புதுக் கவிதைகள் - இளைஞர்கள்
- அரவிந்த் கற்பனை உலகின் கதாநாயகனாய் கனவு காணும் இளைஞனே! விழித்தெழு! கொஞ்சம் விழித்துப் பார்! உன்னைச் சுற்றி, சாதியென்னும் சாக்கடைச் சடுதி..... கொஞ்சம் விழித்துப் பார்! உன்னைச் சுற்றி, மதங்களின் மாயை மதம்பிடித்தபடி.... கொஞ்சம் விழித்துப் பார்! உன்னைச் சுற்றி, குண்டுகளின் கொடூரங்கள் திட்டுத்திட்டாய்...... கொஞ்சம் விழித்து பார்! உன்னைச் சுற்றி, வறுமையின் கோடுகள் வரிவரியாய்...... கொஞ்சம் விழித்துப் பார்! உன்னைச் சுற்றி, வெள்ளை உடுப்பில் கருப்பு ஊழல்கள்.. கொஞ்சம் விழித்துப் பார்! உன்னைச் சுற்றி, வேலை தேடுவதே வேலையாகப் பலர்..... விழித்தெழு நண்பா! மதில் மேல் உட்கார்ந்து கொண்டு மையல் பேசுவதை விட்டுவிட்டு மனிதம் பேசு! மகாத்மாவாக மாறாவிட்டாலும் பரவாயில்லை மனிதனாக மாறு! தோற்றத்திலில்லை நண்பா இளைஞர்தனம்! செயலாற்றத்தில்தான் இருக்கிறது! நன்மைக்கு நிழலாய் இருங்கள்! தீமைக்கு நெருப்பாய்ச் சுடுங்கள்! தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே! கதிரவனைப் பார்! மாலையில் மங்கலாய் மறைந்தாலும் மறுநாள் காலையில் மலராமலா இருக்கிறது? விழித்தெழு நண்பா! மீன்குஞ்சு நீந்துவதற்கு துணையையா தேடுகிறது? கடலலை சீறிஎழ காலத்தையா எதிர்பார்க்கிறது? மின்மினிப் பூச்சி மின்னுவதற்கு மின்சாரமா கேட்கிறது? நீ மட்டும் ஏன்?.... நிர்ப்பந்தத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாய்? புறப்படு நண்பா! குயவனாய் மாறி உருவாக்கு பழுதற்ற உலகத்தை புகழ்பெற உருவாக்கு புதிய உலகத்தை! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளைஞர்கள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - பார், சுற்றி, உன்னைச், கொஞ்சம், விழித்துப், நண்பா, விழித்தெழு