புதுக் கவிதைகள் - என்னருகே நீ வேண்டும்!
- ஞா. குருசாமி - செந்தமிழ் கல்லூரி நந்தமிழ் நாயகியே! நன்மலர்க் காதலியே! வந்தனம் கூறி வணங்குகிறேன்! சந்தனத்தில் தொட்டு வளர்த்து தொலைத்தநம் காதலுக்குக் கட்டுகிறேன் இங்கே கவி! இதயம் இழந்து இளையவளே இங்கே உதயமாகாச் சூரியனாய் உள்ளேன்! - முதல்நிலவே! உன்னுடைய எண்ணமே உள்ளம் முழுவதும் குன்றாய் உளதே குவிந்து! இல்லாத கற்பனையில் எந்தன் எலும்புருக நல்ல கவியால் நவில்கின்றேன்! - அல்லியே! எத்தனை நாட்கள்தான் இப்படியே வாழ்வது? வித்தகமே! வாயேன் விரைந்து! என்ன நடந்தாலும் ஏனென்று கேட்காமல் உன்னை நினைத்தே உறங்குகின்றேன்! - அன்பே! உடல்பொருள் ஆவியெல்லாம் உன்னோடு செல்லக் கிடந்து புலம்புவதைக் கேள்! போத்திப் படுத்திருந்த போர்வைகூட உன்பெயரை ஏத்திக் தொழுகிறது என்வீட்டில்! - பூத்துக் குலுங்கும் குவளைக் கொடியும் உயிரே! அலுத்துத் துயில்தே அயர்ந்து! உயிரிலே பின்னி உறவில் கலந்து பயிர்போல வாழ்ந்தோமே பாவி! - தயிர்திரிந்து கெட்டதுபோல் நம்காதல் கெட்டழிந்து மண்மீது சட்டென மாண்டதே சாய்ந்து! எரிந்த மெழுகாய் இதயம் உருகிப் பிரிவை நினைத்துப் பிதற்ற - கரித்துண்டாய் ஆனதடி நெஞ்சு; அதிலே நெருப்பிட்டுப் போனதடி காலப் புயல்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்னருகே நீ வேண்டும்! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -