விஷ்ணு புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நிடகாவைக் காண வந்தான் ரிபு. ஊருக்கு வெளியே புல்லைத் தின்று கொண்டு, மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட நிடகா மற்றவர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வந்தான். பரமாத்மாவினின்று வேறுபட்டது எதுவுமில்லை என்ற உண்மையான ஞானத்தை போதித்து விடை பெற்றான் ரிபு.
இக்கதையைக் கூறிய பரதன், ஒர் அரசன் அறிந்து கொள்ளவேண்டிய ஞானம் இதுவே. மேகம் ஒன்றேயாயினும் சில சமயம் நீலமாகவும், சில சமயம் வெள்ளையாகவும் தோன்றுகிறது. அதுபோல் மாயையின் வசப்பட்டவர்கள் ஆத்மாவை வேறு வேறு என நினைக்கின்றனர். உண்மையில் ஆத்மா என்பது ஒன்றுதான். ஆத்மாவைத் தவிர உலகில் வேறு எதுவுமில்லை, நாம் அனைவரும் இந்த ஆன்மாவின் பிரிவுகளே என்று கூறினான்.
வேதவியாசர் பலர்
ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வேதவியாசராக உருவெடுக்கிறார். உருவெடுத்த பின்பு வேதங்களை வகைப் படுத்துகிறார். வைவஸ்வத மன்வந்திரங்களாகிய இந்தக் கால கட்டத்தில் வேதவியாசர் வேதங்களை 28 முறை வகைப்படுத்தி விட்டார். இதுவரை தோன்றியுள்ள வேதவியாசர்கள் இருபத்தெட்டு பேர் ஆவர். அவர்கள் சுவயம்பு வேதவியாசர், பிரஜாபதி வேதவியாசர், பிருஹஸ்பதி வேதவியாசர், மிருத்யு வேதவியாசர், பரத்வாஜ வேதவியாசர், கிருஷ்ண துவை பாயன வேதவியாசர் முதலானோர். விஷ்ணு புராணத்தின் படி வரப்போகும் வேதவியாசர் துரோணரின் மகனாகிய அசுவத்தாமன் ஆவார். அவர் சிரஞ்சீவி ஆவார்.
'ஓம்' என்ற பிரணவம் நான்கு வேதங்களின் சாரம் எனப்படும். பரப் பிரம்மம் எங்கும், எப்பொழுதும் எப் பொருளிலும் நிறைந்திருந்தாலும் காண்பவர்க்குரிய மன வளர்ச்சி, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பல வடிவ மாகத் தெரிபவர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் 1 இலட்சம் பாடல்கள் உள்ளன. கிருஷ்ண துவைபாயன வேதவியாசர் இந்த வேதங்களைப் பிரிக்க வேண்டுமென்று முடிவு செய்தவுடன் அவரைச் சுற்றி நான்கு முக்கியமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். பைலா என்பவருக்கு ரிக் வேதமும், வைசம்பாயனருக்கு யஜுர் வேதமும், ஜைமினிக்குச் சாமமும், சுமந்துவிற்கு அதர்வணமும் கற்பிக்கப்பட்டன. கிருஷ்ண துவைபாயன வியாசர் உரோமஹர்ஷனருக்குப் புராணங்களைக் கற்பித்தார்.
யாக்ஞவல்கியர் கதை
முன்னொரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர். பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருப்பதால் யாரும் இக்கூட்டத்திற்கு வராமல் இருந்துவிடக் கூடாது. அப்படி வராமல் இருந்துவிட்டால், எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சேரும் என்று ரிஷிகள் அறிவித்தனர். என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷி இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை. யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜுர் வேதத்தை இருபத்தி ஏழு பங்காகப் பிரித்து அவர் கற்றுத் தந்திருந்தார். கூட்டத்திற்கு வராத காரணத்தால் எட்டாம் நாள் வைசம்பா யனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலைமேல் காலை வைத்து அவரைக் கொன்றுவிட்டார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து இந்த தோஷம் என்னை விட்டுப் போவதற்கு ஒரு யாகம் செய்யவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டார். இக் கட்டளையைக் கேட்டவுடன் அந்த இருபத்து ஏழுபேரில் ஒருவராகிய யாக்ஞவல்கியர் எழுந்து "சுவாமி, யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது. நானே இதைச் செய்து முடிக்கிறேன்” என்று கூறினார். இதுகேட்ட வைசம்பாயனர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 7 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேதவியாசர், யஜுர், யாக்ஞவல்கியர், நான்கு, அவர், கிருஷ்ண, வேறு