களில் தெருவிளக்கும் வளைந்து வணக்கம் சொன்னது இன்று காக்கையும் கண்டுகொள்ளவில்லை... வாழையிலையாய் வாய்த்துவிட்டது என் வாழ்க்கை படையல் முடிந்ததும் எச்சில் தொட்டியில் என் உறவு... இந்த தொடர்கதை இறுதி வாரத்திற்கு வந்துவிட்டது! அடுத்தவொரு பிறப்பிருந்தால் முதுமைக்கு முன்பே முடிந்து போகட்டும் பிச்சை கேட்பேன் பிரம்மனிடம்... வாழ்க்கை முழு "நாள்" விடியல்:- பிறப்பு அதிகாலை :- மழலை அந்தி மாலை :- முதுமை இடைப்பட்ட பொழுது :- இளமை இருளை நெருங்கி விட்டது இந்த 'கிழ'மை அரசின் சட்டம் ஒன்று புதிதாய் பிறக்கட்டும் இப்படி "கருணைக் கொலை அவதியுறும் மிருகங்களுடன் ஆதரவற்ற முதியோர்களுக்கும் இலவசமாய் வழங்கப்படும் என்று" ... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிழமைகள் கிழிக்கப்படுகின்றன - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - ", நான்