வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 39
ஆயினும் எல்லோருடைய மதிப்புக்கும் பாத்திரமான கிழவியாகியிருக்கிறாள். அவள் தலைமை வகித்திருந்த அந்த 20 வருஷங்களில் வளர்ந்து வரும் இந்தச்சமூகத்தின் க்ஷேமத்திற்காக வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாள். பல யுத்தங்களை நடத்தி இருக்கிறாள். இந்தச் சண்டைகளில் சிலரை இழந்தது வாஸ்தவம். ஆனால் ஒவ்வொரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றியையே கண்டிருக்கிறாள் - இப்போது இந்தச் சமூகத்துக்குத் தேவைக்குப் போதுமான பெரிய வனமிருக்கிறது. இவைகள் யாவும் பகவானுடைய கிருபையால் கிடைத்ததாகவே நினைப்பாள். இருந்தாலும் கல்லிலே மோதிக் கொன்றாளே, அந்தக் குழந்தைகள் - பால் மணமே மாறாத பாலகர்கள் - அடிக்கடி - அவளுடைய நித்திரையைப் பங்கப்படுத்தி விடுகின்றனர்.
பனிக் காலம்; மாதக் கணக்காகத் தொடர்ந்து பெய்யும் பனியினால், வால்கா நதி உறைந்து ஒரே பனித் தகடாய்க் காட்சியளிக்கிறது. அந்த வனாந்திரத்திலுள்ள மரங்கள் இலைகளையும்கூட இழந்து நிற்கின்றன. புல் பூண்டுகள் புதர்கள் யாவும் பனி மயம். நிஷா-சமூகத்திலே ஜனத்தொகை முன்னைவிடப் பெருகி விட்டது. ஆகவே அவர்களுக்கு ஆகாரப் பொருள்களும் அதிக அளவில் தேவையல்லவா? ஆனால் ஜனங்களின் பெருக்கத்துக்குத் தக்கபடி உழைக்கும் கைகளும் அதிகரிக்கின்றன. கிடைக்கும் பொழுது உணவை
நிறைய சேகரிப்பதில் சிரமம் எதுவும் இல்லை. குளிர்காலத்தில் வேட்டை நாய்களின் உதவியால் எப்படியாவது வேட்டை மிருகங்கள் கிடைத்து விடுகின்றன. பனி ஆரம்பித்தவுடனே இந்த வனத்திலுள்ள விலங்குகள் அடுத்த பிரதேசத்திற்கு-பனியில்லா பிரதேசத்திற்குப் போய்விடுவது வழக்கம். ஆனால், நிஷா-சமூகத்தாருக்கு இப்போது ஒரு புதுமுறை தென்பட்டது. இந்த வனத்திலுள்ள புல் பூண்டுகளின் விதைகள், பூமியில் உதிர்ந்து மறுபடியும் முளைப்பதைப் பார்த்த இவர்கள், விதைகளைக் கூட்டிச் சேர்த்து அவற்றை ஈரமான நிலங்களிலே தூவி விட்டனர். அவை முளைத்துப் பசுமையாக வளர்ந்திருந்தன. பசுமையைக் கண்ட மிருகங்கள் இன்னும் கொஞ்ச நாள் அதிகமாக இந்த வனத்தில் தாமதித்தன.
ஒரு நாள் துருவனுடைய நாய் ஒரு முயலைப் பின் தொடர்ந்தது. துருவனும் தன்னுடைய நாய்க்குப் பின் வேகமாக ஓடினான். வியர்வை வடிய ஆரம்பித்தது. தன்னுடைய தோல் கவசத்தை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு ஓடினான். எவ்வளவுதான் வேகமாக ஓடியும் அவனால் அவனுடைய நாயைத் தொடர முடியவில்லை. பனி படர்ந்திருப்பதால் நாயினுடைய அடிச்சுவடு பூமியில் தெரிகிறது. ஆனால் நாயைக் காணவில்லை. வியர்த்துக் களைத்து விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மீது சிறிதே உட்கார்ந்தான். வியர்வைகூடப் பூரணமாக அடங்கவில்லை. அதற்குள் அவனுடைய நாய் குரைப்பது கேட்டது. வேகமாக அந்தச் சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். நாய் நின்ற இடத்தை அவன் நெருங்கியதும் ஓர் அழகிய யுவதி
தேவதாரு மரத்தில் சாய்ந்துகொண்டு நிற்பதைக் கண்டான். அவளுடைய மார்பகத்தை வெண்மையான தோல் கவசம் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவளுடைய வெள்ளைத் தோல் தொப்பிக்குள்ளிருந்து பொன்னிறமான கேசங்கள் வெளிவந்து பிடரியில் புரண்டன. அவளுடைய காலடியிலே அந்த முயல் குட்டி இறந்து கிடந்தது. துருவனைப் பார்த்த அவனுடைய நாய்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவளுடைய, நாய், ஆனால், தோல், அவனுடைய, ஓடினான், வேகமாக, இந்த, அந்த - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்