சேர மன்னர் வரலாறு - பல்யானைச் செல்கெழு குட்டுவன்
குட நாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக் குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாய் இருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும் மணல் பரந்த நாட்டுக்குப் பூழி நாடு என்று அந் நாளில் பெயர் வழங்கிற்று[1]. அந் நாட்டவர் பூழியர் எனப்படுவர். பூழி நாட்டவர் தமக்கு அம்மையில் நிற்கும் தென்மலைக் காட்டில் வாழும் யானைகளைப் பிடித்துப் பற்றுவதில் தலைசிறந்தவர். அவர்கள் குட்டநாட்டுக் குட்டுவரது ஆட்சியின் கீழிருந்து அவர்கட்குப் பெருந் துணை புரிந்தனர். அதனால் குட்டுவன் படையில் ஏனைப் படைவகை பலவற்றிலும் யானைப்படையே சிறந்திருந்தது. அச் சிறப்புப் பற்றிக் குட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று சான்றோர் வழங்கும் சால்பு பெற்றான்.
குட்ட நாட்டின் வட பகுதிக்கு நேர் கிழக்கில் நிற்கும் வடமலைத் தொடரின் மலைமிசைப் பகுதிக்குப் பாயல் நாடு என்பது அந் நாளில் வழங்கிய பெயர். அப் பாயல் நாட்டின் கீழ்ப் பகுதியில் இப்போது நும்பற்காடு என வழங்கும் உம்பற்காட்டில் குறுநிலத் தலைவர் சிலர் வாழ்ந்துவந்தனர். வடக்கே இமய வரம்பனது புகழ் மிகுவது கண்டு, அவர்கள் பொறாமை மிகுந்து குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். அக் காலத்தே இப்போது ஆணைமலைத் தொடர் என வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர் உம்பற்காட்டுக் குறுநிலத் தலைவரது குறும்பு அவர் கட்கும் இடுக்கண் விளைத்து வந்தது.
உம்பற்காட்டின் வட பகுதியில் அகப்பா என்பது அதற்குத் தலையிடமாக இருந்தது. உம்பற்காட்டு வேந்தர் அகப்பாவில் இருந்து கொண்டு குட்டுவனுக்கு மாறுபட் டொழுகினர். இமயவரம்பன் வடவாரியரோடும் கடற்கடம்பரோடும் போரிட்டு ஒழிக்க வேண்டியிருந் தமையால், குட்டுவனே போர் மேற்கொண்டு உம்பற் காட்டுக் குறும்பரை வலியழிக்க வேண்டியவனானான். உம்பற்காட்டுக்குத் தலைநகரான அகப்பா, இப்போது குறும்பர்நாடு வட்டத்திலுள்ள மீப்பா யூர்க்குக் கிழக்கில் இருந்திருக்குமெனக் கருதப்படுகிறது. இப் பகுதி இடைக் காலத்தே பாமலை நாடு என்றும் பாநாடு என்றும் வழங்கியிருந்து, பாயூர் மலைநாடென்று பின்னர் விளங்கிற்று. குறும்பர் நாடு வட்டத்தில் பாயூர் மலைநாடு ஒரு பகுதியாகவே இன்றும் உள்ளது. இப் பகுதியை மேலை நாட்டு யவனர் குறிப்பு பம்மலா (Bamnnala) என்று குறிக்கின்றது. இது வடக்கில் சிறைக்கல் வட்டம் வரையில் பரந்திருந்தது. அப் பகுதியில் இப்போது இரண்டு தரா நாடு எனப்படும் பகுதிக்குப் பழம் பெயர் பாநாடு என்று வழங்கின்று எனச் சிறைக்கல் வரலாற்றுக் குறிப்பில் வில்லியம் லோகன் என்பாரும் உரைக்கின்றார்.
அந் நாளில் அகப்பா என்னும் நகரம் உயரிய மதிலும் பெருங்காடும் அரணாகக் கொண்டு சிறந்து விளங்கிற்று. மிகப் பலவாய்த் திரண்ட யானைப் படையும் பிற படைகளும் உடன்வர , குட்டுவன் உம்பற் காட்டிற்குட் புகுந்தான். அவனது படைப் பெருமை அறியாது எதிர்த்த குறுநிலத் தலைவர் எளிதில் அவன் படைக்குத் தோற்றனர். அவர்களுட் பலர் குட்டுவன் அருள் வேண்டிப் பணிந்து திறை தந்து அவன் ஆணைவழி நிற்பாராயினர். ஆங்கு வாழ்ந்த முதியர் அவனுக்குப் பெருந்துணை புரிந்தனர். உம்பற் காட்டில் சேரரது ஆட்சி நடைபெறுவதாயிற்று.
உம்பற்காட்டைத் தன் குடைக்கீழ்க் கொணர்ந்து நிறுத்திச் சிறந்த குட்டுவற்கு அந் நாட்டுக் குறுநிலத் தலைவரும் முதியரும் துணைபுரிய, அவன் அதற்கு வடபாலில் உள்ள அகப்பா நோக்கிச் சென்றான். அகப்பாவிலிருந்து பகை செய்தொழுகிய வேந்தர் கடும்போர் உடற்றினர். குட்டுவன் உழிஞை சூடிச் சென்று அகப்பாவின் கடிமிளையும் கிடங்கும் நெடுமதிலும் பதணமும் சீர்குலைந்து அழியக் கெடுத்துப் பகை புரிந்தொழுகிய தலைவர் பலரைக் கொன்று வெற்றி கொண்டான். நாட்டின் பல பகுதிகள் குட்டுவன் படைத் திரளால் அழிவுற்றன. ஊர்கள் தீக்கிரையாயின்; அகப்பா நகரும் சீர்குலைந்தது. முடிவில் குட்டுவன், அப் பகுதியை முதியர் காவலில் வைத்துத் தன் கோற் கீழிருந்து ஆட்சி புரியுமாறு ஏற்பாடு செய்தான். இதனை மூன்றாம்பத்தின் பதிகம்,
“உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து” |
என்று குறிக்கின்றது.
இவ் வண்ணம் வென்றி மேம்பாட்டுச் சிறந்த குட்டுவன், வாகை சூடித் தன் நாடு திரும்பிப் போந்து, தான் பெற்ற வெற்றிக்காகப் பெருஞ்சோற்று விழாவைச் செய்தான், அப்போது சான்றோர் பலர் வந்தனர். குட்டுவனது அரசியற் சுற்றத்தாருள் நெடும்பாரதாயனார் என்ற சான்றோர் ஒருவர், அவ்வப்போது அவனுக்கு அரசியலறிவு நல்கி வந்தார். அவர் சிறந்த நல்லிசைப் புலமையும் உயர்ந்த கேள்வி நலமும் உடையவர். அவர் அவ் விழாவினை முன்னின்று நடத்தினார். அப்போது கோதமனார் என்னும் மற்றொரு சான்றோர் குட்டுவன்பால் வந்தார்.
- ↑ 1. Madras Manual Vo.iii.p. 283.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்யானைச் செல்கெழு குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - குட்டுவன், நாடு, அகப்பா, பகுதியில், சான்றோர், இப்போது, குறுநிலத், ஆட்சி, குட்ட, அவர், அவன், சிறந்த, முதியர், உம்பற், நாட்டின், நாளில், கிழக்கில், பெயர், வழங்கும், இருந்து, தலைவர்